Skip to main content

நான்தானே உன் புருஷன்? திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்... காசியைப் பற்றி இளம்பெண் கூறிய பரபரப்பு தகவல்! 

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

suji


நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள காசியிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன், "ஏராளமான பெண்கள் என்னிடம் தாராளமாக பழகினார்கள். நானாகச் சென்று எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. யாரையும் திருமணம் செய்தேனா? இந்தக் காசி யாரென்று, என் மீது புகார் அளித்த பெண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்று கூறியதாக நாளிதழ்களில் செய்தி வெளிவர, நம்மைத் தொடர்புகொண்டார் காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.
 


"எனக்கு ஏற்பட்ட கொடுமைதான், மற்ற பெண்களுக்கும் நடந்திருக்கிறது. காசி கைதானவுடன், எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்கிறோம். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்கிறோம். அவனது முகத் தோற்றத்தையும், உடலமைப்பையும் மட்டுமே பார்த்து, காதல் மயக்கத்தில் எங்களைப் பறிகொடுத்தோம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. பெண்களை ஏமாற்றுவதில் அவன் கை தேர்ந்தவன். பேசிப் பேசியே வசியம் செய்துவிடுவான். அவனுடைய பேச்சில்தான் கரைந்து போனோம். ஆண்களின் வசீகரப் பேச்சால் ஈர்க்கப்பட்டு, எங்களைப் போலவே, ஏமாந்து கொண்டிருப்பவர்கள் அனேகம் பேர். காசி போன்ற கபடவேடதாரிகளை அடையாளம் கண்டு, பெண்கள் ஒதுங்கிவிட வேண்டும். போலித்தனமான ஆண்களிடம் பெண்ணினம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் கற்ற வாழ்க்கைப் பாடத்தை, நக்கீரனிடம் சொல்கிறோம்''’ என்றார் குமுறலுடன்.

காசியால் பாதிக்கப்பட்டவர்களின் கசப்பான அனுபவத்தை, தன் கைப்பட எழுதியே தந்திருக்கிறார், அந்தப் பெண்!  அவர் எழுதியதை அப்படியே தந்திருக்கிறோம்…

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி (alias) சுஜி, 26 வயது ஆண், ‘அன்பே சிவம்’ என்ற போர்வையில் ‘Who is perfect, where is perfect = Suji’ எனக் கூறிக்கொள்வான். சமூக வலைத்தளத்தில் (Facebook, Instagram, Tiktok, Dating application) தனது பெயரில் கணக்குகளைத் தொடங்குவான். சமூக வலைத்தளத்தில் பல போலி கணக்குகள் தனது பெயரில் வலம் வருகின்றன எனத் தன்னிடம் பேசும் பெண்களிடம் கூறுவான். "என்னுடைய பெயரில் பல கணக்குகளை எனக்கு வேண்டாதவர்கள் சமூக வலைத்தளத்தில் துவக்கி பெண்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக பல ஆண்கள் இருப்பதில்லை'' என்று கூறுவான்.

தன் தாயின் மீது மிகவும் பாசமாக இருப்பது போன்றும், தன் தந்தை மாதிரி ஒரு நல்ல மனிதரைப் பார்த்ததில்லை எனவும், தன் சகோதரி மீது மிகவும் அன்பு வைத்திருப்பவர் போன்றும், பெண்களைத் தெய்வமாக மதிப்பவர் போன்றும், சமூக சேவை, பெண்ணியம் போற்றுதல், கடவுள் நம்பிக்கை மிக்கவர், நாகரிகம், தமிழ் கலாச்சாரம் ஆகியவற்றை மதிப்பவர் போல, சமூகவலைத்தளங்களில் காட்டிக்கொள்வான்.
 

 

suji


காதலர் தினத்தன்று தனது பெற்றோரின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் upload செய்து, "பெண்களே! உங்களுக்கு ஒருவரைப் பிடித்து இருந்தால் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். உங்கள் பெற்றோரை மிகவும் நேசியுங்கள். ஒரு பையன் உங்களைக் காதல் செய்கிறேன் என்று சொன்னால், உடனே நம்பாதீர்கள். வெளித் தோற்றம் சில வருடங்கள் மட்டுமே, மனதைப் பார்த்து காதல் செய்யுங்கள். காதல் என்பது இதுவே'’ என்று அறிவுரை கூறுவான். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவன் போலவும், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாதவன் போலவும், தன்னை மிகவும் கருணை மிக்கவன் போலவும், பரந்த மனப்பான்மை உள்ளவன் போலவும், சமூக வலைத்தளத்தில் காட்டிக் கொள்வான். பெண்களிடம் கை ஓங்குபவன் ஆண் மகன் அல்ல என்பது இவனது சொற்பொழிவு.

