Skip to main content

அதிமுக - பாஜக கூட்டணியில் சிக்கல்!  ரகசியமாக நடக்கும் பாஜக யுக்திகள்! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

ddd

 

திமுக கூட்டணியில் சீட் விவகாரத்தால் அதிருப்தியைச் சந்திக்கும் காங்கிரஸ் கட்சியைப் போல, அதிமுக கூட்டணியில் அதே அதிருப்தியைச் சந்தித்து வருகிறது பாஜக! இதனால், அதிமுக - பாஜக கூட்டணி இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே, நாளுக்கு நாள் தங்களின் யுக்தியை மாற்றிக்கொண்டு வருகிறது பாஜக. அந்த வகையில் தற்போதைய யுக்தி, அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறலாமா? என்பதுதான். 

 

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் நடக்கும் விசயங்களை நம்மிடம் பகிந்துகொண்ட பாஜக மேலிட தொடர்பாளர்கள், “திமுக கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அமித்ஷாவுக்கு கிடைத்துள்ள சர்வேக்களின் ரிப்போர்ட் சொல்கிறது. அதனால், திமுகவின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என அமித்ஷா விரும்புகிறார். 

 

அதற்காக, அதிமுகவுடன் தினகரனின் கட்சியை இணைக்க வேண்டும் என இபிஎஸ் - ஓபிஎஸ்சிடம் பேசினார் அமித்ஷா. எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், அதிக சீட்டுகள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் எடப்பாடி பழனிசாமியிடமும், அதிமுக பேச்சுவார்த்தை குழுவினரிடமும் விவாதித்தார்கள் தமிழக பாஜக தலைவர்கள். 

 

இதில் பல்வேறு  எண்ணிக்கை விபரங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால், உடன்பாடு எட்டவில்லை. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில், தனக்கு 35 சீட்டுகள் வேண்டும் என உறுதியாகச் சொன்னது பாஜக. ஆனால், அதிமுக தரப்பில் 22 வரை கொடுக்க முன் வந்துள்ளது. இதனை பாஜக ஏற்கவில்லை. இதனால் தற்போது வரை இழுபறி நீடிக்கிறது. 
                  

 AIADMK

 

மீண்டும் 7ஆம் தேதி அமித்ஷா சென்னைக்கு வருகிறார். அதற்குள் எண்ணிக்கையும், தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் பிடிவாதமாக இருக்கிறது அதிமுக. 

 

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, வேறு ஒரு யுக்தியையும் செயல்படுத்த ஆலோசனை ரகசியமாக நடக்கிறது. அதாவது, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக - தேமுதிக - தினகரனின் அ.ம.மு.க. மற்றும் சமுதாய அமைப்புகளான சில கட்சிகள் ஆகியவற்றை இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது.

 

இப்படி பாஜக தலைமையில் கூட்டணி உருவானால், அதிமுக அமைச்சர்கள் பலருக்கும் சட்டரீதியிலான சிக்கல்கள் உருவாகும். சிலர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேசமயம், பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சீட் எண்ணிக்கையும் தொகுதிகளும் கொடுக்க அதிமுக சம்மதித்து, அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டால், தினகரன் கட்சியைத் தேர்தலில் போட்டியிட வைக்காமல் இருக்க தினகரனுக்கு அழுத்தம் தரப்படும். 

 

பாஜகவின் அந்த யோசனையை தினகரன் ஏற்று, தேர்தலை அவர் புறக்கணித்தால், அதற்குப் பிரதிபலனாக, தேர்தல் முடிந்ததும் சசிகலா - தினகரன் தலைமையின் கீழ் அதிமுகவைக் கொண்டு வர பாஜக உதவி செய்யும் என்கிற ஆலோசனையையும் பாஜக மேலிடம் விவாதித்துள்ளது. 

 

அதனால், அதிமுக தலைமையின் முடிவுகளைப் பொறுத்தே இந்த ஆலோசனையில் எதை நடைமுறைப்படுத்துவது என்று ஓரிரு நாளில் பாஜக தலைமை முடிவு செய்யும்” என ரகசியமாக நடந்து வரும் யுக்திகளை விவரிக்கிறார்கள் பாஜக மேலிட தொடர்பாளர்கள்.

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.