சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக நாளை மார்ச் 22ஆம் தேதி மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வேண்டுகோளை அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகத்தில் நாளை பேருந்துகள் ஓடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகள் இன்று மாலை 3மணி முதல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி, "சுய ஊரடங்கான நாளை தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் உதவாது. நாளை சுய ஊரடங்கின்போது வீட்டில் இருப்பது மட்டுமல்ல, உங்களது நகரத்திலும் இருப்பது அவசியம். மக்கள் அனைவரும் மருத்துவர்கள், அதிகாரிகளின் அறிவுரைகளைக் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. கரோனா காரணமாகத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டோர் அதைக் கடைபிடித்தல் அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.