Skip to main content

ஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

உழைப்பால் உயர்ந்து உணவக சாம்ராஜ்ஜியத்தை கட்டியவர், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாகி, சிறைக்குப் பதில் மருத்துவமனையில் உயிரிழந்திருப்பது எல்லா தரப்பிலும் அதிர்வை ஏற்படுத்த தவறவில்லை. சென்னையிலும் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்திய மற்ற மாநிலத்தவரின் ஓட்டல்களிலிருந்து மாறுபட்டு, சரவணபவன் எனும் உணவகத்தைத் தொடங்கியவர் அண்ணாச்சி ராஜகோபால். பக்தியை தன் நெற்றியில் மட்டுமின்றி தொழிலும் பளிச்சிட வைத்தவர். சாப்பிட வருபவர்கள் முகம் சுளிக்காத வகையில் பரிமாறும் ஊழியர்களை வேலைக்கு வைத்து, அவர்களின் உடை, முடிதிருத்தம், சப்ளை செய்யும் முறை எல்லாவற்றிலும் புதுமை செய்தார். தண்ணீர் டம்ளருக்குள் விரல் நுழைக்க வரும் ஆரோக்கியமற்ற நெடுங்கால சப்ளை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் இவர்தான். பனை ஓலை கொழுக்கட்டை தொடங்கி தென்தமிழகத்தில் உணவு வகைகளே தமிழகத் தலைநகரில் கிடைக்கச் செய்ததில் இவர் முன்னோடி.

 

hotel



அப்படிப்பட்ட சாதனையாளர், ஒரு சபலத்தில் சறுக்கிவிட, அதுவே அவரை சட்டத்தின் முன் குற்றவாளியாக்கியது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துவிட, சரணடைந்த சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தபோது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, ராஜகோபால் உயிருக்குப் போராடிய நிலையில்... நீதிமன்ற உத்தரவு பெற்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குதான் சிகிச்சை பலனின்றி மரணித்தார்.

 

saravana bhavan

கடும் உழைப்பினால் உலகம் முழுவதும் சரவணபவன் ஓட்டல்களை நிறுவி, பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துக்களைச் சேர்த்த ராஜகோபால், வயது 72 ஆகிவிட்ட நிலையில் அதனை அனுபவிக்க முடியாமல், ஆயுள் தண்டனைக்கு ஆளாகி மரணத்தை எட்டியது காலத்தின் கோலம்தான். வாடிக்கையாளர்களுக்கு தரத்துடன் சுவையான உணவு என்பதை லட்சியமாகக் கொண்டு வியாபாரத்தில் வெற்றியை ஈட்டிய அண்ணாச்சி, சொந்த வாழ்க்கையில் ருசிகண்ட பூனையாக, தன்னிடம் பணிபுரிந்தவர்களின் வீடுகளிலேயே, தன் இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடியதன் பலனை, தனது அந்திமக் காலத்தில் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

 

saravana bhavan



உழைப்பால் எத்தனை உயர்வு பெற்றாலும், சபலம் அதனைச் சரித்துவிடும் என்பதற்கு உதாரணமாகிவிட்ட ராஜகோபால் பலருக்கும் பாடமாகி இருக்கிறார். அவரது இருண்ட பக்கங்களை அப்போதே நக்கீரன் தனித்தன்மையுடன் புலனாய்வு செய்து வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதனை இன்றைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ள, கடந்த 18 ஆண்டுகளைப் பின்னோக்கிப் புரட்டுவோம்! ஏற்கனவே, தான் கண் வைத்திருந்த ஜீவஜோதியை, பிரின்ஸ் சாந்தகுமார் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள, கணவரிடமிருந்து பிரித்து, அவரைத் தனது மூன்றாவது மனைவியாக்கிக்கொள்வதற்காக எடுத்த முயற்சிதான் பிரின்ஸ் கடத்தல், கொடைக்கானல் மலையில் கொலை என முடிந்து, வழக்கில் சிக்க வைத்து, ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, மரணத்தில் தள்ளிவிட்டது.

 

saravana bhavan



என் இதயத்தில் வெற்றியை நிர்ணயித்தேன்...'' என்று வெளிப்படையாகச் சொல்லிவந்த அண்ணாச்சியின் இதயத்தில் எத்தனை பெண்கள் குடியேறினர் என்பதை அவராலேயே கணக்கிட்டுச் சொல்ல முடியாது. குடும்பப் பாங்கான மனைவி, மகன்கள் மற்றும் கொடிகட்டிப் பறக்கும் ஓட்டல் தொழில் என அவர் வணங்கிவரும் முருகன், வாழ்க்கையில் ராஜகோபாலுக்கு வெளிப்படையாக ஒரு குறையும் வைக்கவில்லை. இளம் வயதில் உழைப்பதற்கே நேரம் போதாமல் இருந்ததால், பணக்காரர்களுக்கே உரிய சுகபோகத்தை அவரால் அனுபவிக்க முடிந்ததில்லை. அது பாறாங்கல்லாக மனதை அழுத்திக்கொண்டிருக்க, எங்கே இறக்கி வைப்பது என்ற தேடலில் இறங்கினார். பணத்தை விட்டெறிந்தால் ‘அழகிகள்’ வரிசை கட்டி நிற்பார்கள் என்றாலும், குடும்பப் பெண்கள் மட்டுமே அவரது குறியாக இருந்தனர். இதற்காக எங்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற கணக்கோடு, தன் ஊழியர்களின் வீடுகளுக்குள்ளே வேட்டையாடினார்.

