Skip to main content

20 நாளில் 300 சதவீதம் லாபம் கொடுத்த வோடபோன் ஐடியா பங்குகள்! முதலீட்டாளர்கள் காட்டில் அடைமழை!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 Vodafone Idea shares gain 300% in 20 days,  Investors money gained

இந்திய டெலிகாம் துறைகளில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களின் பங்குகள் மளமளவென உயர்ந்துள்ளன. குறிப்பாக, கடந்த இருபதே நாள்களில் வோடபோன் ஐடியா பங்குகளின் மதிப்பு 300 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. 
 


முகேஷ் அம்பானியன் ரிலையன்ஸ் ஜியோ (ஆர்ஜியோ) நிறுவனத்தில் பேஸ்புக் நிறுவனம் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளது. மேலும், ஆர்ஜியோ நிறுவனம் சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களிடமும் கணிசமாகப் பங்குகளைக் கைமாற்றிவிட்டு 75 ஆயிரம் கோடிகளைத் திரட்டி விட்டார் முகேஷ் அம்பானி. 

இந்தியாவில், தொலைத்தொடர்பு துறையில் ஆர்ஜியோ வருகைக்குப் பிறகு ஏனைய சிறு நிறுவனங்கள் பலத்த அடி வாங்கின. இந்த வர்த்தகப் போட்டியில் பார்தி ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், அதற்கு அடுத்த இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனமும் களத்தில் நிற்கின்றன. இந்நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியானதால், அந்நிறுவனத்தின் பங்குகளும் கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்தன. திங்களன்று பார்தி ஏர்டெல் பங்குகள் அதிகபட்சமாக 593 ரூபாய் வரை சென்று, இறுதியில் 583- இல் நிறைவடைந்தது.

ஆர்ஜியோவுக்கு பேஸ்புக், பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அமேசான் என பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கண் வைக்க, கூகுள் நிறுவனம் நாட்டின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியாவிடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க இருப்பதாக கடந்த மே இறுதியில் தகவல்கள் கசிந்தன. இப்போது வரை அந்தத் தகவலை கூகுள் நிறுவனமோ, வோடபோன் ஐடியா நிறுவனமோ ஆணித்தரமாக மறுக்கவில்லை என்பதால் முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வோடபோன் ஐடியாவில் முதலீடுகளைக் கொட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த 20 வேலை நாள்களில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் 50 சதவீதம் அல்ல... 100 சதவீதம் அல்ல... கிட்டத்தட்ட 300 சதவீதம் வரை தடாலடியாக உயர்ந்து இருக்கின்றன. 

 

 


கடந்த வெள்ளியன்று (ஜூன் 5) வோடபோன் ஐடியா நிறுவன பங்குகள் 10.50ல் முடிவடைந்தன. இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு திங்களன்று சந்தை திறந்தவுடனேயே நிப்டியில் இப்பங்கின் விலை 11.55 ஆக என்ற நிலையில் வர்த்தகம் துவங்கியது. அதிகபட்சமாக 12.60 ரூபாய் வரை உயர்ந்து, இறுதியில் 12 ரூபாயில் முடிவடைந்தது. 

கடந்த மே 11- ஆம் தேதி, வோடபோன் ஐடியா நிறுவனப் பங்குகள் விலை 4.20 ரூபாயாக இருந்தது. அடுத்த ஒரு வாரம் இப்பங்குகள் 20 பைசா, 30 பைசா என மெதுவாக உயர்ந்து வந்த நிலையில்தான், அதாவது மே 28- ஆம் தேதியன்று, இந்நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் கிளம்பின. ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் ஆர்ஜியோவில் முதலீடு செய்வதாகத் தகவல் பரவிய அடுத்தடுத்த சில நாள்களிலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் மளமளவென எகிறின. 

அந்த அனுபவம்தான் முதலீட்டாளர்களிடையே வோடபோன் ஐடியா பங்குகளின் மீதும் பார்வையைக் குவித்திருக்கிறது. முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டு இப்பங்குகளை வாங்கி வருவதால் 20 வேலை நாள்களில், மே 11- ஆம் தேதி நிலவரத்துடன் (4.20) ஒப்பிடுகையில், தற்போது 300 சதவீதம் வரை (12.60) வரை உயர்ந்திருக்கிறது. இது, முதலீட்டாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இது ஒருபுறம் இருக்க, இண்டஸ் டவர்ஸ் என்ற செல்போன் கோபுரம் கட்டுமான நிறுவனத்துடன் வோடபோன் ஐடியா வரும் 11- ஆம் தேதி புதிய வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ள இருப்பதும், இப்பங்குகளின் விலையேற்றத்துக்கு இன்னொரு முக்கியக் காரணம் என்கிறார்கள். ஓராண்டுக்கு முன்னதாகக் கடும் சரிவைச் சந்தித்த இந்நிறுவனம், மூடப்படலாம் என்ற தகவல்களும் வேகமாகப் பரவின. ஆனால் ஓரே ஆண்டில் மீண்டும் பங்குகளின் விலையேறியதை அடுத்து, இதன் சந்தை மதிப்பும் கூடியுள்ளது.
 

http://onelink.to/nknapp


கடந்த மே 29- ஆம் தேதி, அதிகபட்சமாக வோடபோன் ஐடியா பங்குகள் ஒரே நாளில் 34 சதவீதம் வரை உயர்ந்தது. திங்களன்று இப்பங்குகள் 14.29 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தன. கடந்த 52 வாரங்களில் இப்பங்குகள் அதிகபட்சமாக 14 ரூபாயாக உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமாக 2.40க்கு விற்றுள்ளன. இன்று (ஜூன் 9) கடந்த 52 வாரத்தில் அதிகபட்ச விலையைக் கடக்கும் என்பதோடு, கடந்த ஓராண்டில் இல்லாத புதிய உச்சத்தை எட்டும் என்ற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது. 


 

 

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.