Skip to main content

’காந்தி மதச்சார்பற்ற கொள்கையைப் பின் பற்றியதால் தான் சுட்டுக் கொல்லப்பட்டார்’ - கொந்தளித்த முத்தரசன்

Published on 05/03/2018 | Edited on 05/03/2018
mutharasan cpi

 

நெல்லை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாவட்ட மாநாடு நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவிலில் நடந்தது. இரண்டாம் நாள் மாவட்ட மாநாட்டிற்குப் பின்னர் செம்படையினரின் அணிவகுப்பு. இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட செ. காசிவிஸ்வநாதன் உட்பட பலர் பேசினார்கள்.

 

இறுதியாகப் பேசிய சி.பி.ஐ.யின் மாநில செயலாளார் முத்தரசன்,  ‘’பார்லிமெண்டிற்கு விரைவில் தேர்தல் வருகிற சூழல் தென்படுகிறது. அரசுக்கு ஆதரவளிக்கிற கட்சிகளின் ஆதரவு வாபஸ் இல்லை. எம்.பி.க்களின் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படவில்லை. பிறகு ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை. 2014ல் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி, நான்காண்டுகள் கடந்தும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழக ரேசன் கடைகளில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு இல்லை. மசூர் பருப்பு போடப்படும் என்றார்கள் அதுவும் தரப்படவில்லை. இன்றைய நியாயவிலைக் கடைகள் இருக்குமா என்கிற சந்தேகம் வந்து விட்டது.

 

 மோடி கொண்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஜெயலலிதா ஏற்க மறுத்தார். அதன்படி செயல்பட்டால் பாதிப்பேருக்கு ரேசன் கிடைக்காது. ஒரு லட்சம் வருமானம் சொந்த வீடு குளிர் சாதனப்பெட்டி டூவீலர், இருந்தால் ரேசன் கிடையாது. இதற்குப் பெயர் தான் உணவுப் பாதுகாப்புச் சட்டம். வேறு யாருக்குக் கிடைக்கும் கோவில்களில், தெருவில் பிச்சை எடுப்பவர்களுக்குத் தான் கிடைக்கும். அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கு டாக்டர் இல்லை. பிணமாகத் தான் வரமுடியும். பணமிருப்பவர்கள் மட்டுமே தனியார் மருத்துவமனைக்குப் போக முடிகிற நிலை. அது மட்டுமல்ல கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டக் குழுவை மோடி அரசு ரத்து செய்து விட்டது. மனுதர்மம் என்ன சொல்கிறது. அனைவருக்கும் கல்வி வேண்டும். அது ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட எந்த வழியினராக இருந்தாலும் சரி, கல்வி தரப்பட வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்மம் ஒரு சாரார் மட்டுமே படிக்க வேண்டும் என்பதே. அந்த ஒரு சாரார் யார்?.

 

cpi11

 

1925ல் தான் ஆர்.எஸ்.எஸ். பிறக்கிறது. நீயும் பிறக்கிறாயா இதோ நானும் பிறக்கிறேன் என்று அதே வருடம் தான் கம்யூனிசமும் பிறந்தது. அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்தின்படி தான் இந்தியா மதசார்பற்ற நாடானது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் வழங்கப்பட்டன மோடி எடப்பாடி ஒ.பி.எஸ். அரசு, கொடுத்த அரசியல் சட்டத்தை, உரிமையை மீறி ஆட்சி நடத்துகிறது.

 

வரிகளை வசூல் செய்வது தான் வருமான வரித்துறையின் வேலை. ஆனால் அரசுக் கெதிராகச் செயல்படுபவர்கள். மோடிக்கு அடி பணிய மறுப்பவர்கள் மீது ஜனநாயக அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏதிராகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏலம் விடப்படுகிறார்கள். அந்த ஏலத்தை எடுத்தவர் எடப்பாடி. பணமில்லாமல் வேலை இல்லை. பணி மாறுதல் இல்லை. இது தான் தமிழக நிலை. 

 

1947ல் இந்த நாடு சுதந்திரம் அடைந்தது. அதாவது மகாத்மாகாந்தி தலைமை தாங்கினார். அவர் தன்னை நோக்கி விரல் நீட்ட வில்லை. நேரு, வல்லபாய் படேல் ராஜேந்திபிரசாத் போன்ற மனிதர்களைத் தலைவராக்கினார். அப்படிப்பட்ட மனிதர் எத்தனை நாள் உயிரோடிருந்தார். ஐந்து மாதம் பதினைந்து நாட்கள் மட்டுமே. சுட்டுக் கொல்லப்பட்டார்; அப்போது சுட்டவனை போலீஸ் பிடித்து விட்டது. அவனைத் தனியே கொண்டு போய் விசாரித்தார்கள். அவனது கையில் பச்சை குத்தியிருந்த பெயரைக் கண்டு திகைத்தது போலீஸ். அந்தப் பெயரை அப்படியே சொன்னால், தேசப்பிதாவைக் கொன்றவர் பற்றிய தகவலால் மதக்கலவரமாக மாறியிருக்கும். ஆனால் புத்திசாலிப் போலீஸ் அவனை விசாரிக்க, அவன், அந்தப் பெயரையே திருப்பித் திருப்பிச் சொன்னான். கடைசியில் கழட்றா ஜட்டியை என்றார்கள். அதன் பிறகு தான் விசாரனையில் அவன் கோட்ஸே என்று தெரிந்தது. காந்தி மதச்சார்பற்ற கொள்கையைப் பின் பற்றியதால் தான் சுட்டுக் கொல்லப்பட்டார்’’ என்ற முத்தரசனின் உரைவீச்சில் அனல் பறந்தது.

சார்ந்த செய்திகள்