சரவணபவன் ஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா. அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால், கணவர் கணேஷை கவனித்துவிட்டு’ கிருத்திகாவைக் கபளீகரம் செய்து, 1993-ல் இரண்டாவது மனைவி ஆக்கிக்கொண்டார். "அழுக்கு தீர குளித்தவனும் இல்லை; ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை'’என்ற சொல்வழக்கு ராஜகோபாலுக்கு முற்றிலும் பொருந்தும். கிருத்திகாவோடு அவர் நின்றுவிடவில்லை. "சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை; உன் சிந்தையிலேதான் பேதமடா'’என்ற கூற்றுப்படி தேடலில் இறங்கினார். வேதாரண்யத்திலிருந்து சென்னை வந்த ராமசாமியை அந்த வகையில்தான் அவருக்குப் பிடித்துப்போனது. ராமசாமியின் வீட்டுக்கும் போனார். அவருடைய மனைவி தவமணி விருந்து வைத்தார். தவமணியின் புதல்விதான் ஜீவஜோதி. தன் மகள் வயதிலுள்ள ஜீவஜோதி மீது ராஜகோபாலுக்கு ஐம்பதிலும் ஆசை வந்தது.

ஜீவஜோதியின் மீதான ராஜகோபாலின் ஆர்வம் குறித்து அப்போது நக்கீரனுக்குப் பேட்டியளித்த கிருத்திகா, ""நல்லா போய்க்கிட்டிருந்த என் வாழ்க்கைல ஜீவஜோதி குறுக்கிட ஆரம்பிச்சா. அவளுக்கு ஏராளமான பணத்தை அண்ணாச்சி வாரிக் கொடுத்தார். இதைப்பத்தி அவர்ட்ட நான் கேட்டப்ப... "பாவம் அந்தப் பொண்ணு. டிராவல் பிசினஸ் பண்ண உதவி செஞ்சேன்'னார். ஆனா நாளாக.. நாளாக.. அண்ணாச்சியை ஜீவஜோதி வளைச்சிப்போட முயற்சி பண்ற விஷயம் என் காதுக்கு வந்துச்சு. சொல்ல வெக்கமாத்தான் இருக்கு. அந்தப் பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு. அப்படிப்பட்டவ, சினிமா நடிகைங்க போட்டுக்குவாங்களாமே.. அதுமாதிரி ஹார்மோன் ஊசிகளைப் போட்டுக்கிட்டு... அண்ணாச்சியை மயக்கப் பார்த்தா. ஆனா... விஷயம் இப்ப வேறமாதிரி போய்க்கிட்டிருக்கு. அண்ணாச்சிகிட்டயும் ஜீவஜோதிகிட்டயும் காசு வாங்கிய டேனியல்.. ஏதோ ஏடாகூடமா செய்ய.. இப்ப கொலையில் முடிஞ்சிருக்கு'' என்றார்.


அப்போது, கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட கோபத்தில் இருந்த ஜீவஜோதி, கிருத்திகாவின் குற்றச்சாட்டை மறுத்தார். அவங்க சொல்றது எல்லாமே பொய்... அபாண்டம். பணம்தான் முக்கியம்னு நினைச்சிருந்தா.. எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு அண்ணாச்சியையே கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்திருப்பேன். கொலை வழக்கை திசை திருப்புறதுக்காக ஆளாளுக்கு ஒவ்வொரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறாங்க. புருஷனைப் பறிகொடுத்த என்னை மேலும் நோகடிக்கிறாங்க'' என்று ஆவேசமானார். பரபரப்பான இந்த வழக்கில் அப்போது துப்பு துலக்கிய நக்கீரன், ரூ.3 கோடி பெறுமான சொத்துப் பத்திரத்தை ஜீவஜோதியிடம் தந்து, கன்வின்ஸ்’செய்து அழைத்து வருவதற்கு, அவருடைய பெற்றோரையே அண்ணாச்சி அனுப்பியதை விவரித்தது. சாந்தகுமாரைக் கடத்திய காரை ஓட்டிய டிரைவர், சென்னையிலிருந்து ராஜகோபால் காரை ஓட்டி வந்த டிரைவர், ஃபாலோ பண்ணிய காரை ஓட்டிய டிரைவர் என, மூன்று டிரைவர்களிடம்தான் பரம ரகசியம் அடங்கியிருக்கிறது’ என காவல்துறையின் நம்பிக்கையைப் பதிவு செய்தது. மேலும், டிரைவர் பட்டூர்ராஜன் கோர்ட்டில் சரணடைய.. டிரைவரின் வாக்குமூலம் பற்றிய பயத்தில் ராஜகோபால் இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

