Skip to main content

அப்பாடா பிரச்சினை முடிந்தது... வரப்போகும் தீர்ப்புகளால் கலக்கத்தில் அதிமுக... அடுத்தது என்ன?

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவதால், அதற்கு முன்பாக அதிரடியாக பல தீர்ப்புகளை வழங்கினார். அந்த தீர்ப்புகள் இந்தியா முழுவதும் பெரிய விவாதத்தை உருவாக்கியது. அவரது மேற்பார்வையில் வழங்கப்பட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான தீர்ப்பு, தமிழகத்தில் ஒரு பெரிய விவாதத்தையே ஏற்படுத்தியது.

 

bjp



"ரஞ்சன் கோகாய் கொடுத்த ராமஜென்ம பூமி தொடர்பான தீர்ப்பு ஒருவிதமான ஆதரவையும் பலமான எதிர் உணர்வுகளையும் உருவாக்கியது என்றாலும் அனைவராலும் ஒரு வழியாக ஏற்கப்பட்டது. "அப்பாடா பிரச்சினை இத்துடன் முடிந்தது' என்கிற பெருமூச்சு இந்தியா முழுவதும் ஏற்பட்டது. ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள ரஞ்சன் கோகாய் அனுமதித்தார். ஆனால் பா.ஜ.க. இத்தனை ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வந்த முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரமான கோவிலை இடித்து மசூதியை கட்டினார்கள் என்பது பொய் என ஆணித்தரமாக மறுத்து தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். முஸ்லிம்களுக்கு ஒரு மசூதி போனது. ஆனால் பா.ஜ.க.வினருக்கு தங்களது பிரச்சார பீரங்கியே காணாமல் போய்விட்டது. இந்தத் தீர்ப்பை பா.ஜ.க. வரவேற்றதன் மூலம் இதுவரை முஸ்லிம்கள் மீது பழிபோட்டு செய்து வந்த பிரச்சாரம் பொய் என சுப்ரீம் கோர்ட் சொன்னதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார் சுப்ரீம் கோர்ட் சீனியர் வழக்கறிஞர் ஒருவர்.

 

admk



ராம ஜென்ம பூமியை தொடர்ந்து, "தகவல் அறியும் உரிமைச் சட்டம் சுப்ரீம் கோர்ட்டை கட்டுப்படுத்துமா' என்கிற கேள்விக்கும் ரஞ்சன் கோகாய் பதிலளித்துள்ளார். இந்த சட்டம் அமலுக்கு வந்த 12 வருடங்களாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியின் அலுவலகம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வரவில்லை. 2007ஆம் ஆண்டு சுபாஷ் அகர்வால் இந்த சட்டத்தின் கீழ் கேட்ட விவரங்களை சுப்ரீம் கோர்ட் தரமறுத்தது. மத்திய தகவல் ஆணையம் "சுப்ரீம் கோர்ட் என்பது ஒரு பொது நிறுவனம். பொதுமக்களின் வரிப் பணத்தில் இயங்கும் சுப்ரீம் கோர்ட், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆளுமைக்கு உட்பட்டது' என உத்தரவிட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டே விசாரித்தது.

 

admk



ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சுப்ரீம் கோர்ட்டும், அதன் தலைமை நீதிபதி அலுவலகமும் கொண்டு வரப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிய வரும். அந்த வெளிப் படைத்தன்மை சுதந்திரமான நீதி வழங்கலை உறுதிப்படுத்தும். வெளிப்படைத் தன்மை சுப்ரீம் கோர்ட் என்கிற அமைப்பை பாடாய்படுத்தும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது' என தீர்ப்பளித்தது.

