Skip to main content

சாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா! ஹிட்லர் பாணியில் அமித்ஷா!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

amit shah


இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக நீதி "பரிபாலன' முறையை மாற்றி எழுதும் தனது மறைமுகத் திட்டத்தை இந்த கரோனா காலத்தில் நேரடியாகச் செயல்படுத்த பா.ஜ.க. அரசு முழுமூச்சாக இருப்பதாக எச்சரிக்கை கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

 

ஜூலை 4 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. தேசிய சட்டப் பல்கலைகழகம் அமைத்துள்ள கமிட்டியின் அறிக்கை என்ற பெயரில் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் இந்த மூன்று சட்டங்களிலும் செய்யப் போகும் மாறுதல்கள், திருத்தங்கள் அதற்கான பரிந்துரைகள் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

இதில், இந்திய தண்டனை சட்டம் பற்றி 46 திருத்தங்கள் கொடுத்துள்ளது. இதுபற்றி கருத்து கூற 14 நாட்கள் என்றும் 200 வார்த்தைகளுக்குமேல் இருக்கக் கூடாது என்றும் அடுத்த 14 நாட்களில் கமிட்டி கூடி, பரிசீலனை செய்து சட்டத் திருத்தம் செய்து அதைச் சட்டமாக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு எவ்வகையான ஆபத்து என்பதை நம்மிடம் விரிவாக விளக்கினார் மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகன்.

 

"இப்போதும் நடைமுறையிலிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கால சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதை எல்லாரும் ஏற்றுக்கொண்டாலும், இந்தியா அரசியலமைப்பின் பன்முகத் தன்மையையும் சீர்குலைக்கும் ஒரு சதிச் செயலாகத்தான் பா.ஜ.க. அரசின் நடவடிக்கையைப் பார்க்க முடிகிறது.

 

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய காவல்துறை ஆராய்ச்சி மாநாட்டில் பேசும்போது, "ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்தோம். அடுத்து அயோத்தி வழக்கிலும் தீர்ப்பு கிடைத்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு உலகத்தில் இந்தியாவை மூன்றாம் இடத்திற்குக் கொண்டு செல்லும். ஆனால் நமது வளர்ச்சிப் பாதைக்கு பல தடைகள் உள்ளது. அதில் குற்றவியல் நடைமுறை சட்டமும் அடக்கம்'' என்று பேசினார். "சட்ட கமிஷன் மாற்றி அமைக்க வேண்டும்'' என்றும் கூறினார்.

 

அதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு கமிட்டி அமைக்கிறது மறைந்த ராம்ஜெத் மலானி மகனும் பா.ஜ.க.வில் இருப்பவருமான மத்திய சட்டப் பல்கலைக்கழக கல்வியாளர் பாஜ்பாய் போன்று சில உறுப்பினர்களை கொண்டதாக அக்கமிட்டி உள்ளது. சட்டப் பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள் செய்வது என்றால் ஒரு சட்ட வல்லுநர் குழுதான் அதைச் செய்ய முடியும். ஆனால், அந்தக் கமிட்டியில் சட்டம் அறிந்த வழக்கறிஞர்களைச் சேர்க்காமல் கல்வியாளர்களைச் சேர்த்து உருவாக்குகிறார்கள் என்றால், அது பா.ஜ.க.வின் மறைமுக கொள்கை திட்டமாகத்தான் செயல்படும்.


இந்தக் கமிட்டியில் மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற- உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலதுறை ஆளுமைகளைக் கொண்டவர்களை உறுப்பினராக்கி இந்திய அரசியல் சட்டத்தை இன்றைய நவீன விஞ்ஞான உலகுக்கு தகுந்தாற்போல் திருத்தம் செய்யவேண்டும். ஆனால், அவகாசம் தராமல், அவசர அவசரமாகச் செய்யப்படும் திருத்தம் மக்களுக்கு எதிரானதாகவே அமையும். உதாரணத்திற்கு, குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தத்தில், ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு திருத்தம் உள்ளது. அதாவது, போலீஸிடம் குற்றவாளி கொடுத்துள்ள வாக்குமூலம் சட்டப்பூர்வமானது என்கிறது இந்தத் திருத்தம். இது நீதிக்கு எதிரானது. போலீஸ் காவலில் எத்தகைய சித்திரவதைகள் இருக்கும் என்பதற்குச் சாத்தான்குளமே இன்றைய சாட்சி. அப்படிப்பட்ட சித்ரவதைகளால் வற்புறுத்தப்பட்டு வாங்கப்படும் வாக்குமூலம் சட்டப்பூர்வமானது எனத் திருத்தம் செய்வது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அநீதியானது.

 

பா.ஜ.க. தன் கட்சிக் கொள்கைப்படி இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து உருவாக்கும் இந்தத் திருத்தங்கள் பலவும் சட்டத்தையும் அதிகாரத்தையும் முழுக்க முழுக்க போலீஸ் மயமாக்கும் திட்டமேயாகும். அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை- கருத்துச் சுதந்திரம் எல்லாம் உள்ளது ஆனால் தேசவிரோதி எனக் கைது செய்வார்கள். போலீசார் மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தைக் கொண்டே குற்றம் சாட்டப்பட்டவரைத் தண்டிக்க வழி செய்வார்கள். ஆட்சியை எதிர்ப்பவர்களை-உண்மையைச் சொல்பவர்களை இப்படி எளிதாக பழிவாங்க முடியும்.

 

http://onelink.to/nknapp

 

இந்தியாவின் பலமான அதிகாரமான நமது அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைத்து விட்டால் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தலாம் என்பது பா.ஜ.க.வின் திட்டம். இதை நாம் வேடிக்கை பார்க்க முடியாது நமது பன்முகத் தன்மையைத் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் இப்போது நாடு முழுக்க இதை விவாதப் பொருளாக மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இணைந்து பேச வைத்துள்ளோம். இதுதான் நீதி என்று ஒரு கமிட்டி மட்டுமே கூற முடியாது 130 கோடி இந்திய மக்களின் சட்ட உரிமையைக் காக்கும் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்றார் விரிவாக.

 

இதன் தொடர்ச்சியாக, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ், அமித்ஷா போன்ற மத்திய உள்துறை அமைச்சர்களின் நேரடிக் கட்டுப் பாட்டுக்குள் செல்லும் அபாயமும் உள்ளது என எச்சரிக்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். ஹிட்லர்களின் கைகளில் சிக்கியிருக்கிறது இந்தியா.

 


 

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.