Skip to main content

"ராகுலின் தமிழக பேச்சே பாஜகவின் தீவிரத்துக்குக் காரணம்; எடப்பாடி எல்லோரும் ஓடி விடுவார்கள் என்ற பயத்தினால் இதை..." - மருத்துவர் காந்தராஜ்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

கர

 

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அடிக்கடி வந்து கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில் பாஜகவைச் சேர்ந்த பலர் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மோடி, அமித்ஷாவின் பயணங்கள் அதிகப்படியான கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்களின் பயணம் தேர்தல் அடிப்படையிலானதா என்பது குறித்து மருத்துவர் மற்றும் அரசியல் விமர்சகர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 


கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் தமிழகம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சென்ற நிலையில் அடுத்த நாளே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் கமலாலயம் சென்று கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். இவர்களின் வருகையில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முன்னெடுப்புகள் இருந்ததாகப் பரவலாகப் பேசப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவற்றைப் பற்றி அவர் பேசியதாகக் கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதுதொடர்பாக உங்களுடைய கருத்து என்ன? 

 

தேர்தல் வரும் சமயத்தில் யார் வந்தாலும் இதைத்தான் கூறுவார்கள். சொந்தக்காரங்க வீட்டில் துக்க காரியத்துக்கு வந்தால் கூட கூட்டணி பேச்சுவார்த்தையா என்ற கேள்வி எழாமல் இருக்காது. அவர்களுக்குத் தமிழகம் எப்போதுமே தோல்வியைப் பரிசளித்து வரும் ஒரு இடம். ஆகையால் அவர்கள் இங்குத் தீவிரமாகக் கவனம் செலுத்தப் பார்க்கிறார்கள். இதனால் எப்படிப் போனால் யாரை வழிக்குக் கொண்டு வந்தால் வெற்றி வசப்படும் என்ற யோசனையிலிருந்து வருகிறார்கள். ஆகையால் தன்னால் ஆன சாம, பேத செயல்களை எல்லாம் செய்ய முயற்சி செய்கிறார்கள். 

 

அதையும் தாண்டி ராகுல்காந்தி சும்மா இல்லாமல் தமிழகத்தில் உங்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்துள்ளார். அது அவர்களை வெகுவாக சீண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் மிக ஆக்ரோஷமாக ராகுல் பேசினார், உங்கள் ஜென்மத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் வெற்றிபெற முடியாது என்று தெரிவித்திருந்தார். அதைப் பொய்யாக்க வேண்டும் என்று அவர்கள் தீவிரமாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதனால் கட்சியினருக்கு ஒரு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் அவர்கள் ஒவ்வொருவராகத் தமிழகம் வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழகத்திலேயே அதிக நேரம் செலவிடுவார்கள். ஆனால் முடிவு என்ற ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் விரைவில் காண்பார்கள்.

 

தமிழகம் வந்த பிரதமரைத் தனியாகச் சந்தித்துப் பேச எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு முயன்றதாகவும், ஆனால் யாரையும் சந்திக்க அவர்கள் விரும்பவில்லை என்றும் ஒரு தகவல் வெளியானது. அதிமுக எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

இதில் நிறையக் கஷ்டத்தில் இருப்பவர் எடப்பாடி, அவருடைய நண்பர்கள் வீட்டில் அதிரடியான சோதனைகள் நடந்து முடிந்துள்ளது. அதில் சில சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளார்கள். அவர்கள் மலையளவு சொத்துக்களை வைத்திருந்தாலும் சிறிய கல் அளவு தற்போது கைப்பற்றியுள்ளார்கள். ஆனால் அந்த சின்ன கல்லைப் பெயர்க்கும்போது பெரிய மலையே விழுந்துவிடும். அதனால்தான் சொல்கிறேன். எடப்பாடிக்குப் பெரிய சிக்கல் வர இருக்கிறது. இவர் பெரிய தலைவர்களைப் பார்ப்பதால்தான் எடப்பாடியிடம் உள்ள கூட்டமே அவரிடம் தொடர்ந்து இருக்கிறது. அந்த நம்பிக்கை போய்விட்டது என்றால் எடப்பாடியிடம் இருந்து அனைவரும் பிரிந்து வந்துவிடுவார்கள். 

 

அதனால்தான் எடப்பாடிக்கு மிகுந்த கஷ்டமான சூழ்நிலையாக தற்போது இருக்கிறது. தமிழகம் வரும் அவர்களைக் கட்டாயம் சந்தித்துப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. தான் அவர்களோடு நெருக்கமாக இருக்கிறேன் என்பதை அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடன் இருப்பவர்களுக்குக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் அவர்கள் சந்திக்க மறுத்தாலும் அவர்களைத் தேடி இவர்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால் பன்னீர் தரப்புக்கு அந்தத் தேவை இல்லை. ஒரு எம்பி இருந்தாலும் அதை வைத்துச் செய்ய வேண்டியதை அவர் செய்து கொள்கிறார். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பன்னீர் தரப்பு செயல்படுவதால் அவர்களுக்கு உண்டான நெருக்கடி குறைந்துள்ளது.

 

 

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்