Skip to main content

“இப்போ வெளிச்சமாதானே இருக்கு, இருட்டு பத்தி ஏன் யோசிக்குற?”-இந்தப் படத்தின் கதை #1

Published on 19/09/2019 | Edited on 19/08/2021

 

கரைந்துகொண்டிருக்கும் ஒளிக்கீற்றை ரசித்தபடி அறையின் ஜன்னலோரத்தில் உறைந்திருந்தது எனது மாலை நேரம். நாள்முழுவதும் வீட்டில் நிலைகொண்டிருந்த நிசப்தம் மெல்ல கலைந்து சிறுவர்களின் உற்சாக கூச்சல் கவனத்தை ஈர்க்க தொடங்கியது. வயலை உழுது, வரப்புக்கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைக்க வைத்திருக்கும் சிமெண்ட் செடிகளில் ஒன்றுதான் எங்கள் வீடு. ஊருக்கு வெளியே புதிதாக உருவாகும் நகர் என்பதால், பெரும்பாலும் வீட்டின் முன்பக்கம் 200மீ தொலைவிலுள்ள, தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருக்கும் தனியார் பேருந்துகளையும், பின்பக்கம் சமதொலைவிலுள்ள கீழத்தெரு சிறுவர்களையும் அன்றி எங்கள் அமைதியை கலைக்கிற புறக்காரணி வேரேதுமில்லை. அவ்வப்போது தொல்லையாக தெரிந்தாலும், நீங்கள் தனித்து வசிக்கவில்லை என தைரியம் சொல்வதும் இவைதான். 

 

Story behind this photo!


 

“கீழத்தெரு வாய்க்கால தண்ணி வந்துருச்சு போல, முன்னாடியெல்லாம் வருஷத்துல ரெண்டு மூணு மாசம்தான் தண்ணி இல்லாம இருக்கும். இப்பொ ரெண்டு வருஷம் கழிச்சு அதிசயமா இந்த கம்மாய்க்கு தண்ணி வந்துருக்கு” என துவங்கி அம்மா அவளின் சிறுவயது கதைகளை பேசிக்கொண்டிருந்தாள். என் சிந்தனை எப்போதோ வாய்க்கால் கரைக்கு சென்றுவிட்டது. “நல்லாதா இருக்கும், ஃபோட்டோ எடுக்கலாம். ஆனா, இப்பவே 5 மணி ஆகிட்டு, நான் கேமரா எடுத்துக்கிட்டு போறதுக்குள்ள இருட்ட ஆரம்பிச்சுடும், ஃபோட்டோஸ் ஏதும் நல்லா வராது...” உட்கார்ந்த இடத்திலிருந்தே நான் சொதப்பிய ஃபோட்டோக்களை கற்பனையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணன் குறுக்கிட்டான் “இந்நேரம் நீ கேமரா எடுத்துக்கிட்டு கெளம்பியிருப்பியே! ஏன் உட்காந்துருக்க?” “இல்லண்ணா...இருட்டிட்டா  சரியா ஃபோட்டோ எடுக்க முடியாது.” “இப்போ வெளிச்சமாதானே இருக்கு, இருட்ட பத்தி ஏன் யோசிக்குற?”  அடுத்த 5 நிமிடத்தில் நான் வாய்க்கால் கரையில் இருந்தேன். என்னைப் பார்த்தவுடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் “அக்கா வந்துட்டாங்க”என கூச்சல் போட்டு மிக எளிமையாய் அவர்களின் உற்சாகத்தை எனக்குள் கடத்திவிட்டனர். அங்கிருந்த பெரும்பாலான சிறுவர்களுக்கு என்னைத் தெரியும். இதற்கு முன் பலமுறை நான் கீழத்தெருவிற்கு சென்று அவர்கள் விளையாடுவதை  என் கேமரா வழியே ரசித்திருக்கிறேன்.  முன்பே பழகிய தோழியென்ற உரிமையோடு என்மீது தண்ணீரை வாரியடித்தனர். எங்கள் குளியலறையில் வருகின்ற குளோரின் கலந்த நீர் அல்ல அது. அந்த நீரில் பூரிப்பு கலந்திருந்தது, பிரம்மகிரியில் துவங்கி பல தடைகளைத் தாண்டி, சுமார் 800 கி.மீ கடந்து... இது நிலத்தில் மட்டுமே, மேகமாய் எத்தனையோ! மழைத்துளியாய் எத்தனையோ! சுருங்க சொன்னால் வாழ்நாள் சாதனைக்கான விருதுபெற்றவை அந்த நீர் துளிகள். 
 

