Skip to main content

மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது..! பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..!

Published on 30/11/2020 | Edited on 03/12/2020

 

ddd

 

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

 

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது அவர், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பிறகு விற்கலாம், அப்படியான ஒரு நல்ல காரியத்தை நாங்கள் செய்திருக்கிறோம் என்று மோடி சொல்லி வருகிறார். 

 

உண்மையில் விவசாயி இருப்பு வைக்க முடியாது. பெரிய வியாபாரிகள்தான் இருப்பு வைத்துச் சம்பாதிப்பார்கள். இதனை, பா.ஜ.க தலைவர்கள் உள்பட மோடி வரை அனைவரும் மறுத்தார்கள். பெரம்பலூரில் உள்ள குடோனில் வெங்காயத்தை டன் கணக்கில் பதுக்கி வைத்ததைப் பறிமுதல் செய்ததோடு நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க என்ன சொல்கிறது?

 

செப்டம்பரில் சட்டத்தை நிறைவேற்றினார்கள். மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் வெங்காயத்தை யார் இருப்பு வைத்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறதே?. 

 

ஒரு விவசாயி தன்னுடைய பொருளை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சென்று யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்கிறார்கள். எந்த ஒரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் அதுபோல் செய்வது நடைமுறையில் சாத்தியமே கிடையாது. 

 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு எதுவாக இருக்கட்டும், உடனே அதனை விற்க வேண்டும், அந்த காசை வாங்கி கடனை அடைக்க வேண்டும், குடும்பச் செலவு செய்ய வேண்டும், மறுபடியும் சாகுபடி செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதுதான் யதார்த்தமான நிலைமை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பொருளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பது என்பது சாத்தியமே கிடையாது. அதேபோல் இருப்பு வைப்பதும் சாத்தியமில்லை. 

 

விலை குறையாமல் இருப்பதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்யும்போது குறிப்பிடப்பட்டுள்ள தொகையைக் கொடுக்கவில்லை என்றால், புகார் செய்து அதனை வசூல் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது. 

 

cnc

 

நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், கரும்பு விவசாயி கரும்பை உற்பத்தி செய்து ஆலைகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆலைதான் கரும்பின் விலையைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் அதனுடன் கூடுதலாகக் கொடுப்பதை தீர்மானிக்கிறது. ஆனால், அந்தத் தொகைகளை விவசாயிகள் பெற முடியவில்லையே. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆலைகளிலும் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது. 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள்தான் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கார்ப்பரேட் முதலாளிகள் பலமடைய வேண்டும் என்பதற்காக, நன்றி விசுவாசத்தோடு, அரசாங்கத்தின் சட்ட ரீதியான உதவிகளைக் கொண்டுவருவதற்கு, பா.ஜ.க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக. 

 

 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவிற்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Arvind Kejriwal, Kavita extended court custody

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங், சன்பிரீத் சிங் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவின் இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் சிங் ஜாமீனில் இருந்து வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, சன்பிரீத் சிங் ஆகியோர் திகார் சிறையில் இருந்து காணொளி மூலம் இன்று (23.04.2024) டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து மூவரின் நீதிமன்ற காவலையும் மே 7 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Arvind Kejriwal, Kavita extended court custody

முன்னதாக திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கப்பட்டது. உடலில் சர்க்கரை அளவு கூடியதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்படி குறைந்த அளவு இன்சுலின் மருந்துகள் இரண்டு யூனிட்கள் வழங்கப்பட்டது என திகார் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக் கோரி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.