Skip to main content

"பாஜக கூட்டணி... 3 லட்சம் முஸ்லிம் வாக்குகள்" வேலூரில் திக்குதெரியாமல் முழிக்கும் அதிமுக!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. தற்போது அதிமுக சார்பாக களமிறங்கியுள்ள ஏ.சி சண்முகம் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மேலும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் அதிமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டுயிட்டும் வெற்றிபெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த அவர், எம்.ஜி.ஆர் பெயரில் பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். திமுக சார்பாக களமிறங்கும் கதிர் ஆனந்த் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். 

 

  vellore MP election special news


வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அது திமுகவுக்கு சற்று சாதகமான தொகுதியாகவே இருந்து வருகிறது. 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சியிலும் திமுக மண்ணை கவ்விய நிலையிலும், வேலூர் மாநகராட்சியில் மட்டும் சில ரவுண்டுகள் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், அதிமுகவுக்கு தேனி போன்று, திமுகவுக்கு வேலூர் மாவட்டம் என்று திமுகவினர் கூறுவது உண்டு. அந்த வகையில் வேலூர்  நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக-வை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கே.பி குப்பம், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தாலும், மக்களவைக்கு என்று தனியாக இடைத்தேர்தல் நடைபெற்று இல்லை. எனவே, வேலூர் மக்களவையின் தொகுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

 

இதற்கிடையே வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சில சமூகங்களை சார்ந்த மக்களே தேர்தல் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக முதலியார்கள், வன்னியர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் முதலியார் சமூகத்தை சார்ந்த ஏ.சி சண்முகம் அந்த சமூக வாக்குகளை முழுவதுமாக பெற பல்வேறு உத்திகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கூட்டணியில் உள்ளதால் வன்னியர்கள் வாக்குகளும் அதிமுகவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக கிட்டதட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகளை பெற என்ன வழி என்று அதிமுக அமைச்சர்கள் முழித்துக் கொண்டிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூன்று லட்சம் வாக்குகளை கொண்ட முஸ்லிம் சமூகம் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் உண்டு என்று கூறப்படும் நிலையில், பாஜகவுடன் உள்ள கூட்டணி காரணமாக அந்த வாக்குகள் அதிமுகவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று அதிமுக தலைமை நினைப்பதாக சில மாதங்களுக்கு முன்பே ஒரு டாக் ஓடியது. இதுக்குறித்து உளவுத்துறை அளித்த தகவலால் உஷாரான ஆளும் தரப்பு, மாநிலங்களவை தேர்தலில் முஸ்லிம் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை போன்று அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆளும் தரப்பு நினைப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக முஸ்லிம் சமூகத்தை சார்ந்த யாரையாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதா? என்று கேள்வி எழுப்பவும் ஆளும் தரப்பு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.