என் கண்களை விட கேமரா லென்ஸ் அழகையும் அர்த்தங்களையும் அதிகப்படுத்திக் காட்டுவதுண்டு. சிறுவர்கள் நீச்சலடிக்கும் அந்த காட்சியை எனது கேமரா “வெகுநாட்களாய் தரையில் தாகத்தில் தவித்திருந்த மீன்கள், நீரில் விழுந்து உயிர் பெறுகின்றன” என்பதாய் காட்டியது. நானும் நிழற்படவெளியில் நீந்த துவங்கினேன். வாய்க்கால் முழுவதும் சிறுவர்கள் நிரம்பியிருக்க, கரையில் ஒரு சிறுமி சுற்றும் முற்றும் பார்த்தவாறு தயங்கி நின்றாள். அங்கு அவளை தவிர வேறு பெண்கள் இல்லை. ஒருவேளை இந்த சிறுவர்களெல்லாம் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது “உடம்புக்கு எதாவது சீக்கு வந்தா யாரு பாக்குறது” எனவும், 12 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி வீட்டிற்கு செல்லும்போது “ஆம்பள பயலுககூட உனக்கென்ன கும்மாளம் வேண்டிகெடக்கு” எனவும் கண்டிக்கப்பட வாய்ப்பிருக்கும் சமூகத்தில் அவள் தயங்குவதில் ஆச்சரியமில்லை. ஆனால், அது இயல்பானதல்ல. இயல்பு என்னவென்றால், ஓடும் நீருக்கும் உடல்நலக் குறைவிற்கும் ஆண்பெண் வேறுபாடு தெரியாதென்பதும், வாய்க்காலில் கும்மாளம்போட நீச்சல் தெரிந்தால் போதும் என்பதுமே. நான் அங்கேயே இருப்பதை பார்த்த அவள் தயக்கத்திலிருந்து சற்று விடுபட்டாள். யாரும் கவனிக்காத நேரத்தில் நீருக்குள் துள்ளிக் குதித்து நீந்த துவங்கினாள்.  
 

நான்  கேமராவை வெளியில் எடுத்ததுமுதல் அந்த சிறுவர்களுக்கு ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதிலேயே கவனமிருந்தது. கேமராவைப் பார்த்து கத்தியபடி குதிப்பதும், ஒருவர் மேல் ஒருவர் ஏறி நிர்ப்பதும், ஒருவரையொருவர் தூக்கிப்போடுவதுமாய் சாகசங்கள் நடந்துகொண்டிருந்தது. இப்போது அவர்களின் உற்சாகத்திற்கு காரணம் வாய்க்காலில் தண்ணீர் வந்ததாக இல்லாமல் நான் ஃபோட்டோ  எடுக்கிறேன் என்பதாயிருந்தது. ஆனால், என் கேமரா லென்ஸ் பெரும்பாலும் அந்த சிறுமியையே நோட்டம் விட்டது. அவள் இப்போது நீர்வாழ் உயிரியைப்போல் மாறிக்கொண்டிருந்தாள். ஊரிலிருந்து ஒதுக்குப்புறமாக உள்ள கீழத்தெருவின் நடுவில் நீலப் படுதாவால் மூடப்பட்டிருக்கும் அவள் வீட்டையும், அதன் அடுப்படியில் அமர்ந்து அரிசியில் கல்பொறுக்கும் அம்மா, அடுப்புக்கு சுள்ளிகள் வேண்டுமென காத்திருப்பாள் என்பதையும் மறந்து நீருக்கடியிலுள்ள  அதிசய உலகை தேடிக்கொண்டிருந்தாள். என் கேமராவும் அவளையே பின்தொடர நான் திகைத்து நின்றேன். அங்குள்ள எல்லோரையும்விட அவளுக்கு நன்றாக நீந்த தெரிந்திருந்தது. மெதுவான அசைவுடன் அங்கும் இங்கும் சுழன்றும், மல்லாந்து படுத்தவாறு படகுபோல் நீந்தியும், குப்புற படுத்து அசைவின்றி மிதந்தும், டால்ஃபின்கள் போல் துள்ளிக் குதித்தும், நீருக்குள் பின்புறமாக பல்டியடித்தும் அசத்தினாள். ஆனால், இவை எதையும் யாரும் பார்க்கவேண்டுமென அவள் செய்யவில்லை, யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலையும் இருந்ததாக தெரியவில்லை. மடியில் தவழ்ந்து, தோளில் ஏறி, முதுகில் சறுக்கி, காலைப் பிடித்து கீழே தள்ளி, நெஞ்சில் அமர்ந்து, கட்டியனைத்து, முத்தமிட்டு தன் தந்தையின் ஸ்பரிசங்களை வாய்க்கால் தண்ணீரில் அனுபவித்தாள் . 
 

