Skip to main content

எடப்பாடி எடுக்கச் சொன்ன லிஸ்ட்! கோபத்தில் அமைச்சர்கள்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

eps


ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் முன்னெடுக்கும் கரோனா நிவாரண உதவிகள் குறித்து உண்மையான ரிப்போர்ட் வேண்டுமென சமீபத்தில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி. இந்த உத்தரவு சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் தெரிந்து எடப்பாடி மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். 
 

                     
குறிப்பாக, வட மாநிலத்திலுள்ள சீனியர் அமைச்சர் ஒருவர், சக அமைச்சர்களிடம், இது குறித்து பகிர்ந்துகொண்ட போது, முதலில் இவரது மாவட்டமான சேலத்தில் என்ன நடக்கிறது? குறிப்பாக, அவரது தொகுதியான எடப்பாடியில் என்ன நடக்கிறது? எனத் தெரிந்து கொண்டு அதன் பிறகு நம்மை வேவு பார்க்கட்டும். அவரை விட நாம் நன்றாகத்தான் செய்து வருகிறோம். என்ன, அவரைப் போல நாம் விளம்பரப்படுத்திக் கொள்வது கிடையாது. நிவாரண உதவிகளில் என் மாவட்டத்தில் எந்தப் பிரச்சனையாவது வந்ததா? இல்லை. அவர் சொல்வதற்கு முன்பே அமைச்சர் என்கிற முறையில் என் மாவட்ட மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கையோ அதைச் செய்து வருகிறேன் எனப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.  
                

சீனியர் அமைச்சர் ஒருவரின் இந்த ஆதங்கம் உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே தனது மாவட்டத்தில் அதுவும் தனது தொகுதியில் என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து ரிப்போர்ட் தருமாறு உளவுத்துறையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர். அதேசமயம், மாவட்ட கலெக்டரிடமும் ரிப்போர்ட் கேட்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இரண்டு தரப்பினரிடமிருந்தும் எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதில், இரண்டு ரிப்போர்ட்டுகளும், சேலத்திலுள்ள அ.தி.மு.க.வினர் முதல்வரை ஏமாற்றுகிறார்கள் என்கிற ரீதியிலே இருந்தனவாம். தவிர, இரண்டு ரிப்போர்ட்டும் ஏறக்குறைய 80 சதவீதம் ஒத்துப்போயிருக்கிறது. 
                   


அதாவது,  தனது தொகுதியிலுள்ள 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் முழுமையாகப் போய்ச்சேர வேண்டும் என அங்குள்ள பொறுப்பாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்திருக்கிறார் எடப்பாடி. அதற்கான நிதியையும் ஒதுக்கினார். நிதியைப் பெற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், குறிப்பாக எடப்பாடிக்கு நம்பிக்கையானவர்கள், தரமான நிவாரணப் பொருட்களை வழங்காமல் அதிகாரிகளின் துணையுடன் ரேசன் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளைப் பெற்று அதனை ஏழைகளுக்கு விநியோகித்திருக்கிறார்கள். இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம் புகாராகச் சொல்லியிருக்கிறார்கள் எடப்பாடி தொகுதிவாசிகள். இந்தச் சம்பவங்கள்தான் இரண்டு ரிப்போர்ட்டிலும் இருந்துள்ளது. ரிப்போர்ட்டை படித்துப் பார்த்துவிட்டு நொந்து போயிருக்கிறார் எடப்பாடி என்கிறது அதிமுக தலைமைக்கழக வட்டாரம்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.