முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018, செப்டம்பர் 9- ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் தொடர்பாக ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை கவர்னர் அந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. ‘அமைச்சரவை தீர்மானத்தின்படி 7 பேரையும் விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று நளினி ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனு மீது கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனு மீது கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் எனக் கூறி உள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம், பிப்ரவரி 12- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.