திருவல்லிக்கேணியிலுள்ள மரூஃப் சாகிப் தெருவின் ஒரு முச்சந்தியில் நான் எடுத்த முதல் புகைப்படம் நினைவிற்கு வந்தது. அதற்கு முன்தினம்தான் அண்ணன் எனக்கு கேமரா வாங்கிக்கொடுத்திருந்தான். அன்றிரவு உணவுக்குப்பின் என் அண்ணன் “நீ எந்த மாதிரி ஃபோட்டோஸ் எடுக்க போற? என கேட்டான். “எனக்கு ஸ்ட்ரீட் லைஃப் ஃபோட்டோஸ் எடுக்கதான் ஆசை. ஆனா, பசங்களா இருந்தா வெளிய சுத்தலாம், ரோடுல எப்டிவேணாலும் நின்னு ஃபோட்டோ எடுக்கலாம். எனக்கு அதெல்லாம் முடியுமான்னு தெரியல. சொ, வீட்டுக்குள்ளயே ஃபேஷன் ஃபோட்டோகிராஃபி, செல்ஃப் போட்ரைட் அப்டிலாம் ட்ரை பண்ணபோறேன்” என நான் பேசும்போதே என் தயக்கத்தை அவன் புரிந்துகொண்டான். மறுநாள் காலையில் வாலாஜா சாலைக்கு அழைத்துச்சென்று “போ, உனக்கு எப்டி தோணுதோ அப்டி ஃபோட்டோ எடு. மத்தவங்க உன்ன எப்டி பாக்குறாங்கன்னு கவலபடாத. நல்லா சுத்திட்டு வா. நான் இங்கயே வெயிட் பண்ற” என்றான். நான் புரிந்தும் புரியாதவளாய் எல்லீஸ் ரோட்டின் வழியே நடக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் பிறர் கண்களின் வழியே நான் என்னைப் பார்க்கவே தோன்றியது. அதில் நான் பெண்ணாக, அழகானப் பெண்ணாக, சின்னப் பெண்ணாக இருக்கிற பிம்பங்கள் மட்டுமே தெரிந்தன. கேமராவை உயர்த்தி அதன் லென்ஸ்வழியே  உலகைப் பார்க்கும்போது நான் என்னை ஃபோட்டோகிராஃபராக உணர்ந்தேன். அவ்வாறு கேமரா வழியே பார்த்த உலகில் கால் கடுக்க சுற்றித்திரிந்தேன், கண்டதையெல்லாம் படம் பிடித்தேன். பல தெருக்கள் சுற்றி மீண்டும் அண்ணனிடம் வந்து சேரும்போது இந்த தெருக்கள் இன்னும் நீளாதா என தோன்றிய நினைவுகளை அசைபோட்டவாறு வாய்க்கால் கரையில் ஒரு கல் மீது அமர்ந்தேன். 
 

