Skip to main content

மணிப்பூர் முதல் மும்பை வரை; மீண்டும் நடைபயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி!

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Manipur to Mumbai; Rahul Gandhi will start the solidarity journey again!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய 'இந்திய ஒற்றுமை பயணம்' 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடக்க விழாவில் ராகுல் காந்தியிடம் தேசியக் கொடியைக் கொடுத்து இந்திய ஒற்றுமை பயணத்தைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "இந்தியாவின் மிகப் பழமையான கட்சி நாட்டை அடக்குமுறையிலிருந்து விடுவிக்கும் கடினமான பணியில் இறங்கியிருக்கிறது. நம்முடைய மகத்தான குடியரசுக்கு புத்துயிர் கொடுக்கும் லட்சியத்தில் இந்த யாத்திரை வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார்.

கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வழியாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் இந்த நடைப்பயணம் நிறைவடைந்தது. இந்த நடைப்பயணத்தில் மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,  ரா (RAW) உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட பெரும் ஆளுமைகள், சாதாரண மக்கள், பல சாதனையாளர்கள், குழந்தைகள், பெரியவர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொருளாதார வல்லுநர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து தனது 2 ஆம் கட்ட நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து அறிவித்திருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் ஜனவரி மாதம் 2வது வாரத்தில் ஒற்றுமை பயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி, இந்த பயணத்தை குஜராத்தில் நிறைவு செய்கிறார் எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ (மக்கள் சந்திப்பு பயணம்) நடத்தப் போவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளதாவது, “‘பாரத் ஜோடோ யாத்ரா’வுக்கு பிறகு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி ‘பாரத் நியாய யாத்திரை’ நடத்தப்படும். மணிப்பூரில் இருந்து மும்பைக்கு சுமார் 6,200 கி.மீ தூரம் கொண்ட இந்த நீண்ட பயணம் ஜனவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு 14 மாநிலங்கள் வழியாக செல்லும். 

அதில், மணிப்பூர், நாகலாந்து, அசாம், மேகலாயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா என 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களுக்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​ராகுல் காந்தி 3 பிரச்சனைகளை எழுப்பி பேசினார். அது, பொருளாதார சமத்துவமின்மை, சமூக துருவமுனைப்பு மற்றும் அரசியல் சர்வாதிகாரம் ஆகியவையாகும். ஆனால், இந்த ‘பாரத நியாய யாத்திரை’யின் முக்கிய பிரச்சினைகளாக பொருளாதார நீதி, சமூக நீதி மற்றும் அரசியல் நீதி ஆகியவற்றை பேசவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். .

சார்ந்த செய்திகள்