Skip to main content

“மோடி வந்து பிரச்சாரம் செய்தும் 167 பூத்தில் சிங்கிள் டிஜிட் வாக்கு கூட வாங்காத அண்ணாமலை..” - சிவ ஜெயராஜ் விளாசல்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about annamalai edapadi palanisamy 
சிவ ஜெயராஜ்

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக உதயநிதி பதவியேற்றதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி பதில்கள் கீழே...

 

ஆதாரத்துடன் திமுக மீது ஊழல் புகார் கொடுக்கப் போவதாக அண்ணாமலை சொல்லி வருகிறாரே?

அண்ணாமலை பாஜக தலைவராக இருந்து செய்த ஆக்கப்பூர்வமான விஷயம் என்னவென்று சொன்னால், கே.டி.ராகவன் வீடியோ வந்தது, டெய்சி - திருச்சி சூர்யாவின் ஆடியோ வந்தது. இது இரண்டு மட்டும்தான் அவர் ஆக்கப்பூர்வமாக செய்த விஷயம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் மாற்றுக்கருத்து உள்ள அரசியல்வாதிகள் எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டோம். ஆனால், அண்ணாமலை அரசியல் அவமானம். கோவையில் கார் வெடிப்பு பிரச்சனை நடந்தபோது ஆறுதல் சொல்லாமல், முருகன் கோவிலில் படிக்க வேண்டிய கந்தசஷ்டி கவசத்தை சிவன் கோவிலில் படித்தார். எதை, எங்கே என்று, அந்த அடிப்படை அறிவு கூட அவரிடம் இல்லை.

 

கோவை சம்பவ இடத்திற்கு சென்று குண்டூசிகளும் ஆணிகளும் கீழே கிடந்ததை வைத்து இது குண்டுவெடிப்பு என்றார். உங்களிடம் ஆதாரம் கிடைத்திருந்தால், அதனைக் கொண்டுபோய் இன்வெஸ்டிகேஷன் ஆபீசரிடம் கொடுத்திருக்க வேண்டும். மேலும், அவரை சந்தித்து ஏதாவது பேசினாரா? இல்லை. பெங்களூரில் குண்டு வெடித்தபோது அதைப் பற்றி பாஜகவினர் ஏதாவது பேசினார்களா? ஐபிஎஸ் பணியில் இருக்கும்போது தன்னை பிரௌட் கன்னடியன் என்று சொல்லிக்கொண்டார். அதுதான் இன்னும் அவர் மனதில் உள்ளது. பெங்களூரில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் எல்லாம் கோவை நோக்கி வருகிறது. கோவை இன்னொரு ஹைடெக் சிட்டி ஆகிறது. அதை உடைக்க வேண்டும் என்று ப்ரௌட் கன்னடியன் அண்ணாமலை திட்டமிட்டுப் பரப்பிய நாடகம்தான் அது.

 

மூன்று மாதங்களுக்கு முன்பு வந்து சென்ற பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என்று சொன்னால்... பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு தேசியப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் வருகிறது. அப்படியானால், அமித்ஷாவை நோக்கி சவால் விடுகிறார் என்றுதான் நான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு தைரியம் அண்ணாமலைக்கு வந்துவிட்டதா?

 

ஆளுநரே தேவையில்லை என்பவர்கள் அமைச்சராகப் பதவியேற்க மட்டும் ஆளுநர் தேவையா என அண்ணாமலை கேள்வி எழுப்புகிறாரே?

கவர்னர் என்று ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது அவரிடம்தான் பதவியேற்க வேண்டும். அப்படி ஒருவர் இல்லை எனும்போது, நாங்கள் தலைமை நீதிபதியிடம் போய் பதவி ஏற்றுக்கொள்வோம். கவர்னர் என்ற பொறுப்பைத்தான் பார்க்கிறோம். கவர்னருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட வாய்க்கால் வரப்புத் தகராறு என்று எதுவும் இல்லை. சென்னா ரெட்டி கார் மீது கடப்பாரை விட்டு, ராஜ்பவன் மின்சாரத்தைக் கட் செய்த காட்டுவெறி அதிமுகவின் கூட்டணியாக உள்ள பாஜகவா எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது.

 

திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் இனி அரசியல் களம் என்று அண்ணாமலை சொல்கிறாரே?

சிலுவம்பாளையம் பழனிசாமிதான் பதில் சொல்லவேண்டும். அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். 65 எம்எல்ஏ வைத்துக்கொண்டு ஆளுநரைச் சந்தித்துவிட்டு நான்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பேட்டி கொடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார். அவர் கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்களே அவரை எதிர்க்கட்சித் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக  கூட கூட்டணி இருந்த யாராவது வந்து நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொன்னார்களா. அண்ணாமலை தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க இப்படிப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அண்ணாமலைக்கு மோடி வந்து இரண்டு முறை பிரச்சாரம் செய்தபோதிலும் 167 பூத்தில் சிங்கிள் டிஜிட் வாக்குகூட வாங்கவில்லை. ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன அண்ணாமலை தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்கிறார். டெபாசிட் கூட வாங்காத அவர் பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடிப் போட்டி என்கிறார்.

 

உங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் துரைமுருகனே தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்கிறாரே?

வீட்டுக்குள்ள பாம்பு வந்துரும். கம்பு எடுத்து வைனு சொல்ற மாதிரி ஒரு எச்சரிக்கைதான் இது. ஆனால், அவங்க பூத் கமிட்டி கூட அமைக்க முடியல. நாங்கள் பூத் கமிட்டி அமைத்து விட்டோம். திமுகவில் பிரச்சார வியூகம் எல்லாம் ஆரம்பித்து விட்டோம். அவங்களால என்ன பண்ண முடிந்தது. ரெண்டு பேருக்கும் உட்கட்சி பிரச்சனை இருக்கிறது. அதிலிருந்து காத்துக்கொள்ள அவர் இப்படிப் பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு நான்காக உள்ள கட்சி ஐந்தாக ஆகக்கூடாது என்ற கவலை உள்ளது.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.