Skip to main content

கார்த்தி சிதம்பரத்துக்கு கடிவாளம் போடுங்கள்!  -ராகுல்காந்திக்கு பறக்கும் புகார்கள்!      

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

                             

karthik chidambaram



தமிழகத்தில் மது கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து, கடந்த வாரம் கண்டன முழக்கங்களை தமிழகம் முழுவதும் எழுப்பின திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள்! குறிப்பாக, இந்த கண்டன நிகழ்வில் கலந்துகொண்டு, முழக்கமிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. 


இந்த நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், பூரண மது விலக்கு சாத்தியமில்லை. ஊரங்கின்போது மதுக்கடைகளை மூடியது தவறு. தினமும் 2 மணி நேரம் மது கடைகளை திறந்து வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் என தெரிவித்திருந்தார். 

மது கடைகளுக்கு எதிராக தமிழகமே கொந்தளித்த சூழலிலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இதனை கண்டித்துள்ள நிலையிலும் எடப்பாடி பழனிசாமி அரசின் முடிவுக்கு வலு சேர்க்கும் வகையில் கார்த்தி சிதம்பரத்தின்  மது கடைகளுக்கான ஆதரவு, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. கார்த்தியின் குரல் என்பதை விட சிதம்பரத்தின் வாய்ஸாகவே தமிழக அரசியல் கட்சிகள் விவாதித்துக்கொண்டன. 

 

 


இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவரும் சிதம்பரத்தின் ஆதரவாளருமான கே.எஸ்.அழகிரியிடம், கார்த்தியின் பேச்சை பலரும் சுட்டிக்காட்ட,  நாம் என்ன பண்ண முடியும்? அவர் கருத்து சொல்வதற்கு நாம் கடிவாளம் போட முடியுமா? அவரிடம் கேட்டால், அது என்னுடைய சொந்த கருத்து என சொல்லி நம்மை டென்சன் படுத்துவார் என்கிற ரீதியில் ஆதங்கப்பட்டிருக்கிறார். 

 


தமிழக தாய்க்குலங்கள் கடுமையாக எதிர்க்கும் மது கடைகளுக்கு எதிரான குரலும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவான கார்த்தியின் குரலும் டெல்லி வரை எதிரொலித்த நிலையில், கார்த்தி சிதம்பரத்திற்கு கடிவாளம் போடுங்கள், இல்லையேல் தமிழக பெண்களிடம் காங்கிரஸ் அந்நியப்பட்டுப்போகும்  என ராகுல்காந்திக்கு மின் அஞ்சல் புகார்களை அனுப்பி வருகின்றனர் தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள். 

இதற்கிடையே, தமிழக காங்கிரசின் கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள், கார்த்தியின் மது கடைகள் ஆதரவு குரலை கண்டிக்கும் வகையில் ராகுல்காந்திக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பியுள்ளனர்.