Skip to main content

பிரதமருக்கு போன ரிப்போர்ட்! -டென்ஷனில் சீனியர் அமைச்சர்கள்! ரகசிய முயற்சிகளில் எடப்பாடி!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020
ddd


தமிழக அரசியல்வாதிகளின் பொம்மை விளையாட்டாக பல ஆண்டுகளாக உருட்டி விளையாடப் படுகிறது 7 தமிழர் விடுதலை. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்டமன்றத்திலும் நிறைவேற்றி கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. ஆனால் கடந்த 2 வருடங்களாக அதன் மீது ஒப்புதல் தராமல் கிடப்பிலேயே வைத்திருந்தார் பன்வாரிலால்.

பொதுவாக, அரசு அனுப்பும் கோப்புகளை கவர்னர் திருப்பி அனுப்பினால் அந்த கோப்புகளில் உள்ள பிரச்சனைகளை மீண்டும் வலியுறுத்தி இரண்டாவது முறையாக அதே கோப்புகளை கவர்னருக்கு அனுப்பி வைக்கும் சட்ட அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்படி அனுப்பப்படும் போது அதற்கு கவர்னர் ஒப்புதலளிக்க வேண்டும். இதற்கு காலவரம்பு ஏதுமில்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு, அமைச்சரவை தீர்மானத்தை கிடப்பில் போட்டுவிட்டார் கவர்னர்.

இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த ஒரு வழக்கில், கவர்னரின் செயல் குறித்த ஆதங்கத்தை வெளியிட்டனர் நீதிபதிகள். இதனையடுத்து, கடந்த புதன்கிழமை டெல்லிக்கு அவசரமாக அழைக்கப் பட்டார் கவர்னர் பன்வாரிலால். அவரது பயண விவரங்களை அறிந்து டென்ஷனில் இருக்கிறார் எடப்பாடி.

இது குறித்து டெல்லி சோர்ஸ்களிடம் நாம் விசாரித்தபோது, ""டெல்லியில் பிரதமர் மோடியை முதலில் சந்தித்தார் கவர்னர். பிரதமரின் செயலாளர்களும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் உடன் இருந்தனர். பிரதமரிடம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து இரு வாரங்களுக்கு ஒரு முறை டெல்லிக்கு அனுப்பிய ரிப்போர்ட் தொடர் பான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளேன் என சொல்லி, அவற்றை ஒப்படைத்திருக்கிறார்.

தமிழக அரசின் சீக்ரெட்ஸ் என எழுதப் பட்ட அந்த கோப்புகளில், முதல்வர் எடப்பாடி தொடங்கி அனைத்து அமைச்சர்களின் ஊழல் ரெக்கார்டுகள் இருப்பதை பிரதமரிடம் விவரித்த கவர்னர், எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் பினாமிகள் குறித்த விபரங்களையும் தெரிவித்திருக்கிறார். அப்போது, ""பழனிச்சாமி அரசின் 4 ஆண்டுகால நிர்வாகத்தை உன்னிப்பாகத்தான் கவனித்து வருகிறேன். விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்'' என்றிருக்கிறார் பிரதமர். ""தேர்தலில் தனித்து இயங்குவதற்காக பணத்தை பதுக்குகின்றனர். அதன் வழிகளை அடைக்க வேண்டும் என கடந்த மாதம் நீங்கள் அனுப்பிய ரிப்போர்ட்படிதான் தமிழகத்தில் வருமானவரித்துறை ஆக்ஷனில் இறங்கியுள்ளது'' என்றும் கவர்னரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிரதமர்.

இதனையடுத்து, 7 பேர் விடுதலை குறித்த விவகாரத்தில் கோர்ட் சொல்லியிருப்பதை வருத்தப்பட்டு பேசிய கவர்னர், மத்திய உள்துறையின் அறிவுறுத்தலின்படிதான் அதன்மீது முடிவெடுக்காமல் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்தார். நீதிமன்றங்கள் என்னை நோக்கி விமர்சனங்கள் செய்வதை தமிழக முதல்வரும் அமைச்சர்களும் ரசிக்கின்றனர் எனவும் சொல்லியிருக்கிறார். மென்மையாக சிரித்த பிரதமர் மோடி, பீஹார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழகம்தான் நம் இலக்கு என சொல்லி, உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை சந்திக்க கவர்னரை அனுப்பி வைத்தார்.

மோடியிடம் கூறியதையே அமித்ஷாவிடமும் ஒப்புவித்துள்ளார் கவர்னர். அப்போது, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான பல்நோக்கு விசாரணை குழுவின் விசாரணை முற்றுபெறாமல் இருப்பதால் 7 பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) கருத்தைக் கேட்போம். அதன் பதிலைப் பொறுத்து முடிவெடுத்து, கோர்ட்டில் தெரிவிப்போம் என கவர்னருக்கு தெம்பூட்டியிருக்கிறார் அமித்ஷா.

மேலும், தமிழக அரசின் டெண்டர் ஊழல்கள் முதல் கொரோனா ஊழல்கள் வரை அனைத்தும் ஆராயப்படுவதையும், உங்களின் ரிப்போர்ட்டுகளுக்கும், ஐ.பி. (மத்திய உளவுத்துறை) அனுப்பும் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதையும் கவர்னரிடம் அமித்ஷா பகிர்ந்துகொள்ள, ராஜ்பவனை எடப்பாடி மதிப்பதில்லை என்கிற தனது கோபத்தை அமீத்ஷாவிடம் கொட்டியிருக்கிறார் கவர்னர்.

மோடி மற்றும் அமித்ஷாவுடனான சந்திப்பை தொடர்ந்து, எடப்பாடிக்கு பயத்தை டெல்லி விரைவில் காட்டும் என்கிற நம்பிக்கையில் கவர்னரின் கோபம் தணிந்திருக்கிறது. இந்த நிலையில், கவர்னர் கொடுத்துள்ள எடப்பாடி அரசின் ஊழல் ரெக்கார்டுகளை ஆராயுமாறு மோடியின் செயலாளர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் ஒப்படைத்திருக்கிறது பிர தமர் அலுவலகம்‘என்று கவர்னரின் டெல்லி பயணத் தில் நடந்தவைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, டெல்லிக்கு கவர்னர் அழைக்கப்பட்டதிலிருந்தே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முன்னாள் கேரளா கவர்னரும் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதியுமான சதாசிவத்தின் உதவியை நாடியிருந்தார் எடப்பாடி. அதேபோல, பிரதமர் அலுவலகத்தில் தொடர்புவைத்துள்ள தனது சமூக தொழிலதிபர்கள் மூலமாகவும் முயற்சித்தார்.

அ.தி.மு.க. அமைச்சர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் டெல்லியில் துவங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள் எடப்பாடியையும் மூத்த அமைச்சர்களையும் டென்சனாக்கியிருக்கிறது. இதனால் சில முக்கிய டெண்டர் விவகாரத்தில் கூட எடப்பாடியால் கவனம் செலுத்த முடியவில்லை. அந்த விவகாரத்தை கிடப்பில் வைத்துவிட்டு டெல்லியை சமாதானப் படுத்தும் ரகசிய முயற்சிகளில் குதித்துள்ளார் என்கிறார்கள் மத்திய உளவுத்துறையினர்.

-இரா.இளையசெல்வன்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.