சமூக வலைத்தளங்களில், இவற்றைப் பார்க்கும் பெண்கள் இவனை மிகவும் நல்லவன் என நம்பிவிடுவர். பெண்களிடம் நட்பாக பேச்சு கொடுப்பான். "நான் அவன் இல்லை'’ பாணியில் ஒவ்வொருவரிடமும் தன்னை ஒரு தொழிலதிபர், Pilot, Engineer, Lawyer, ஆழ்கடல் மூழ்காளர், Gym Trainer, Suguna Chicken Dealer என்று அறிமுகப் படுத்திகொள்வான்.

சமூகசேவை, பெண்ணியம் போன்ற கருத்துகளை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவிடுவான். அதில் comment செய்யும் பெண்களின் கருத்துகளுக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்துவான். பெண்களை, வயது வாரியாக, குடும்ப சூழ்நிலை, பணம், அப்பாவித்தனம், தொழில், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் என வகைப்படுத்துவான். மேலும், காதலில் தோல்வியுற்ற பெண்கள், மனதளவில் தனிமையில் இருப்பதாகக் கவலையில் உள்ள பெண்கள் என்றால், வளைப்பது இவனுக்கு மிகவும் சுலபம்.

அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வர, அந்தப் பெண்ணிற்கும் அவள் குடும்பத்திற்கும் உள்ள உறவைப் பற்றி தெரிந்து கொள்வான். இப்பெண்னை பெற்றோர் கண்காணிக்கிறார்களா? தப்பு செய்தால் அடிப்பார்களா? சக பெண்களின் நம்பிக்கையை இழந்தவர்களா? பெண்களிடம் நல்ல நண்பர்களாகப் பழகுகிறார்களா? என ஆராய்வான். மிரட்டினால் அப்பெண்ணோ, அவளது குடும்பத்தினரோ பயப்படுவார்களா? பிரச்சனை செய்வார்களா? என்று கணக்கு போடுவான். 98% அவன் போட்ட கணக்கு, பெண்களைப் பற்றி சரியாகவே இருக்கும்.
 

suji

 


அவர்களது நம்பிக்கையைப் பெற என்ன பேசினால் அந்தப் பெண்ணிற்கு பிடிக்குமோ, அதற்கு ஏற்றாற்போல பேசி, மனதில் இடம் பிடிப்பான். உடல் நலம், மன நலம், பாதுகாப்பு என அக்கறை செலுத்தி, உரிமை எடுத்துக் கொள்வான். அந்தப் பெண்ணிற்கு தாயோ, தந்தையோ இல்லையெனில், அவர்கள் ஸ்தானத்தில் இருந்து அக்கறை காட்டுவது போல பேசி மனதில் இடம் பிடிப்பான். அடுத்த கட்டமாக தொலைபேசி எண் வாங்குவான். தொலைபேசி எண் கொடுக்க மறுக்கும் பெண்களிடம், “என்னிடம் வேலை ரீதியாக உதவி கேட்டு வருபவர்களுக்கு, உங்கள் துறை சார்ந்தவராக இருந்தால், உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள். அவர் குடும்பம் நன்றாக இருக்கும் என்று கூறி தொலைபேசி எண் வாங்குவான்.

சில மாதங்கள் நட்பாகப் பேசும் அவன், ஒரு நாள் அந்தப் பெண்ணிடம் "நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் உங்கள் வீட்டில் பெண் கேட்கிறேன். உங்கள் பெற்றோர் தொலைபேசி எண் கொடுங்கள்'' என்பான். மேலும், "உங்களுடைய கடந்த காலம் எனக்குத் தேவையில்லை. கடந்த காலம் பற்றி யோசித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. இப்பொழுது எப்படி வாழ்கிறோம்? இனிமேல் எப்படி வாழப்போகிறோம்? என்பதுதான் முக்கியம்''’ என்பான்.

