Skip to main content

முதல்வர் குரலில் மிமிக்ரி! லட்சங்களை சுருட்டிய திமுக பிரமுகர்! 

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

Mimicry in the Chief Minister's voice! DMK member who rolled millions!
நாகராஜன்

 

சேலம் உடையாப்பட்டி பாலமுருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர், மார்ச் 21-ஆம் தேதி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தனது தாயார் ஆனந்தி, மனைவி சாந்தி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.

 

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், இதைப் பார்த்து அதிர்ந்துபோய், அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த... விசாரணையில் இறங்கினோம்.

 

இது குறித்து அந்த நாகராஜனிடமே நாம் கேட்டபோது, "சேலம் அம்மாபேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறேன். அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிலருக்கு சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி 67 லட்சம் ரூபாய் வரை வசூலித்தார். அந்தப் பணத்தை என்னிடம் கொடுத்ததாகவும், அதைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு எனக்கும், குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கிறார். அவர் என்னிடம் எந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றேன்'' என்றார் நிதானமாக.

 

Mimicry in the Chief Minister's voice! DMK member who rolled millions!

 

இது குறித்து காவல்துறையின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, ''ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம், இந்த நாகராஜன் கார் ஓட்டுநராக இருந்தார். கிட்டத்தட்ட வலதுகரம் போல செயல்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மிமிக்ரி ஆர்டிஸ்டை வைத்து, விஜயகுமாரின் செல்போனுக்கு தளபதி ஸ்டாலின் குரலில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தொண்டர்களுக்கு தொப்பி, டீஷர்ட், கரை வேட்டி, சேலைகள், பேட்ஜ்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் அதற்கான செலவுகளைப் பார்த்துக் கொள்ளுமாறும் பேசியுள்ளார். தளபதியே சொன்ன பிறகு தட்ட முடியுமா? அதனால் மேலே சொன்ன செலவுகளுக்காக 67 லட்ச ரூபாயை ஏற்பாடு செய்து, நாகராஜனிடம் கொடுத்து, அந்த வேலைகளை ஒப்படைத்திருக்கிறார் விஜயகுமார். பின்னர்தான் இது நாகராஜன் நடத்திய நாடகம் என்பது விஜயகுமாருக்கு தெரிய வந்திருக்கிறது. அதனால் தனது பணத்தைக் கேட்டு நாகராஜனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்'' என்றவர்கள்,

 

"மோசடி செய்வதில் நாகராஜன் ஜெகஜ்ஜால கில்லாடி. பலரையும் பல வகையிலும் ஏமாற்றி பல லட்ச ரூபாய் வரை சுருட்டி இருக்கிறார். இதன்மூலம் சொந்தமாக மூன்று டாரஸ் லாரிகளை வைத்திருக்கிறார். அந்த லாரிகளில் குட்கா, கஞ்சா கடத்தி வந்து உள்ளூரில் விற்பனை செய்வதாகவும் தெரிகிறது. பணம் கொடுத்தவர்கள் அதைக்கேட்டால் தற்கொலை நாடகம் போடுவார். ஏற்கனவே, இரண்டுமுறை இப்படி தற்கொலை நாடகம் நடத்தியிருக்கிறார்'' என்று நம்மை அதிரவைத்தார்கள்.

 

இது குறித்து அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, ''கட்சிப் பெயரைச் சொல்லி என்னிடம் பணம் மோசடி செய்தது நாகராஜன்தான். அவர் எந்த வகையில் ஏமாற்றினார் என்று சொல்ல விரும்பவில்லை. அவர் நடத்தி வந்த பேக்கரி கடையை என்னிடம் விற்பதாகச் சொன்னார். நானும் பேக்கரியைவாங்க ஒப்புக்கொண்டு, அதற்குரிய தொகையான 67 லட்சம் ரூபாயை செட்டில்மெண்ட் செய்தேன். இடத்திற்கான ஆவணங்களை சரிபார்த்தபோது, அந்த இடத்தின் உரிமையாளர் நாகராஜன் இல்லை என்பதும், தி.மு.க. பிரமுகர் செல்வமணி என்பவர் பெயரில் இருப்பதும் தெரிய வந்தது.

 

அதனால், நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். ஆனால் என்னை ஏமாற்றும் நோக்கத்துடன், என் மீதே பொய்யான புகாரைச் சொல்லி, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக நாடகமாடுகிறார். நாகராஜன் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டதற்கான "புரோ நோட்டு' உள்ளிட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. அரசியலை வைத்து நான் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நாகராஜனின் பொய்யான புகாரால் எங்கள் குடும்பமே நிம்மதி இழந்து தவிக்கிறோம்'' என உடைந்த குரலில் சொன்னார்.

 

நாகராஜன் நடத்தி வந்த பேக்கரி கட்டடத்தின் உரிமையாளரான செல்வமணியோ ''என்னுடைய கட்டடத்தில்தான் அவர் பேக்கரி கடையும், கார் சர்வீஸ் ஸ்டேஷனும் நடத்தி வந்தார். இதற்கே அவர் இன்னும் 2.50 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருக்கிறார். எனக்குச் சொந்தமான ஒரு ஜீப், ஒரு சுமோ கார் ஆகியவற்றை சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம் என்று கூறி வாங்கிச் சென்று, அதை அடகு வைத்து 9 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார்'' என்றார்.


"அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அறிவாலயத்தில் உள்ள "ஜெயமான' ஒருவர், ஐபேக் டீம் ஆட்கள் சிலருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக சக கட்சியினரையே நாகராஜன் நம்ப வைத்திருக்கிறார். இந்த வலையில் அயோத்தியாபட்டணம் விஜயகுமாரும் வீழ்ந்ததுதான் ஆச்சரியம்'' என்கிறார்கள் கட்சியினர்.

 

Mimicry in the Chief Minister's voice! DMK member who rolled millions!
கணேசன்


இதற்கிடையே, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக நாகராஜனை சஸ்பெண்ட் செய்திருக்கிறது தி.மு.க. இந்த வழக்கை விசாரித்து வரும் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கணேசனிடம் கேட்டபோது, "விஜயகுமார் மிரட்டியதாக நாகராஜனிடம் இருந்து இன்னும் எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை. விஜயகுமார் உள்ளிட்ட சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீதுதான் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து உதவி கமிஷனர் நேரடியாக விசாரித்து வருகிறார்'' என்றார்.


தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குரலிலேயே மிமிக்ரி செய்து, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளரிடமே பணம் சுருட்டப்பட்ட விவகாரத்தால், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வே பரபரத்துக் கிடக்கிறது.
 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.