Skip to main content

மணிப்பூர் செல்லும் மம்தா? - செய்தியாளர் சந்திப்பில் விளக்கம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

Mamta going to Manipur? Explanation at the press conference

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 70 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். கலவரக்காரர்களைக் கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், மணிப்பூர் மாநிலத்திற்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும், சாலை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலவரம் நடைபெற்ற இடத்தை ராணுவம் மற்றும் துணை ராணுவத்தின் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இயல்பு வாழ்க்கை தற்போது மெல்லத் திரும்பி வருகிறது.

 

கலவரத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 170க்கு விற்கப்பட்டது. ஒரு சமையல் சிலிண்டரின் விலை கள்ளச் சந்தையில் ரூ. 1800க்கு விற்கப்பட்டது. ரூ. 900க்கு விற்ற ஒரு மூட்டை அரிசி ரூ. 1800க்கு விற்கப்பட்டது. இதேபோன்று பால், முட்டை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாததால் பொதுப் போக்குவரத்திற்கு சரிவர அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் வெளியூரில் இருந்து வரும் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு மணிப்பூரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

மேலும், மீண்டும் கலவரம் ஏற்படும் என்ற பயத்தால் காய்கறிகள் கொண்டு வரும் லாரிகள் கூட மணிப்பூருக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால் ஏற்கனவே கடைகளில் கையிருப்பு உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் மல்லிகார்ஜுன கார்கே முறையிட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர்.

 

இந்நிலையில் தான் மணிப்பூர் செல்ல மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து அவர் கூறும்போது, மணிப்பூரில் உள்ள உண்மை நிலைமையை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல நான் அங்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தான் எழுதிய கடிதத்தையும் வாசித்தார், “அமைதியை விரும்பும் மணிப்பூர் மக்களைச் சந்திக்க மணிப்பூர் செல்ல உங்கள் அனுமதியைக் கோருகிறேன். நான் ஒருநாள் பயணமாகவே மணிப்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளேன். தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ராணுவம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை நான் மீற விரும்பவில்லை” என தான் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறினார்.

 

மேலும் பேசிய அவர், “மணிப்பூருக்கு மத்திய அரசின் சார்பாக அவர்கள் (அமைச்சர்கள் அல்லது அதிகாரிகள்) செல்ல வேண்டும் என பல நாட்களாக சொல்லி வருகிறேன். ஆனால் அவர்கள் களத்தில் மக்களை சந்திக்கமாட்டார்கள். மணிப்பூரில் தற்போது வரை எத்தனை பேர் இறந்துள்ளார்கள், அங்கு தற்போதைய நிலைமை எப்படி உள்ளது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மேலும் நான் கடிதம் எழுதிய பிறகு தான் அமித்ஷா மணிப்பூருக்கு சென்றுள்ளார். ” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.