Skip to main content

கலைஞரின் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள்... அது என்ன தெரியுமா..?

Published on 27/07/2019 | Edited on 27/07/2019


எழுத்தாளர், பேச்சாளர், படைப்பாளி, வசனகர்த்தா, பாடலாசிரியர், அரசியல் கட்சி தலைவர் என்று பல முகத்தினை உடைய முன்னாள் திமுக தலைவர் கலைஞர்,  50 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில், 1969 ஆம் ஆண்டு ஜூலை 27ம் நாள் திமுக தலைவராக பொறுப்பேற்றார். 1957 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு முதன் முதலாக குளித்தலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றார் கலைஞர். அப்பொழுது அவருக்கு வயது 33. அவர் இறக்கும்போது அவருக்கு வயது 95. அப்பொழுது அவர் திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். கிட்டதட்ட 62 ஆண்டுகாலமாக அவர் சட்டப்பேரவை உறுப்பினர். தோல்வியோ சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 60 ஆண்டுகால இந்திய அரசியலில் இருந்தார் என்றால், அவர் இவர் ஒருவர் மட்டுமே.

 

 karunanidhi 50 years completed as dmk leader



இதை இங்கு சொல்லவும் காரணம் உண்டு. தமிழகத்தின் பொற்கால ஆட்சியை கொடுத்ததாக கூறப்படும் காமராஜர் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார். தமிழ் தாயின் தலைமகன் என்று சொல்லப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களும் 1962 ஆண்டு காஞ்சிபுரத்தில் தோல்வி அடைந்தார். தன்னை இருப்பு பெண்ணாக காட்டி வந்த ஜெயலலிதாவும் 1996 ஆம் ஆண்டு பர்கூரில் தோல்வி அடைந்தார். ஆனால் தமிழக மக்கள் கடந்த 60 ஆண்டுகாலமாக தேர்தலில் பங்கெடுத்த அவரை, ஒருமுறை கூட தோல்வி அடைய செய்ததில்லை. அவர் தலைமையிலான திமுக படுதோல்வி அடைந்த 1991 ஆம் ஆண்டு தேர்தலிலேயே கூட அவர் துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது வாழ்வே சுவாரசியம் நிறைந்தது என்றாலும், சில வரலாற்று தருணங்களை மீண்டும் நினைவு கூறுவது தவறாகாது. கலைஞரின் நகைச்சுவை என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த ஒன்று.

ஒருமுறை சட்டமன்றத்தில் ஒருகாரசார விவாதம் நடைபெற்று வந்தது. ஒரு எதிர்கட்சி உறுப்பினர் கும்பகோணம் கோயில் குளத்தில் முதலை உள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கு அரசாங்கம் என்ன சொல்கிறது? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை அந்த உறுப்பினர் முன் வைத்தார். உடனடியாக கலைஞர் எழுந்தார். அவர் முதல்வராக இருந்த சமயம் அது. மாண்மிகு உறுப்பினர் முதலையை ஏன் போட்டீர்கள் என்று கேட்கின்றார். அவருக்கு நான் பதில் சொல்ல கடமைபட்டுள்ளேன். அரசாங்கம் 'முதலை' தான் போடமுடியுமே தவிர முதலையை போட முடியாது என்று கூறினார். கேள்வி கேட்ட எதிர்கட்சி உறுப்பினரும் அவரின் பதிலை கேட்டு அவர் சிரித்து விட்டார்.

 

 

 karunanidhi 50 years completed as dmk leader


ஒருமுறை இந்து என்றால் திருடன் என்று ஒரு அகராதியில் கூறப்பட்டுள்ளதாக கலைஞர் பொதுக்கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா முழுவதும் சங்பரிவார் அமைப்புகளிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. தமிழகத்தில் போராட்டங்களும் நடந்தன. அப்பொழுது வட மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் கலைஞரின் தலையை சீவி விடுவேன் என்று கூறினார். இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் உங்களின் தலையை சீவி விடுவதாக சாமியார் ஒருவர் கூறியுள்ளாரே. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பை போல ஒரு பதில் கலைஞரிடம் இருந்தது வந்தது. நானே என் தலையை சீவி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவருக்கு தான் ஒரு வாய்ப்பை வழங்கி பார்ப்போமே என்று. இதைவிட ஒரு சுவாரசிய சம்பவம் நடிகர் விஜய் படத்தின் வெற்றி விழாவில் நடைபெற்றது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி விழாவில் பங்கெடுத்த கலைஞர் பேசும் போது, 'தம்பி விஜய்க்கு லவ் டுடே, எனக்கு லவ் எஸ்டர் டே' என்று கூறினார். அவரின் இந்த கருத்தை கேட்ட விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிரித்த சம்பவங்களும் நிறைய நடந்துள்ளது.

கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டு பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957 ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கரம் வீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார்.

அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் தாரளமாக வெளியே செல்லாம், அதற்காக சபாநாயகரிடம் அனுமதி பெற தேவையில்லை என்று கூறி அமர்ந்தார். அமைச்சரின் இந்த பதிலை கேட்ட ஆசைத்தம்பி செய்வதறியாது திகைத்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுது தான் அந்த குரல் வெளிப்பட்டது, வெளிப்படுத்தியவர் கலைஞர். அமைச்சரின் பேச்சால் கடும் கோபத்துக்கு உள்ளான அவர், சபாநாயகரை பார்த்து கூறியதுதான் உச்சகட்ட அணுகுண்டு தாக்குதல்."மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே, ஆசைத்தம்பிக்கு சிறுநீர் வந்தால், அமைச்சர் சி.சுப்பரமணியன் ஏன் வாய் திறக்கின்றார்"? என்று கூறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். அவரின் இடிமுழக்க கருத்தை கேட்ட சி.சுப்பரமணியன் அவமானத்தால் கூனி குறுகினார். கலைஞரின் பேச்சை கேட்ட காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார் என்றால் அது மிகையல்ல. 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்