Skip to main content

“நானும் அதில் பாதிக்கப்பட்ட பெண் தான்”- திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தமிழச்சி தங்கபாண்டியன்

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் திமுக மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் கேள்விகளாக கேட்கப்பட்டன. அப்போது அவர்...

 

thamizhachi thangapandian

 

வேட்பாளர் தேர்வின்போது என்ன சாதி, எவ்வளவு செலவு செய்வார்கள் என்றுக் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. 
 

என்னுடைய தந்தை வே.தங்கபாண்டியன் தலைமையாசிரியராக இருந்தார். அப்போது எதை வைத்து அவருக்கு எம்.எல்.ஏ வேட்பாளராக வாய்ப்புக் கொடுக்கப்பட்டது? தி.மு.க-வில் ஒரு அடிப்படைத் தொண்டன் கூட பதவிக்கு வரலாம். பதிவுகளை எடுத்துப் பாருங்கள் நிறைய உதாரணங்கள் இருக்கிறது. பொத்தாம்பொதுவாக பணபலத்தைப் பார்த்து வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதெல்லாம் அடிப்படையற்றக் குற்றச்சாட்டு. மற்ற கட்சிகளைவிட திமுக-வில் தான் கட்சியில் என்ன பங்களிச்சுயிருக்காங்க? எப்படி செயல்படுறாங்க? பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வாங்க என்பதையெல்லாம் பார்த்து வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறார். 
இன்றைக்கு, முதல் தலைமுறை மாணவர்கள் பொறியியல் கல்வி படிப்பதிலிருந்து பெண்களுக்கு சொத்துரிமை, அரசு வேலைகளில் 30% இடஒதுக்கீடு என திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இதுபோன்ற நலத்திட்டங்கள் கையெழுத்தாகியிருக்கும். இந்த நலத்திட்டங்களையெல்லாம் மறந்துவிட்டு தேர்தல் வரும்போதெல்லாம் குற்றச்சாட்டுகளைக் கூறுவது அபத்தமானது.  
 

திமுக-வின் எம்.பி-க்கள் நாடளுமன்றத்தில் பேசாத விஷயமாக எதாவது இருக்கிறதா?
 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வேலையென்ன? தமிழக மக்களின் நலன், அவர்களின் தேவை, உரிமைகள் மற்றும் கோரிக்கை, மேலும் அவர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்காக குரல்கொடுத்து அதற்கான விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்.  திருச்சி சிவா அண்ணன் தனிநபர் மசோதா மூலம் திருநங்கைகளுக்கான சட்டத்தைக் கொண்டுவந்தார். அதிமுக-வின் 40 எம்.பி க்கள் நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன செய்தார்கள்? காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்னு பாட்டுப் பாடுனதுதான் மிச்சம். கலையில் நீட் தேர்வு அப்படி இப்படினு பேசுறாங்க, மதியம் மத்திய அரசுக்கு ஆதரவாக ஒப்புதல் கொடுக்கிறார்கள். காலையில் ஒன்றைச் சொல்லிவிட்டு மாலையில் அதை மாற்றி சொல்லுவதெல்லாம் பழையக் கதை, 10 மணிக்கு ஒன்று சொல்லிவிட்டு 10.01 க்கு மாற்றிச் சொல்லுவதுதான் இவர்களுடைய நடப்பு நிலைபாடு. 
அந்தவகையிலே, முரசொலி மாறனிலிருந்து துவங்குகிறது மாநிலங்களுக்கான உரிமைக்குரல். இன்றைக்கு அதை மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். தமிழை துணை ஆட்சி மொழியாக கொண்டுவரவேண்டும் என்று சொல்லுவது, ஜி.எஸ்.டி-யை ஒழுங்குபடுத்துவது, பொருளாதார நிபுணர்குழு அமைப்பது என எல்லா விதத்திலும் திமுக-வின் தேர்தல் அறிக்கை பாராளுமன்றத்தில் தமிழர் நலனை கருத்தில்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

 

thamizhachi thangapandian



தென்சென்னையைப் பொருத்தவரைக்கும் எது பிரதான பிரச்சனையாக நினைக்குறீங்க?
 

நான் செல்லும் இடங்களில் மக்கள் கூறுவதும், நானாக அறிந்துகொண்டதுமான பிரச்சனைகளில் பிரதானமானவை சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகள்தான் வெள்ளம் வரும்போது அதிகமாக பாதிக்கப்படுகிற தாழ்வான பகுதி. நானும் அதில் பாதிக்கப்பட்டப் பெண் தான். இந்த இடங்களை இயற்கையாகவே சமன்படுத்த வேண்டுமென்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதற்கான இயற்கை சூழலோடு வைக்கவேண்டும்,  அடுத்ததாக வெள்ளத்தில் வருகின்ற தண்ணீரை பி- கெனால் வழியாக திருப்பிவிட்டு கோவளம் கடற்கரையில் உள்ள முகத்துவாரத்தில் கொண்டுச் சேர்த்தால் பயன்படும், இதையெல்லாம் ஏற்கனவே எங்கள் கட்சியினர் பேசியிருக்கிறார்கள். கடல் நீரை குடிநீராக மாற்றும் மாபெரும் திட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர். அவர் அமைத்த முதல் வாட்டர் டேங்க் இருக்கு. அது இந்த தொகுதி மக்களுக்கான மிகப் பெரிய திட்டம். இரண்டாவது வாட்டர் டேங்க் அமைப்பது குறித்து சென்ற தேர்தலின் போதே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டி.கே.எஸ் கூறியிருந்தார். எங்களுக்கு அப்போது வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போது இருக்கிற உறுப்பினர் அதை முன்னெடுக்கவில்லை. மேலும், விபத்துக்கான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அவர்களுடைய தேவையாக இருக்கிறது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. பெருங்குடி குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளைச் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு வராமல் எப்படி அகற்றுவது என்ற விஷயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இவற்றையெல்லாம் நான் முன்னெடுப்பேன். 
 

சென்னையின் பூர்வகுடி மக்களை வெளியேற்றுவதில் திமுக-வும் அதிமுக-வும் தொடர்ந்து ஈடுபடுகின்றன என்கிற குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீங்க?
 

அப்படி பொதுவாக சொல்லிவிட முடியாது. நேற்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சாமியார் தோட்டம், நெருப்பு மேடு போன்ற பூர்வ குடிகள் வசிக்கிற பகுதிகளுக்கு சென்றிருந்தேன். அப்போது எம்.எல்.ஏ மாசு உடனிருந்தார். அந்த மக்கள் அகற்றப்பட கூடாது என்று குரல் கொடுத்து அந்த மக்கள் அங்கேயே வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார் மாசு. குடிசை மாற்று வாரியமும் அவர்களை நல்லமுறையில் வாழவைக்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்பட்டது தான். அதற்கு விரும்பாதவர்களை திமுக எப்போதும் வழுக்கட்டாயமாக வெளியேற்றியதே இல்லை.   

 

 


 

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.