Skip to main content

"முதலீடு வேண்டும் அல்லது மூட வேண்டும்" - மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சு...

Published on 27/03/2021 | Edited on 27/03/2021

 

"disinvestment or shutting down" -  aviation minister about air india privatization

 

ஏர் இந்தியா நிறுவனத்தில் 100 சதவீதம் தனியார் முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். 

 

இந்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா, கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் சூழலில், இதன் 76 சதவீதப் பங்குகளை தனியார்மயமாக்குவதற்கான அறிவிப்பைக் கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்கள் ஏர் இந்தியாவில் முதலீடு செய்யப் போட்டியிடும் என மத்திய அரசு எதிர்பார்த்த நிலையில், பெரு நிறுவனங்கள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதனைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவுமே கைகொடுக்காத நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை முற்றிலும் தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு அறிவித்தது. 

 

இந்நிலையில், ஏர் இந்தியா தனியார்மயமாவது குறித்து இன்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், "ஏர் இந்தியா 100 சதவீதம் தனியார் முதலீட்டிற்கு மாற்றப்படும். அது தனக்கென ஒரு புதிய வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். இதனை வாங்க விரும்புபவர்கள் 64 நாட்களுக்குள் ஏலத்தில் பங்கேற்க வேண்டும். 

 

ஏர் இந்தியா 100 சதவீதம் தனியார் முதலீட்டை அனுமதிப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதில், தனியார் முதலீடு செய்யப்படுகிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. முதலீடு கிடைக்க வேண்டும் அல்லது நிறுவனம் மூடப்படவேண்டும் என்பதுதான் கவனிக்க வேண்டியது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்