ஒவ்வொருவராக கரையேற துவங்கினர். எதிர்கரையில் ஒரு பாட்டி கன்றுகுட்டியின் கயிற்றை காலில் மிதித்துக்கொண்டு, மாட்டை வைக்கோலால் அழுத்தி தேய்த்தபடி ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள். இடுப்பளவு சேற்றுடன் வந்த சிறுவன், மண்வெட்டியை கழுவி தோளில் மாட்டிக்கொண்டு கரையேறினான். அவனைக்கண்டதும் கன்றுக்குட்டி முண்டியடித்துக்கொண்டு அவன் அருகில் சென்றது, சட்டென அதன் கழுத்து கயிற்றை பிடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் நடந்தான், பாட்டியும் மாட்டை இழுத்துக்கொண்டு பின்னாலேயே நடந்தாள். அப்படியே சூரிய அஸ்தமனம் துவங்கியது. அவ்வப்போது இவற்றையெல்லாம் எட்டிப்பார்த்த என் கேமரா மீண்டும் அந்த சிறுமியிடம் திரும்பியது. பெரும்பாலும் அங்கு குளித்துக்கொண்டிருந்த அனைவருமே சென்றுவிட்டனர். கரையோரத்தில் மெதுவாக நீந்தியபடி அவள் நீரின் ஓட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். குளித்தது போதும் என ஓரடி மேலேறி மீண்டும் வாய்க்காலில் குதித்தாள். நீரைவிட்டு வெளியேறி மீண்டும் நிலவாழ் உயிரியாவதில் அவளுக்கு தயக்கம் வந்திருந்தது. கரையைப் பிடித்துக்கொண்டு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டாள். “யெடியே ரோசா...சிறுக்கி, யெங்கடி இருக்க...” தெருவிலிருந்து அவள் அம்மா பெரம்புடன் வந்துகொண்டிருந்தாள். இதற்குமேல் என்ன தயக்கம்? ஒரே தாவில் கரையேறி ஈர உடம்புடன் சுள்ளிக் கட்டை தோளில் தூக்கிக்கொண்டு எதிர் திசையில் ஓடினாள். இருட்ட துவங்கியது, நான் வீட்டுக்கு வந்து மீண்டும் வெளிச்சம் வரும் என காத்திருக்கிறேன். 

 

அடுத்தப் பகுதி : "நீ இனிமே பக்கத்துல வராத. உன்னாலதான் என் மேலயும் நாறுது - இந்தப் படத்தின் கதை #2

 

Photographer: Alar 
E-mail : alarmelvalliarunagiri@gmail.com

Next Story

ஃப்ரீலான்ஸ் போட்டோகிராஃபர் கொலை; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Freelance photographer incident; Shocked by the police investigation

வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரை ஆர்டர் செய்த இளைஞர்கள், போட்டோ எடுக்க வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்து அவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்குமார் (23). புகைப்படக் கலைஞராக இருக்கும் சாய்குமார் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு போட்டோகிராபி செய்து கொடுக்கும் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.

Freelance photographer incident; Shocked by the police investigation

இந்தநிலையில், சாய்குமாரை தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்து தர வேண்டும் என அழைத்துள்ளனர். கோணசீமா மாவட்டம் ரவுலாபாலம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதாக சாய்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சாய்குமார் விலையுயர்ந்த கேமரா, புகைப்பட உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சாய்குமார் வீடு திரும்பாததால் சாய்குமார் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சாய்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த கேமராக்களை பறித்த கும்பல் அவரை மணல் பரப்பில் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“கல்விக்காக சரஸ்வதி எதையும் செய்யவில்லை” - புகைப்படம் வைக்க மறுத்த ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Action taken against teacher who refused to post photo god Saraswati

ராஜஸ்தான் மாநிலம், பாரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேம்லதா பைர்வா. இவர் கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள லக்டாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதியான குடியரசு தின நாளில், பள்ளியில் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் உள்ளூர் மக்களும் பங்குபெற்றனர்.

அப்போது, விழா மேடையில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் புகைப்படங்களுக்கு அருகே கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் அந்த ஆசிரியரிடம் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் வைத்த கோரிக்கையை, ஆசிரியர் ஹேம்லதா பைர்வா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் எழுந்தது. அந்த சமயத்தில், ‘கல்விக்காக சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பும் செய்யவில்லை’ என்று ஆசிரியர் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், கிஷன்கஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அதில் அவர், “சிலர் பள்ளிகளில் சரஸ்வதி தேவியின் பங்களிப்பு என்ன? என்று கேட்கிறார்கள். சொல்லி இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவரை நான் சஸ்பெண்ட் செய்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்புக்குப் பின், மாவட்டக் கல்வி அதிகாரி பியூஷ் குமார் சர்மா, ஆசிரியர் ஹேம்லதா பைர்வாவை பணி இடைநீக்கம் செய்து அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.