Skip to main content

பிரசாந்த் கிஷோர் பட்டியலில் நமக்கு ஒரு தொகுதி கூட இல்லையா? அதிர்ச்சியில் திமுக மகளிர் அணி!!!

Published on 05/11/2020 | Edited on 06/11/2020
ddd

 

ஜெ. இருந்தவரை தேர்தல் பணிகளில் எப்போதும் அ.தி.மு.க.தான் முந்திக்கொள்ளும். ஆனால், இந்த முறை தி.மு.க. தரப்போ தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பொதுக் கூட்டங்கள் அறிவித்தல், மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு என டாப் கியரில் வேகமெடுத்துள்ளது.

 

மாவட்டவாரியாக முப்பெரும் விழா கூட்டங்களை இணைய வழியாக நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமை, "தமிழகம் மீட்போம்' என்ற பெயரில் நவம்பர் 1, 2, 3, 5, 7 ஆகிய தேதிகளில் முறையே ஈரோடு, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் தேர்தல் சிறப்புக் கூட்டங்களை நடத்துகிறது.

 

அதேபோல, தி.மு.க. நிர்வாகிகளிடம் நிலவும் அதிருப்திகளை களைந்து கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தவும், ஒன்றிணைந்து தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவும், தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் தரும் அசைன்மெண்ட்டுகளை செயல்படுத்தவும் தமிழகத்தை தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலமாக பிரித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். தேர்தலுக்காக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த மண்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ள நிலையில், கடந்த 21-ந்தேதி சென்னை அறிவாலயத்தில் நடந்த கொங்கு மண்டல ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணியை தி.மு.க.வின் மேற்கு மண்டல பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் ஸ்டாலின்.

 

கொங்கு மண்டலத்தில் உயர பறக்கும் அ.தி.மு.க. செல்வாக்கையும் அ.தி.மு.க.வின் கொங்கு வேளாள கவுண்டர் அமைச்சர்களின் சாதி அரசியலையும் உடைக்கவே மேற்கு மண்டலத்திற்கு பொறுப்பாளர் நியமனம் நடந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வைவிட 3 சதவீத சரிவை தி.மு.க. சந்திப்பதாக ஏற்கனவே ஒரு ரிப்போர்ட்டை தந்துள்ளது ஐ-பேக் நிறுவனம். அந்த சரிவை சசி செய்ய ஐ-பேக் தரும் யுக்திகளை மேற்கு மண்டலத்தில் அமல்படுத்தும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் ஸ்டாலின்.

 

அதேபோல, தென் மண்டல பொறுப்பாளராக ஏ.வ.வேலு, கிழக்கு மண்டல பொறுப்பாளராக சண்முகம், வடக்கு மண்டல பொறுப்பாளராக ஆ.ராசா ஆகியோர் நியமிக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். மாவட்ட செயலாளர் பதவிகளில் தலித் சமூகம் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள அதிருப்திகளை சரி செய்யவும் ஆ.ராசாவுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த 4 மண்டலங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட பொறுப்பாளராக கே.என்.நேருவை நியமிக்கவும் தீர்மானித்துள்ளார் ஸ்டாலின். வீக்கான ஏரியாக்களை கண்டறிந்து வேகம் காட்டி வருகிறார்கள் மண்டல பொறுப்பாளர்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.

 

இதற்கிடையே, தொகுதிக்கு 3 பேர் என்கிற கடைசிக்கட்ட வேட்பாளர் பட்டியலை நவம்பர் 15-க்குள் இறுதி செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரசாந்த் கிஷோருக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே தொகுதிக்கு 5 பேர் எனத் தயாரித்த பட்டியலை பிரசாந்த் கிஷோர் கடந்தவாரம் மீண்டும் ஆய்வு செய்திருப்பதாகவும், நவம்பர் 15-ந்தேதி அந்த இறுதி பட்டியல் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க.வின் மேல்மட்ட தொடர்புகளிடம் எதிரொலிக்கிறது.

 

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘ஐ-பேக் தரும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்படியே தேர்வு செய்தால், அது மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. குறிப்பாக, தி.மு.க. மகளிர் அணியினரிடம் கொந்தளிப்பு உருவாகும். அதாவது, வேட்பாளர்கள் குறித்து இதுவரை பிரசாந்த் கிஷோர் கொடுத்த 2 பட்டியல்களிலும் பெண்களுக்கான போதிய பிரதிநிதித்துவம் தரப்படவே இல்லை.

 

சுருக்கமாக சொல்வதானால், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் பெண்களுக்காக ஒரு தொகுதியைக்கூட தேர்வு செய்யவில்லை. தலைநகர் சென்னையிலேயே பெண்களுக்கு வாய்ப்பில்லை என்பது துரதிர்ஷ்டமானது. நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக வலிமையான போராட்டங்களை நடத்தியிருப்பதுடன் தேசிய அளவில் குரல் கொடுத்தும் வருகிறது தி.மு.க..

 

அப்படியிருக்கும் சூழலில், தி.மு.க. மகளிர் அணியினருக்கான வாய்ப்புகள் தேர்தலில் மறுக்கப்பட்டால் கட்சிக்குள் அதிருப்திகளை வெடிக்கச் செய்யும். அதேபோல, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சீனியர்கள் பலரை தவிர்த்து புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்க ஐ-பேக் தயாராக இல்லை. அதேசமயம், தி.மு.க.வின் கிச்சன் கேபினெட்டின் ஆதரவைப் பெற்ற சிலரின் பெயர்களை மட்டும் பரிசீலித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். மொத்தத்தில் ஐ-பேக்கின் இறுதி பட்டியலால் சில பூகம்பங்கள் வெடிக்கலாம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

தேர்தலில் மகளிருக்கு 33 சதவீத வாய்ப்புகளை தராவிட்டாலும் குறைந்தபட்சம் 20 சதவீத இடங்களையாவது ஒதுக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.க. மகளிர் அணியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐ-பேக்கின் வேட்பாளர் பட்டியல் தி.மு.கழகத்தில் கலகத்தை உருவாக்க காத்திருக்கிறது.

 


 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.