
5 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (23-06-25) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானது. அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் பகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் காடி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கர்சான்பாய் சோலங்கி உயிரிழந்ததால் அந்த தொகுதி காலியானது. குஜ்ராத் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய், தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.கவில் இணைந்தார். இதனால், அந்த தொகுதியும் காலியானது. கேரளா மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர், தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். இதனால், அந்த தொகுதி காலியானது.
இந்த 4 மாநிலங்களில் உள்ள 5 காலியான சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, அந்தந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த 17ஆம் தேதி முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, 5 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில், 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (23-06-25) எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது.