
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஜல்சக்தித் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மிக்ஜாம் புயம் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழு நாளை (11.12.2023) சென்னை வர உள்ளது. இந்த குழுவின் ஆய்வுக்கு பின்னர் தேவைப்படும் நிவாரணத்தை மத்திய மத்திய அரசு சார்பில் வழங்கப்படும். இந்த குழு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.