Skip to main content

என்னையும் வழக்குல சேர்த்துட்டாங்களா? வீடியோவில் போலீஸ் அதிகாரி...  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

"ஹலோ நக்கீரனா? பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் மறைக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்...' என, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் நமது லைனில் வர, அவரைச் சந்தித்தோம்.

"அத்தனையும் உண்மை' என தன் நெஞ்சில் கைவைத்து அந்த அதிகாரி சொன்னாலும் கூட, அவை அப்படியே எழுதிவிட முடியாத ரகத்தைச் சேர்ந்தது. அதே நேரத்தில், தவிர்க்க முடியாதது என்பதால், குறிப்பாகத் தந்திருக்கிறோம்.

 

incident



"பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் செல்போன்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தது உண்மைதான்! அவற்றை ஆராய்ந்த கோவை மாவட்ட அதிகாரிகளான ‘"ராஜன்'’ ஆனவரும், ‘"ராமன்'’ ஆனவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள். அந்த அளவுக்கு அந்த வீடியோக்களில் மிக முக்கிய அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள், காவல்துறை அதிகாரிகள் என பலரும் பெண்களுடன் நெருக்கமாக இருந்தது பதிவாகியிருந்தது. குறிப்பாக, "நாதன்'’ஆன அந்த அதிகாரி, பல வீடியோக்களில் காணப்பட்டார்.

சக அதிகாரி என்றாலும், "இந்த வீடியோக்கள் லீக் ஆனால் உனக்கு எதிர்காலம் என்பதே இல்லாமல் போய் விடும்' என மிரட்டப்பட்டார் அந்த அதிகாரி. அதனைத் தொடர்ந்து “இந்த வீடியோக்கள் வெளிவராமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் கொடு.

இல்லையென்றால், பாலியல் வழக்கில் நீயும் கம்பி எண்ண வேண்டியதுதான். இதை நான் சொல்லவில்லை. பெரிய அதிகாரிதான் உன்கிட்ட சொல்லச் சொன்னாரு என்று பேரம் பேச, அடித்துப்பிடித்து அந்தத் தொகையை அவர் ‘ரெடி’ செய்து கொடுக்க, அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

அந்த அதிகாரியிடமிருந்து மட்டுமல்ல, சில அரசியல் பிரமுகர்களிடமும் வீடியோக்களை அழிப்பதற்காகக் கறந்த பணம் ரூ.6 கோடிக்கும் மேலே. அந்தப் பணத்தில்தான், பிளாக் மெயில் அதிகாரிகள் இருவரில் ஒருவர், வடவள்ளி அண்ணா நகர் ஏரியாவில், தன்னுடைய மனைவி பெயரில் ஒண்ணே முக்கால் கோடிக்கு பெரிய பங்களா வாங்கி, பதிவும் செய்திருக்கிறார்.


அவர் இடமாற்றம் செய்யப்பட்டதும், அந்த இடத்துக்கு வந்தார் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவ்வளவுதான்! வீடியோவில் சிக்கி பணத்தை இழந்த அதிகாரி, அவருக்கு ‘ஆல் இன் ஆல்’ ஆகிவிட்டார். உயரதிகாரிக்குத்தான் நம் மொழி தெரியாதே! விட்ட பணத்தை இத்துறையில் சம்பாதித்தே ஆகவேண்டும் என்ற வெறியோடு லஞ்சத்தை வாங்கிக் குவிக்கிறார்.

இவருக்காக ‘மனோ’ தைரியமுள்ள அதிகாரியும், "தவ'மான அதிகாரியும் வசூல் வேட்டை நடத்துகின்றனர். ஆக, வீடியோ அதிகாரி உள்ளிட்ட மூவரும், இந்த மாவட்டத்தில் ‘மூவேந்தர்கள்’என்றே அழைக்கப்படுகின்றனர்.

மாதம்தோறும் ரூ.15000 வரை வீதம், இந்த மாவட்டத்திலுள்ள 35 காவல் நிலையங்களில் இருந்தும், இவர்களுக்கு லஞ்சம் போய்ச் சேர்கிறது. ’மூணு நம்பர் லாட்டரி’ நடத்துபவர்கள், கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என சட்ட விரோத கும்பல் எதையும், பணம் கறக்காமல் இவர்கள் விட்டு வைப்பதில்லை. தற்போது நடந்த காவலர் தேர்விலும்கூட, சிலரிடம் தலைக்கு ரூ. 6 லட்சம் என லஞ்சம் வாங்கினார்கள்.


மூவேந்தரில் ஒருவரான ’மனோ’ தைரியமுள்ளவர், பெரியநாயக்கன்பாளையம் பில்லூர் டேம் வனப்பகுதிக்கு, கேப்டன் பிரபாகரன் விஜயகாந்த் ஸ்டைலில், அதுபோலவே உள்ள ஜீப்பில் சென்று கள்ளத்துப்பாக்கி மூலம் வேட்டையாடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட விலங்குகள் பில்லூர் கெஸ்ட் ஹவுஸுக்கு கொண்டுபோய் சமைக்கப்படும்.

மற்ற இருவரும் அங்கு சேர்ந்துகொள்ள, மூவேந்தர்களும் ‘அமர்க்களம்’ பண்ணுவார்கள். மதுவும் இறைச்சியும் போதாதென்று, ஒரு பிரிவில் பணிபுரியும் பெண்களை ’கரெக்ட்’ செய்து அங்கே அழைத்துச் சென்று, மூவரும் போடும் ஆட்டம் இருக்கிறதே! ரொம்பவும் கொடுமை சார்'' என்றார் நம்மிடம் அந்த அதிகாரி.