 

admk



இதே ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறப்பட்ட போதும், கோகாய்க்கு முன்பு தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக ரஞ்சன் கோகாய் தலைமையில் நான்கு நீதிபதிகள் வெளிப்படையாக கொந்தளித்தபோதும் சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கிறது என்பது மர்மமான புதிராக இருந்தது. இந்த வாரம்தான் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் பொய் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வந்த கையுடன் சுப்ரீம் கோர்ட்டை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரஞ்சன் கோகாய் கொண்டு வந்து விட்டார். இது மிகவும் ஆரோக் கியமான விஷயம் என்கிறார்கள் வழக்கறிஞர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ரஞ்சன் கோகாய் தலைமையில் ராம ஜென்ம பூமி விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் சந்திரசூட். இவர் 2010-ஆம் ஆண்டு நவம்பரில் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு சட்டரீதியாக எந்த தடையுமில்லை. "சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்காதது மனித உரிமைகளை மீறிய செயல்' என தீர்ப்பளித்தார். அப்போதைய தலைமை நீதிபதியான தீபக் மிஸ்ரா தலைமையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பை கேரள அரசால் கூட சபரிமலையில் அமல்படுத்த முடியவில்லை. கோவிலுக்குச் சென்ற பெண்களை பக்தர்கள் தாக்கினார்கள். சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பு அதன் அமலாக்கல் தொடர்பான பெரிய விவாதத்தை சபரிமலை தீர்ப்பு உருவாக்கியது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தவறானது. அதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென 60-க்கும் மேற்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார்கள். பொதுவாக ஒரு முறை ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி விட்டால் அதை சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்வது இல்லை. சசிகலாவையும் ஜெயலலிதாவையும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என சொன்ன சுப்ரீம் கோர்ட் அதற்கெதிரான மறுபரிசீலனை மனுவை விசாரிக்கவேயில்லை. "ஜெ. இறந்து விட்டார்: அதனால் அவர் தண்டனை அனுபவிக்க மாட்டார்' என ஒற்றை வரி கருத்தோடு அந்த மறுபரிசீலனை மனுவை டிஸ்மிஸ் செய்து விட்டது. ஆனால் சபரிமலை மலை தீர்ப்புக்கெதிராக மலை போல வந்த மறுபரிசீலனை மனுக்களை வழக்கத்திற்கு மாறாக சீரியசாகவே எடுத்துக் கொண்டது.

நவ.14-ம் தேதி அந்த மறு பரிசீலனை மனுவில் ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. "இந்த மனுக்கள் பெண்களின் வழிபாட்டு உரிமையை கேள்வி கேட்கின்றன சபரிமலையில் மட்டுமல்ல, மசூதிகளிலும் பெண்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை. பேகரா என்கிற முஸ்லிம் பிரிவினர் பெண்களின் வழிபாட்டு உரிமையை முற்றிலுமாக மறுக்கிறார்கள். பெண்களின் வழிபாட்டு முறை ஒவ்வொரு கோவிலுக்கும் மாறு படுமா? ஒவ்வொரு மதமும் தன் வழிபாட்டு முறை களைக் கடைப்பிடிக்க முடியுமா? அது பெண்களின் வழிபாட்டு உரிமையை கட்டுப்படுத்துமா? என்கிற கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது. எனவே இதை ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடுகிறோம்' என ரஞ்சன் கோகாய், கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய மூவர் உத்தரவிட மற்ற இரு நீதிபதிகளான சந்திரசூட்டும், நரிமனும் "பெண்கள் சபரிமலையில் நுழைய தடை செய்வது சட்ட விரோதம்' என 3 : 2 என்ற அடிப்படையில் தீர்ப்பளித்தனர். 


தற்பொழுதுள்ள தீர்ப்பான சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி என்கிற தீர்ப்புக்கு எந்த தடையும் சுப்ரீம் கோர்ட் விதிக்காத நிலையில், இந்த வாரம் மண்டல பூஜை தொடங்குவதால் மறுபடியும் போராட்டக்காரர்களின் பூமியாக சபரிமலையை மாற்றியிருக்கிறது சுப்ரீம் கோர்ட் என்கிறது மறுபரிசீலனைக்காக வழக்கு தொடர்ந்த சபரிமலை பக்தர்கள் வட்டாரம்.