சபலம் மட்டுமல்ல. ஜோதிட நம்பிக்கையும் சேர்ந்துதான் அண்ணாச்சியை ஜீவஜோதி மீது தீவிரம் கொள்ள வைத்தது’ என்பதை அப்போது அடித்துச் சொன்ன நக்கீரன், ஆந்திர ஜோதிடர் ராஜகோபால் மனதில் விதைத்த விஷ விதையை, ‘""ஏற்கனவே ஒரு கல்யாணமான பெண்ணை நீங்க மூன்றாவது சம்சாரமா ஆக்கிக்கிட்டா... உங்க வாழ்க்கை இன்னும் மேம்படும். உங்க மூணாவது சம்சாரத்தின் வயித்தில் பிறக்க... அந்த கிருபானந்த வாரியாரே காத்துக்கிட்டிருக்கார்''’என்று, அந்த ஜோதிடரின் வாய்ஸை அப்படியே ரிபீட் செய்தது. வியாபாரத்தில் நாலும் தெரிந்த ராஜகோபாலுக்கு "சரின்னா யாரா இருந்தாலும் விடக்கூடாது. வேண்டாம்னா விலைமாதா இருந்தாலும் தொடக்கூடாது'’என்று "வசந்த மாளிகை'யில் சிவாஜி பேசிய வசனம் ஏனோ தெரியாமல் போய்விட்டது. அப்படி நடந்திருந்தால்... ஜீவஜோதி இணங்க மறுத்தும், அவரை அடைவதற்காக வெறிபிடித்து, பிரின்ஸ் சாந்தகுமாரைக் கொலை செய்வதற்கு ஆட்களை ஏவியிருக்கமாட்டார்.

கொலை செய்யும் அளவுக்கு ராஜகோபால் என்ன பெரிய தாதாவா? அந்த தைரியம் எப்படி வந்தது? சரவணபவன் கிளை எங்கெங்கு உள்ளதோ, அந்த லிமிட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கு, மாதம்தோறும் 100 சாப்பாட்டு டோக்கன் கொடுத்து கவனித்து வந்ததால், ‘போலீஸ் தன் பாக்கெட்டில்’ என்ற நினைப்பு அவருக்கு வந்துவிட்டது. கொலையே செய்தாலும், போலீஸ் அதிகாரிகளுக்குப் பணத்தை விட்டெறிந்து வழக்கிலிருந்து தப்பிவிடலாம் என்று அவர் போட்ட கணக்கு தப்பானது. ஏன் தெரியுமா? இதற்கான பதில் ஜீவஜோதியிடமிருந்தே வெளிப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததும்... ஜீவஜோதி, ""இந்த நேரத்தில் நீதிபதிகளுக்கு மட்டுமல்ல... மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ராஜகோபால் தந்த தொந்தரவை ஜெயலலிதாவிடம் நேரில் விளக்கினேன். அதனாலேயே, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், அவர் காலில் விழுந்து வணங்கியிருப்பேன். இறுதியில் நீதியே வென்றது'' என்று கூறியிருக்கிறார்.

"மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது' என்று உபதேசித்தவர் கிருபானந்த வாரியார். காங்கேயநல்லூரில் உள்ள வாரியார் சமாதியை (ஞானத் திருவளாகம்) பராமரித்து வருகிறார்கள் ஓட்டல் சரவணபவன் குடும்பத்தினர். பிறன்மனை நோக்கா ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காமல் ஒன்றல்ல.. இரண்டு மனைவிகளை ராஜகோபால் கதறவிட்டார். சென்னையில் பிற மாநிலத்தவர்களின் ஓட்டல்களே பெருகியிருந்த காலத்தில் உடுப்பி, ஆரிய பவன் சாம்ராஜ்ஜியங்களை தன் உழைப்பாலும் வணிக வியூகத்தாலும் பின்தள்ளி, "சரவண பவன்' எனும் புதிய ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சாதனைத் தமிழராகக் கொண்டாடப்பட்டவர் ராஜகோபால். சென்னையில் மட்டுமின்றி வெளிநாடுகள் வரை அவரது ஓட்டல் சாம்ராஜ்ஜியம் தரமானதாகவும் சுவையானதாகவும் கொடிகட்டிப் பறக்கிறது. புகழ்க்கொடி பறந்த நேரத்தில்தான் தனிப்பட்ட ஆசைகளின் எல்லை மீறலால், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியின் கரங்களால் தண்டிக்கப்பட்டு, காலத்தின் கரங்களால் மரணத்தில் தள்ளப்பட்டிருக்கிறார் ராஜகோபால்.
 

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.