
மருந்தில் கலப்படம் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து மரியான் பயோடெக் நிறுவனத்தின் மருந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் இருந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியது. அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள 'மரியான் பயோடெக்' நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்ததால் தான் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, 'Dok 1 Max Syrup' என்ற அந்த இருமல் மருந்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. மேலும், மரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சென்று 'Dok 1 Max Syrup' மருந்தை ஆய்வுக்கு அனுப்பினர். அதன் முடிவில் மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, Dok-1 Max மருந்து உட்பட அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.