Skip to main content

உள்ளூர், வெளியூர் மல்லுக்கட்டு! -திருச்சி எம்.பி. வேட்பாளர்?

Published on 14/02/2019 | Edited on 04/03/2019

மே மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தமிழகத்தின் பெரிய கட்சிகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. எம்.பி. சீட்டைக் கைப்பற்ற, கோதாவில் குதித்துள்ளனர் கட்சிப் புள்ளிகள். யாருக்கு எந்த தொகுதி என்ற பரபரப்பிற்கிடையே, தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் உள்ளூர் வேட்பாளரா, வெளியூர் வேட்பாளரா என பட்டிமன்றம் நடக்கிறது.
 

vaiko

திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், திருவரங்கம், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதுதான் இப்போதைய திருச்சி எம்.பி.தொகுதி. இத்தொகுதியில் இந்து, கிறிஸ்தவ பிள்ளைமார் ஓட்டுகள் பெரும்பான்மையாகவும் அதற்கடுத்து முறையே தலித், இஸ்லாமியர்கள், கள்ளர், முத்துராஜா, உடையார், பிராமணர் ஓட்டுகளும் இருக்கின்றன.

1980-ல் வெற்றி பெற்ற தி.மு.க.வின் என்.செல்வராஜ், 84, 89, 91, 96-தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரசின் அடைக்கலராஜ், இந்த இருவரும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 98, 99-ல் சேலத்தைச் சேர்ந்த ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க. சார்பிலும், 2004-ல் தஞ்சையைச் சேர்ந்த எல். கணேசன் ம.தி.மு.க. சார்பிலும் எம்.பி.யானார்கள். 2009, 2014 தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வைச் சேர்ந்த பி.குமாருக்கு சொந்த ஊர்... இத்தொகுதிக்குட்பட்டதும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்ததுமான கந்தர்வக்கோட்டை என்றாலும் தற்போது திருச்சியிலேயே செட்டிலாகிவிட்டார். இந்தமுறையும் தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவருடன் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், புதுக்கோட்டை கார்த்திக் தொண்டைமான், அருள்செந்தில் ராம், ராமலிங்கம் உள்ளிட்ட 10 பேர் அ.தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

வருகிற தேர்தலில் பல கட்சிகளிலும் வெளியூர் வி.ஐ.பி.க்கள் திருச்சியை நோக்கி தங்களது பார்வையைத் திருப்பியுள்ளதால், உள்ளூர் வி.ஐ.பி.க்கள், இப்போதே உஷார் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர். இந்த முறை விருதுநகர் தனக்கு தோதுப்படாது என நினைத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடியில் களம் இறங்கலாமா என நினைத்தபோது, அங்கே தி.மு.க.வின் கனிமொழி, இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டார். தமக்கு திருச்சி தான் தோதுப்படும் என்ற எண்ணத்துடன், தி.மு.க. தலைமையுடன் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும் நடத்தி முடித்து, தொகுதி முழுவதும் ஒரு மாதமாக தொடர்ச்சியாக கூட்டங்களையும் நடத்தி முடித்துவிட்டார் வைகோ. 2004-ல் தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வின் எல்.கணேசன் திருச்சியில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் கணக்குப் போட்டு, தி.மு.க. மா.செ. கே.என்.நேருவிடம், லோக்கல் ம.தி.மு.க. புள்ளிகள் தெரிவித்தபோது, “""வைகோ எவ்வளவு பெரிய தலைவர், அவருக்கு எதுக்கு அலைச்சல். அதனால எங்க தலைவரிடம் பேசி ராஜ்யசபா சீட்டை வாங்கச் சொல்லுங்க''’என நேரு சொன்னதும் லேசாக ஜெர்க்காகிவிட்டனர் ம.தி.மு.க. புள்ளிகள். அவர்களை சமாதானப்படுத்தி வழியனுப்பும்போது, ""ம.தி.மு.க.வைச் சேர்ந்த நம்மூரு டாக்டரம்மா ரொக்கையாவுக்கு சீட் கொடுத்தா, இஸ்லாமியர்கள் ஓட்டுக்களை மொத்தமா வாங்கி ஜெயிக்க வைக்கலாம்''’’என சொல்லியுள்ளார் நேரு.

தி.மு.க. நின்றாலும் கூட்டணிக் கட்சிகள் நின்றாலும் உள்ளூர் வேட்பாளர்தான் என்பது கே.என்.நேருவின் கணக்கு.

congressநேருவின் எண்ண ஓட்டம் இப்படி இருக்க, தனது மாவட்டமான புதுக்கோட்டை, திருச்சி தொகுதிக்குள் வருவதால், தமிழக காங்கிரசின் மாஜி தலைவரான திருநாவுக்கரசருக்கும் திருச்சி மீது ஆசை வந்துவிட்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவி இல்லாவிட்டாலும் எம்.பி. சீட் வாங்கிவிடும் நம்பிக்கையில் உள்ள திருநாவுக்கரசர், கடந்த வாரம் நேருவிடம் பேசியிருக்கிறார். "மொதல்ல சீட்டை வாங்குங்க, அப்புறம் பார்த்துக்கலாம்'’என்றிருக்கிறார் நேரு.

1999 எம்.பி. தேர்தலில் லோக்கல் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜை வீழ்த்தி தி.மு.க. கூட்டணியில் நின்ற பா.ஜ.க. வேட்பாளர் ரங்கராஜன் குமாரமங்கலத்தை ஜெயிக்க வைத்தார் நேரு. அதற்குப் பரிகாரமாக இந்தமுறை அடைக்கலராஜின் மகன் ஜோசப்லூயியை காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கினால், ஜெயிக்க வைக்கலாம் என்பது நேருவின் வியூகம். எந்த சர்ச்சையிலும் சிக்காத ஜோசப்லூயியை திருச்சியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், ஸ்டாலினிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார் நேரு. ஏற்கனவே ஸ்டாலின் குடும்பத்திற்கு அறிமுகமானவர், ராகுல்காந்தியை தலைவராக முன்மொழிந்த, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேரில் ஒருவர். இதெல்லாமே ஜோசப்லூயிக்கு சீட் கிடைக்க வாய்ப்பு பிரகாசமா இருக்கு என்கிறார்கள் திருச்சி காங்கிரஸ் புள்ளிகள். வேறு கட்சிகளின் நிலைமை இப்படி இருக்க, எம்.பி.வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமையிலிருந்து 15 சி தரப்போவதாக தகவல் வெளியானதால், தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகனும் இன்னும் சிலரும் வேட்பாளர் ரேஸில் குதித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே திருச்சியை குறிவைக்கும் வைகோ எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது பா.ஜ.க. தி.மு.க. பற்றியும் கலைஞர், ஸ்டாலின், கி.வீரமணி குறித்தும் வைகோ பேசிய பழைய பேச்சுக்கள் அடங்கிய மீம்ஸ்களை ரெடியாக வைத்துள்ளனராம் பா.ஜ.க.வினர்.



 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.