Skip to main content

ரூ.13 ஆயிரத்திற்கு பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
M. K. Stalin

 

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13 ஆயிரத்திற்கு பதில், ரூ.5.44 லட்சம் கல்விக்கட்டணம் வசூலிப்பதா? கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்றும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு 2 லட்சம் என்று நிர்ணயித்திருப்பது - பல ஏழை மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும்; சமூகநீதியும், ஏழை - எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற, அதனை 8 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசு மருத்துவக் கல்லூரிகளாகச் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும்,  ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கட்டணத்தை அ.தி.மு.க. அரசு உயர்த்தி- ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் கல்வி பெறுவதில் பேரின்னலை ஏற்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அரசுக்  கல்லூரி அடிப்படையில் கவுன்சிலிங்!; கட்டண வசூல் தனியார் கல்லூரி மாதிரி; என்பது கொடுமையாக இருக்கிறது. ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம் ரூபாய் கட்டணம் என்று கடந்த 12.11.2020 அன்று அரசு திடீரென்று அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்தக் கட்டணத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட - அதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கைக் குறிப்பேட்டில் கல்விக்கட்டணம் ரூ. 4 லட்சம் என்று தெரிவித்து விட்டு - இப்போது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் 5.44 லட்சம் ரூபாய் என்று மீண்டும் கட்டணத்தைக் கருணையற்ற முறையில் உயர்த்தியுள்ளது அ.தி.மு.க. அரசு . மாணவர்களுக்கும் - பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி - இடஒதுக்கீட்டால் பயனடைந்த மாணவர்களின் கல்விக் கனவை  “அதிகக் கட்டணம்” என்ற பெயரில் பறிப்பதாகவே அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.


ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் 3.85 லட்சம் ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளும் அரசு நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளா அல்லது அரசு கல்லூரிகளா என்ற சந்தேகமும் கவலையும் எல்லா மாணவர்களுக்கும் எழுகிறது. ஏனென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் 13,670 ரூபாய். பல் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் 11,610 ரூபாய். இந்தக் கட்டணங்களை ஈரோடு ஐ.ஆர்.டி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியிலும், ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியிலும் வசூலிப்பதுதான் நியாயம். அதுதான் பொறுப்புள்ள ஓர் அரசின் கடமையாக இருக்க முடியும். ஆனால் அவை இரண்டு கல்லூரிகளையும் அரசுக் கல்லூரிகள் என்று அறிவித்து விட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல் கல்விக்கட்டணம் வசூல் செய்வது ஏன்? இந்தத் துயரம் உடனடியாக அகற்றப்பட வேண்டும்!


இதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வருமான வரம்பு 2 லட்சம் என்று நிர்ணயித்திருப்பது - பல மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும்.  இந்த வருமான வரம்பை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தினால்தான் சமூக நீதியும், ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவும் நிறைவேற்றப்படும்.

 

மருத்துவக் கல்லூரிகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த 30.11.2020 என்ற இறுதிக் கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் பெற்றோர் மேற்கண்ட இரு கல்லூரிகளிலும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்த அதிகக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து  எழுந்து கொண்டே இருந்தாலும் - அ.தி.மு.க. அரசு மயான அமைதி காக்கிறது. இது மாணவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


எனவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கல்விக் கட்டணத்தை  ரூ.13670 (மருத்துவக் கல்வி) என்றும், ரூ.11610 (பல் மருத்துவக் கல்வி) என்றும் உடனடியாகக் குறைத்து அறிவித்து ஆணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, போஸ்ட் மெட்ரிக்  கல்வி உதவித் தொகை பெறும் வருமான வரம்பினை ரூ. 2 லட்சத்தில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது கட்டணம் செலுத்த முடியாத ஏழை - எளிய நடுத்தர மாணவர்களின் கண்ணீர்க் கோரிக்கை!  


“அரசுப் பள்ளியில் படித்ததால் அவர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும்” என்று பத்திரிகையாளர்களிடம்  கோபப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி,  இந்தக் கல்விக் கட்டணத்தைக் குறைத்து – அரசுக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். செய்வாரா முதலமைச்சர்? என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்