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டார் என்பதற்காக ரூ.25 லட்சத்தை அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதல்லவா? அதன் பின்னணியில் இருக்கிறார் வீடியோ அதிகாரி.

எப்படியென்றால், அந்தப் பெண்ணின் பெயரைப் பதிவு செய்துகொடுத்ததே இவர்தான். பண விஷயத்தில் நம்பிக்கையானவர் என்று பெயரெடுத்த தனக்குக் கீழுள்ள அதிகாரி என்பதால், அந்த பத்திரிகை செய்திக் குறிப்பை படித்துப் பார்க்காமலே கையெழுத்திட்டார். தன்னிடமே பிளாக் மெயில் செய்து பணம் பறித்த மேலதிகாரி என்பதால், அவருக்கு ‘பண தண்டனை’வாங்கிக் கொடுத்து பழி தீர்த்துக் கொண்டார் வீடியோ அதிகாரி'' எனச் சொல்லும் காக்கிகள் வட்டாரம், மேலும் சில விவகாரங்களைக் கசியவிட்டது.

தன்னை அழகாக காட்டிக்கொள்வதில் ஆர்வமுள்ள அந்த ‘வீடியோ அதிகாரி, பெண்கள் விஷயத்தில் ரொம்பவே வீக்! ‘மனோ’ தைரியமுள்ள அதிகாரியும் அப்படித் தான்!

சூலூர் காவல் நிலையத்தில் ‘வீடியோ அதிகாரி’ பணிபுரிந்தபோது, கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவனும் மனைவியும் வந்தார்கள். பெண்ணின் அழகில் கிறங்கிய வீடியோ அதிகாரி, மிரட்டியே அவளுடைய கணவனை காவல் நிலையத்திலிருந்து ஓடச் செய்தார். அந்தப் பெண்ணிடம் "நானும் நீயும் ஒரே சாதி. உனக்கு சகலமுமா இனி நான் இருக்கிறேன்' என்று தன் சாதியை மறைத்துப் பேசி ’திருமணம்’ செய்துகொண்டார்.

சனி, ஞாயிறுகளில், ஆனைமலை எஸ்.ஆர்.ரிசார்ட்ஸ் க்ரீன் ஹோமிலும், பொள்ளாச்சி ஃபார்ம் ஹவுஸிலும் நண்பர்கள் சகிதமாக இளம்பெண்களுடன் அவர் கூத்தடிப்பதெல்லாம் வழக்கமாக நடப்பது தான். அப்படி நடந்த போது தான், திருநாவுக்கரசு கூட்டாளிகளின் வீடியோகேமராவில் இவர் சிக்கினார்.

வீடியோ அதிகாரி இப்படியென்றால், ‘மனோ' தைரியமுள்ள அதிகாரியோ, கஞ்சா, பிராத்தல் புரோக்கர்களை கைவசம் வைத்துக் கொண்டு, அழகு மைனாக்களை அனுபவிப்பதை பொழுதுபோக்காகக் கொண்டவர். அப்படித்தான், கஞ்சா விற்பவனின் மனைவிக்கு ‘பிராக்கெட்’ போட்டுவிட்டார். அடுத்து இவர், இயற்கைசார் இடங்களில் இயங்கும் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்குச் செல்லவிருக்கிறார்.

கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் அழகிகளிடம் வசூல் என, அந்த வரும்படி மூலம், இன்னும் சில புல்லட் பைக்குகள், கார்களை வாங்கிக் குவித்துவிடும் திட்டத்தில் இருப்பதாக, அவரே உளறிக்கொண்டிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமே விளக்கம் கேட்டோம்.

"நாதன்'’ஆனவர் நம்மி டம், நான் வீடியோக்களில் இருந்தேனா? யாரு இப்படியெல்லாம் சொல்லுறது? கடைசில என்னையும் பொள்ளாச்சி பாலியல் வழக்குல சேர்த்துட்டாங்களா? சொல்லுறது இருக்கட்டும். அதுக்கு ஆதாரம் வேணும்ல.

எனக்கு மேல எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. அப்புறம் சி.பி.சி.ஐ.டி. மேலதிகாரிகளெல்லாம் இருக்காங்க. சாதாரண இன்ஸ்பெக்டர் போஸ்ட்ல நான் இருக்கேன். என்னை வாட்ச் பண்ணுறதுக்குன்னே ஆளுங்க இருக்கிறப்ப எப்படிங்க நான் தப்பு பண்ணுவேன்?'' என்று விவரமாகப் பேசினார்.

"மனோ'கரமான அதிகாரியைத் தொடர்புகொண்ட போது, "நான் ரொம்ப நேர்மையா இருக்கிறதுனால தான், இங்கே எஸ்.ஐ.யா போட்டிருக்காங்க. பெரியநாயக்கன்பாளையத்துல இருக்கும் போது காட்டுக்கு வேட்டையாடப் போனேனா? இதெல்லாம் எனக்கு வேண்டாதவங்க கிளப்பி விடறது'' என்று ஒரே போடாகப் போட்டார். அதுதான் பணம் வாங்கிக் கொண்டு வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டார்களே! உலகமே உற்று நோக்கும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மறைக்கப்பட்ட விவகாரங்கள் இன்னும் இருக்கு...!

 

 

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.