Skip to main content

6000 அடி உயரத்தில் திடீரென எதிரே வந்த விமானம்... துரிதமாக செயல்பட்ட விமானி - மம்தா பானர்ஜி பேட்டி

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

ரகத

 

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அரசியலுக்குச் சொந்தக்காரர். பாஜகவை மிகத் துணிச்சலாகத் தொடர்ந்து எதிர்த்து வரும் அவர், ஐந்து மாநில தேர்தலில்களில் உ.பி, கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். கட்சியில் பல்வேறு சிக்கல்கள் அடிக்கடி ஏற்பட்டு வரும் நிலையிலும் துணிச்சலாக அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.

 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, வாரணாசியில் இருந்து மம்தா பானர்ஜியை ஏற்றிக்கொண்டு கொல்கத்தாவிற்கு சென்ற தனி விமானம் காற்றின் வேகத்தால் நிலையற்றத் தன்மையை எதிர்கொண்டது, இதனால் விமானம் குலுங்கியதில் தனது முதுகுப்பகுதியிலும் நெஞ்சிலும் காயம் அடிபட்டதாக மம்தா கூறியிருந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, தனி விமானத்தில், சுமார் 6000 அடி உயரத்தில் பறந்தபோது அதற்கு நேர் எதிரே மற்றொரு விமானம் திடீரென வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி தன்னுடைய சாதுரியத்தால் விமானத்தை மாற்றுப் பாதையில் செலுத்தி பத்திரமாகத் தரையிறக்கினார். விமானிக்கு எவ்வித தகவலும் தெரிவிக்காமல் எப்படி ஒரு விமானம் நேர் எதிரே வர இயலும். விமானியின் முயற்சியால் நான் தற்போது பத்திரமாகத் தரையிறங்கி உள்ளேன், இதில் சிறிது தவறு நடந்திருந்தாலும் பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புக்கள் அதிகம்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
West Bengal CM and TMC chairperson Mamata Banerje incident

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் உள்ள வூட்பர்ன் பிளாக்கில் இருந்து கொல்கத்தாவில் உள்ள விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

West Bengal CM and TMC chairperson Mamata Banerje incident

மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. இந்த கடினமான தருணத்தில் இருந்து மம்தா பானர்ஜி மீண்டு விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
varanasi Court orders Hindus allowed to worship in Gnanavabi Masjid

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று (31-01-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என அதிரடி உத்தரவை வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், அங்கு வழிபாடு நடத்துவதற்காக அர்ச்சகரை நியமிக்க காசி விஸ்வநாதர் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டது. இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த 7 நாள்களுக்கு அங்கு பூஜைகள் நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. வாரணாசி நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.