Skip to main content

''என் கொள்கை -எம்ஜிஆர் தெய்வம்!” -அதிரடி அரசியலால் ‘உயர்ந்த’ ஜேப்பியார்!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

இன்றைய நாளிதழ்களில் ஜேப்பியார் போட்டோவுடன்  மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி விளம்பரத்தைக் காண முடிந்தது.  மதுரை – செங்கோட்டை ரயிலில் நம்முடன் பயணித்த முதியவர் ஒருவர், நாளிதழின் அந்தப் பக்கத்தைப் புரட்டினார். அப்போது அவருடைய 9 வயது பேரன் அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, “யாரு இந்தத் தாத்தா?” என்று கேட்டான். தன் கையில் எம்.ஜி.ஆர். படத்தைப் பச்சை குத்தியிருந்த அந்த முதியவர்  “ஜேப்பியார்..” எனச்சொல்லிவிட்டு, பழைய நினைவுகளில் மூழ்கினார். ‘பெரியவரே! ஜேப்பியார் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியுமா?’ என்று நாம் கேட்க, கண்களை மூடிப் பெருமூச்சு விட்டார். பிறகு, ஆர்வத்தோடு பேசினார்.

My Principle - The MGR God-jpr


இன்று ஜேப்பியார் நினைவு நாள். அதிமுக அனுதாபியான அந்த முதியவர் கூறிய விபரங்கள் இதோ - 

ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தார். 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்ததும், ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், “கவலையே படாதீங்க. விரட்டிடலாம்..” என்று ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டார்.  

 

My Principle - The MGR God-jpr


எம்.ஜி.ஆர். இறந்தவுடன்,  அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் மெரினா பீச் ஐ.ஜி. அலுவலகம் எதிரில், எந்த இடத்தில் எந்தமாதிரியான அமைப்பில் சமாதி அமைக்க வேண்டும் என்று நாவலர் நெடுஞ்செழியனும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். ஜேப்பியாரோ, அன்றைய உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனோடு சேர்ந்துகொண்டு, ‘அண்ணாவின் இதயக்கனி என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால், அண்ணா சதுக்கத்துக்கு அருகில்தான் அவரைப் புதைக்க வேண்டும்.” என்று கடுமையாக வாதிட்டு, நாவலர் நெடுஞ்செழியனையும் சம்மதிக்க வைத்தார்கள்.

 

​jpr


ஜேப்பியார் எப்போதுமே அதிரடி அரசியல்வாதிதான். அதனால் ‘மாவீரன்’ என்ற அடைமொழி, அவருடைய பெயருக்கு முன்னாள் சேர்ந்துகொண்டது. திமுக ஆட்சியின்போது, வழக்கு பதிவாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். மேடையிலும்கூட அனல் பறக்கப்பேசுவார் ஜேப்பியார்.  அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு  1982-ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியதை உதாரணமாகச் சொல்லலாம்.

“டேய்.. எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன்தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன்.”


கொள்கையே தனக்கு இல்லை என்று  பேசிய ஜேப்பியார்தான், 1988-ல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித்தந்தை ஆனார்.  அது இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது. ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா மருத்துவக் கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், எஸ்.ஆர்.ஆர்.பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய அவர், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் பால், ஜேப்பியார் இரும்பு, ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் உப்பு, தொழில்நுட்ப பூங்கா என பிற தொழில்களிலும் ஈடுபட்டார். அட, பத்திரிக்கைத் துறையையும் அவர் விட்டுவைக்கவில்லை.

 

​jpr

 

ஒரே ஒரு குறைதான்! எம்.ஜி.ஆரைப் போல் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற நினைப்பு உள்ளுக்குள் இருந்தது. அதற்கான நேரமும் வந்தது. எம்.ஜி.ஆர். நடித்த சில படங்கள் பூஜையோடு, சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டு, அப்படியே நின்றிருக்கின்றன. அதுபோன்ற ஒரு படம்தான் நல்லதை நாடு கேட்கும். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த காட்சிகளை இடையிடையே சேர்த்து, ஹீரோவாக நடித்தார் ஜேப்பியார். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் டைரக்ஷன் ஜேப்பியார் என்றே டைட்டிலில் காண்பித்தனர்.

My Principle - The MGR is God-jpr


அந்தப்படத்தில், எம்.ஜி.ஆர். பாணியில் “அண்ணன் சொல்லுறத கேட்டு நடந்துக்கிட்டாலே வாழ்க்கை நல்லாயிருக்கும்.” என்று தனக்கு ஜோடியாக நடித்த ரேகாவிடம் பேசுவார் ஜேப்பியார்.  “லட்சியத்துக்காக என் உயிரையும் பொருட்படுத்தாமல் வாழ்ந்துக்கிட்டிருக்கிறவன் நான்.” என்று தன்னை ஒரு லட்சிய புருஷனாகக் காட்டவும் அவர் தவறவில்லை.

ரயிலில் பச்சை குத்திய அந்த முதியவர்  ‘நான்-ஸ்டாப்’ ஆக, ஜேப்பியார் புராணம் பாடிட,  நாம் இறங்க வேண்டிய இடம் வந்தது. போட்டோவோ, பெயரோ வேண்டாம் என்று மறுத்த அவரிடம்,  ‘சரிங்கய்யா.. ஒரு வார்த்தைல சொல்லுங்க.. மொத்தத்துல ஜேப்பியார் எப்படி?’ என்று கேட்டோம். 

பலமாகச் சிரித்துவிட்டு, “இறந்து ரெண்டு வருஷம் ஓடிருச்சு.. அதனால,  அவரைப் பற்றி நெகடிவா எதையும் சொல்ல விரும்பல. சினிமாவுல வேணும்னா சகலாகலா வல்லவன்னு யாரும் பெயர் எடுத்திருக்கலாம். நிஜத்துல ஜேப்பியார் ஒரு சகலகலா வல்லவன்னு தாராளமா சொல்லலாம். அந்த அளவுக்கு நெறய சாதிச்சிருக்காரு.” என்றவரிடம்,  வணக்கம் கூறி விடைபெற்றோம்.

 

 

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.