இவனுடன் பழகும் பெண்கள், இவனைப் பற்றி விசாரிக்கும் முன்பே, "எனக்கு தொழில்ரீதியாக என் ஊரில் ஆயிரம் எதிரிகள் உள்ளனர். நான்கு மாடி வீடு கட்டியதைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். நிறைய பேர் முதுகில் குத்தியவர்கள். ஊரில் பல பேர் பல விதமாகச் சொல்வார்கள். என்னை நம்பு'' என விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.

சம்மதிக்கும் பெண்களிடம் அடுத்த கட்டமாக, அவர்களுடைய வங்கிக் கணக்கில் தன்னையும் இணைத்துக்கொள்வான். நான் அறிந்த வரையில் காசியின் நயவஞ்சகத்தைச் சொல்லியிருக்கிறேன். எனது புதிய தோழிகள் இருவரது ஆதங்கத்தை, அவர்களின் குரலாகவே எதிரொலிக்கிறேன்.

“நல்ல நண்பனாக சில மாதங்கள் பேசினான். ஒரு நாள், உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றான். பெற்றோர் கைபேசி எண் கேட்டான். காதலிக்க ஆரம்பித்து பின் ஒரு நாள் இரவு நேரத்தில் video call செய்து நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்றான். நான் மறுத்ததற்கு, "நான்தானே உன் புருஷன்? உனக்கும் எனக்கும் மனதளவில் திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்? என்னை நம்ப மாட்டாயா?'' என்று கேட்டான். என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன்தானே என இவனை நம்பி video call செய்தேன். இந்தக் கொடூரன் அனைத்தையும் Record செய்துவிட்டான்.

இவனைப் பற்றி தெரிந்து நான் விலக ஆரம்பித்தவுடன் "என்னுடன் வந்து உல்லாசமாக இரு.. இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் ஆபாச புகைப்படங்களை upload செய்து நீ ஒரு விபச்சாரி என்று கூறுவேன்'' என்றான். இவன் மிரட்டலுக்கு என்னை அடிமையாக்கி பல தடவை உல்லாசமாக இருந்தான். ஒரு கட்டத்தில் இவனை block செய்துவிட என் பெற்றோருக்கு அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என்று மிரட்டினான். நான் மனம் உடைந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டேன்.’

அவன் என்னிடம், "நான் நாடகக் காதல் என்று பொய் சொல்லவில்லை. உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். நீ படித்து முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம். உன் கடந்த காலத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் காயப்படுத்தி இருக்கலாம். இனிமேல் உனக்கு எல்லாமே நான்தான். உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்'' என்றான்.
 

http://onelink.to/nknapp


காதலிக்க ஆரம்பித்த சில நாட்களில் இவனைப் பற்றி தெரிந்து விலக ஆரம்பித்தேன். இவனைச் சந்திக்க மறுத்த போது "இந்த நேரத்தில், இந்த இடத்திற்கு நீ வரவில்லையென்றால், உன் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவேன்'' என்று மிரட்டி, அவனுடைய காரில் என்னை அடித்து துன்புறுத்தி பலாத்காரம் செய்தான். மேலும் “நான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டும், இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் நிர்வாணப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து விடுவேன்'' என்று பயமுறுத்தினான். ஒரு சொட்டுக் கண்ணீர்கூட உன் கண்களில் இருந்து வரக் கூடாது என்று கூறியவன், என் வாழ்க்கையைச் சீரழித்து தினமும் கண்ணீர் விட வைத்து விட்டான்.

தன் மிரட்டலுக்கு பயந்த பெண்களின் Facebook, Instagram கணக்குகளை தன் பெயரில் மாற்றி, அவர்களுடைய பெண் தோழிகளிடம் பேசுவான், காசி. அவர்களிடமும் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நாசப்படுத்துவான். பெண்களிடம் காசி வாங்கும் பரிசுகளை, தன் நண்பனுக்கு “நம் நட்பின் இலக்கணமாக உனக்கு வாங்கி வந்தேன் எனக் கூறுவான். பெண்களை மிரட்ட தன் கைவசம் உள்ள நண்பர்களை இப்படியும் கவனிப்பான். ஒவ்வொரு வரியிலும் வலியையும் இயலாமையையும் வெளிப்படுத்தியிருந்தார், அந்தப் பெண்!


 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார்.