Skip to main content

அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு!!! இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

pulwama attack


 

ஜம்மு, சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பிலிருந்து (channi rama transit camp) 78 பேருந்துகளில், சுமார் 2500 ஜவான்கள் ஸ்ரீநகர், பக்‌ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்பிற்கு (bakshi stadium transit camp) செல்வதுதான் பயணத்தின் நோக்கம். பிப்ரவரி 14 காலை 3.30 மணிக்கு தொடங்கியது இந்த பயணம்... ஒரே நேரத்தில் எப்படி இத்தனை வீரர்களை அனுப்பினார்கள் என்ற கேள்வி எழலாம். முந்தைய நாட்களிலேயே  ஒவ்வொரு பிரிவாக பயணத்தை தொடங்கியிருக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாததால் முன்னர் கிளம்ப வேண்டிய பிரிவுகளும் அப்படியே தங்கின. பின்னர் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்பு அனைவரும் புறப்பட்டுள்ளனர்.



கிட்டதட்ட இலக்கை நெருங்கிவிட்டனர், இன்னும் 30 கிலோமீட்டர்களே இருந்தநிலையில், காக்காபோரா, லேல்கர் இணைப்பு சாலையிலிருந்து ஒரு எஸ்.யு.வி. வாகனம், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்துகொண்டிருந்த சாலைக்கு அருகிலுள்ள சாலையில் வந்தது... சி.ஆர்.பி.எஃப். படை வாகனங்களுக்கு என ஒரு பாதையும், பொதுமக்கள் செல்வதற்கென ஒரு பாதையும் தனித்தனியாக இருந்தது. இரண்டிற்கும்  இடையில் செண்டர் மீடியன் (centre median) எனப்படும் இடைவெளி மட்டுமே இருந்தது. மாலை 3.30 மணிக்கு திடீரென அந்த எஸ்.யு.வி. வாகனம் அந்த செண்டர் மீடியனை தாண்டி, ராணுவ வீரர்கள் வந்த 5வது பேருந்தின் இடப்பக்கத்தில் இடித்தது. அப்போது காருக்குள் அதற்குள் இருந்த வெடிபொருட்கள் வெடித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அந்த வாகனத்தில் கிட்டதட்ட 150 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. 

 

pulwama attack


இந்த தற்கொலை தாக்குதல் நடத்திய அகமது தார் என்பவனின் உடல் 80 மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி முஹமத் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதல் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஒருவரின் கூற்று இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டியுள்ளது. அவர்தான் சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா. அவர் இந்தியா டுடே க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார். 
 

வீரர்கள் வந்த பேருந்து மிக வேகமாக தங்களது இலக்கை அடைந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய ஒரு வாரம் ஜம்மு-ஸ்ரீநகருக்கு இடையேயான நெடுஞ்சாலையில் போக்குவரத்து முதலான அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப்பட்டது. இவைகளுக்கு பின்னரே, நேற்று வீரர்கள் தங்களது பயணத்தைத் தொடங்கினர். வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டது. அந்த நெடுஞ்சாலையில் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை அத்தனையையும் தாண்டி நூற்றுக்கணக்கான கிலோ அளவுள்ள வெடிப்பொருள்களைக் எடுத்துவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லையென்றால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’


 

pulwama attack




தீவிரவாதிகள் எந்தநேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை குறிப்பிட்டுக் கூறவில்லை". என மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிற்கு (ஆங்கிலம்)
பேட்டியளித்துள்ளார். 


மேலும், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில், காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது. யாரோ சிலரின் கவனக்குறைவு, விலைமதிப்பற்ற உயிர்களை விலையாக பெற்றுள்ளது...