Skip to main content

கோயம்பேடு மார்க்கெட்டை மூன்றாகப் பிரிக்க வேண்டும்! -சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

koyambedu market


கரோனா தொற்று அதி வேகமாகப் பரவியதற்குக் கோயம்பேடு மொத்த வியாபார சந்தையும் ஒரு முக்கியக் காரணம் என்பதால், காய்கறிகள் சந்தையைத் திருமழிசைக்கும், பூ மற்றும் பழம் மார்க்கெட்டை மாதவரத்துக்கும் என இரண்டு பகுதிகளில் தற்காலிகமாக மாற்ற முடிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசு. 
   

இதற்காக நடந்து வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் திருமழிசைக்கு இன்று விசிட் அடிக்கின்றனர். இந்த நிலையில், ’’கோயம்பேடு மார்க்கெட்டை நிரந்தரமாக மூன்றாகப் பிரிக்க வேண்டும்‘’ என்கிற கோரிக்கை சில்லரை வியாபாரிகளிடமும் சமூக ஆர்வலர்களிடமும் எதிரொலிக்கின்றன. இது குறித்து, முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பவும் தயாராகி வருகின்றனர். 
                             

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கண்ணன், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தினமும் வந்து போகிறார்கள். மொத்த வியாபாரிகளின் கூடாரமான கோயம்பேடு சந்தை, சில சங்கங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட 12 நபர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
 

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் அதனைத் தடுப்பதற்காக கோயம்பேடு சந்தையை மாற்றியமைக்க மொத்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அரசு, கோயம்பேடு சந்தையை 3 இடங்களில் பிரித்து வைக்கலாம்; அதற்கு ஒத்துழைப்புத் தாருங்கள் எனச் சொன்னது. ஆனால், மொத்த வியாபாரிகள் ஒத்துழைக்க மறுத்தனர்.  
                            

அதே சமயம், தொற்று வேகமாகப் பரவி வந்ததால், அதனைத் தடுக்கும் பொருட்டு சென்னையில் 4 நாள் முழு ஊரடங்கை அரசு திடீரென அறிவித்தது. ஆனால், கோயம்பேடு சந்தையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், சமூக விலகலை உடைத்தது. இதனால், சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கரோனா பரவியதற்கு மிக முக்கியக் காரணியாக மாறியது கோயம்பேடு சந்தை. 
                            

இதற்கிடையே, காய்கறிகள் மீது செயற்கையான டிமாண்டை உருவாக்கினார்கள். அதாவது, ஏப்ரல் 26 முதல் 29 வரை சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என 24-ஆம் தேதி அறிவித்தது அரசு. கோயம்பேடு மார்க்கெட்டை தூக்கப் போகிறார்கள் என உணர்ந்து அதிர்ப்தியடைந்த மொத்த வியாபாரிகள், காய்கறிகளுக்கும் மளிகைப் பொருட்களுக்கும் செயற்கையான டிமாண்டை அதிகரிப்பதற்காக, 24-ஆம் தேதி விற்கப்பட்ட காய்கறிகளின் விலையைப் பல மடங்குக்கு உயர்த்தி விட்டனர். 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, 25-ஆம் தேதி 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் இப்படித்தான் உயர்ந்தது. இதனால் மக்கள் சொல்ல முடியாதத் துயரத்துக்கு ஆளானார்கள். 
                            

மக்களோடு தினமும் பயணிக்கும் சில்லரை வியாபாரிகள் கூட இந்தத் திடீர் விலை உயர்வில் மிகவும் நொந்து போனார்கள். இதனால் மொத்த வியாபாரிகள் மீது சில்லரை வியாபாரிகள் அதிருப்தியடைந்தனர். ஆனால், அவர்களை எதிர்க்கவும் முடியாமல், மக்களின் கோபத்தைச் சமாளிக்கவும் முடியாமல் திணறினார்கள்.  
 

இந்த நிலையில்தான், கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றுவது என்கிற திடமான முடிவை மொத்த வியாபாரிகளிடம் அரசு அதிகாரிகள் மீண்டும் விவரித்தனர். அதற்கு முழு மனதுடன் ஒத்துழைக்காமல் அரைகுறை மனதுடனே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் மொத்த வியாபாரிகள். நாளை முதல் திருமழிசையில் காய்கறிகள் மார்க்கெட் இயங்கும் எனத் தெரிவிகிறது. 
                          

சென்னை மற்றும் புறநகரில் உள்ள 2 கோடி மக்களுக்குக் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான, குறைந்த விலையில் கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை. இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் மொத்த வியாபாரிகள் மீது அத்யாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிராக 'எஸ்மா, டெஸ்மா' சட்டத்தை எப்படிப் பிரயோகிக்கப்படுகிறதோ அப்படி மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் கிடைக்க மொத்த வியாபாரிகள் தடையாக இருந்தால் அவர்கள் மீது அத்யாவசியச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். 2 கோடி மக்களின் நலன்களுக்காக மொத்த வியாபார சந்தையை ஆட்டிப்படைக்கும் 12 நபர்கள் மீது நடவடிக்கைப் பாய்வது தவறே கிடையாது. 
 

http://onelink.to/nknapp

 

murugan

                                                                  சமூக ஆர்வலர் கண்ணன்
                              

அதே போல, மொத்த வியாபார சந்தையை ஒரே இடத்தில் இருப்பதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. அதனால், கோயம்பேடு மொத்த வியாபார சந்தையை மூன்றாகப் பிரிக்க வேண்டும். கோயம்பேடு தவிர, வடசென்னை பகுதியில் ஒன்றும், வண்டலூர் பகுதியில் ஒன்றும் என மூன்றாகப் பிரிக்கும் போது நிறைய நன்மைகள் உண்டு. மிக முக்கியமாக, கோயம்பேடை மையப்படுத்தி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகளவில் குறையும். இதுகுறித்து, அரசுக்கு கோரிக்கை அனுப்பவிருக்கிறோம்‘’ என்கிறார் மிக உறுதியாக! 


 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.