"சபரிமலையைப் போலவே ரஃபேல் வழக்கில் புதிதாக விசாரணை எதுவும் தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் பா.ஜ.க. அமைச்சர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி ஆகியோர் மறுபரிசீலனை மனுவை தாக்கல் செய்தனர். வழக்கமாக மறுபரி சீலனை மனுவை ஏற்காத சுப்ரீம் கோர்ட் இதனை டிஸ்மிஸ் செய்து விட்டது. ரஃபேல் தொடர்பான மறுபரிசீலனை மனுவில் பல புதிய விஷயங்கள் இருந்தன. அதில் இந்து ஆங்கில ஏடு ரஃபேல் விமானத்தின் விலைகளை முடிவு செய்ய பிரதமர் அலுவலகம் நேரடியாக ஈடுபட்டது என்பதை ஆவணங்கள் மூலம் வெளியிட்டது. "அந்த ஆவணங்கள் எங்கள் அலுவலகத்திலிருந்து காணாமல் போன ஆவணங்கள்' என மத்திய அரசு சொன்னது. இவையெல்லாம் மறுபரிசீலனை மனுவில் இடம் பெற்றது. இதையெல்லாம் சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொள்ளவில்லை'' என்கிறார் இந்த விவகாரத்தில் அதிக விவரங்கள் தெரிந்த டெல்லி பத்திரிகையாளர்.

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் அமைந்த ஆட்சியை கவிழ்க்க 17 எம்.எல்.ஏ.க்களை கடத்திக் கொண்டு போனது பா.ஜ.க. இன்று பா.ஜ.க.வின் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த கடத்தல்தான் காரணமானது. இந்த பதினேழு பேரையும் கட்சித் தாவல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ். சபாநாயகரின் இந்த உத்தரவு செல்லும். "அரசியலில் ஒழுக்கம் முக்கியம்' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் 2023 வரை அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிக் காலம் இருக்கிறது. அவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதித்து சபாநாயகர் போட்ட உத்தரவு செல்லாது' என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.


இது தவறான தீர்ப்பு. "சபாநாயகர் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுத்தது சரி என சொல்லும் சுப்ரீம் கோர்ட், அவர்கள் அதே சட்டப்படி தேர்தலில் போட்டியிடக்கூடாது என தடை விதிப்பது தவறு என சொல்லக் கூடாது' என்கிறார் பிரபல வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டி. 

"அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓ.பி.எஸ். உட்பட 11 பேர் வாக்களித்தது கட்சி தாவல் தடுப்புச் சட்டப்படி தவறு. அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க.வின் கொறடாவான சக்கரபாணி தொடர்ந்த வழக்கு அதே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கும் கர்நாடக வழக்கு போன்ற தீர்ப்பை தருமா என்ற கலக்கம் அ.தி.மு.க. தரப்பில் உள்ளது. அதே நேரத்தில் கொறடா உத்தரவு உள்பட பலவற்றிலும் கர்நாடக வழக்கிலிருந்து தமிழக வழக்கு மாறுபட்டது என்றும் அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கிறார்கள். வழக்கு என்ன ஆயிற்று என தி.மு.க. தரப்புக்காக வாதாடும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவிடம் கேட்டோம். அந்த வழக்கில் ஒருநாள் வாதம் மட்டும்தான் பாக்கி. இறுதி வாதம் நடக்கும் நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாப்டே வேறு முக்கியமான வழக்குகளை விசாரிக்க சென்றுவிட்டார். கோகாய் நவ.17-ம் தேதி ஓய்வு பெற்றபின் அதே இடத்தில் பாப்டே தான் அடுத்த தலைமை நீதிபதியாக அமர உள்ளார். அவரிடம் நாங்கள் இந்த வழக்கை கொண்டு செல்ல தயாராக உள்ளோம். அவர் புதிய அமர்வை அழைப்பார். அவர்கள் வழக்கின் இறுதி வாதங்களை கேட்பார்கள். விரைவில் வழக்கு முடிவுக்கு வரும்'' என்கிறார்.


 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.