Skip to main content

50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; மத்திய அரசுக்கு பறந்த 15 கடிதங்கள்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Haryana headmaster misbehave with 50 female students

 

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ளது பஞ்ச்குலா ஊராட்சி. இந்த பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக இருப்பவர் கர்த்தார் சிங். இவருக்கு 55 வயதாகிறது. இவர், கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் தலைமையாசிரியர் பணியில் உள்ளார்.

 

இந்நிலையில், கர்த்தார் சிங் தனது பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இதற்கிடையில், தலைமையாசிரியர் கொடுக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து சக ஆசிரியைகளிடம் கூறியுள்ளனர்.  ஆனால், அவர்களோ இந்த விஷயத்தை மூடி மறைக்கவே முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் இச்சம்பவம் குறித்து செப்டம்பர் 14 ஆம் தேதியில் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த 15 பள்ளி மாணவிகள் இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு 15 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.  அந்த கடிதத்தில், தங்கள் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் கர்த்தார் சிங். அவர் தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹரியானா மாநில மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது. 

 

அப்போது, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. தலைமையாசிரியர் கர்த்தார் சிங் இதுவரை 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது. அதே வேளையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் மைனர்கள். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கர்த்தார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கர்த்தார் சிங்கை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த கர்த்தார் சிங் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

 

மேலும், அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்.. தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கர்த்தார் சிங் மீது போக்சோ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து, கர்த்தார் சிங்கால் வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஹரியானா மாநிலத்தில் ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- சிவாஜி 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.