Skip to main content

திகிலை நோக்கி சென்னை மண்டலம்!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
chennai

 

முழு ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிக அளவிலான தளர்வால், சென்னை மண்டலம் பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முழு ஊரடங்கு காரணமாக கரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட தொடங்கிவிட்டது என்று சொல்லும் அரசு, அதேநேரம் 6-ந் தேதி முதல் பெரும் தளர்வுகளையும் அறிவித்தது. 

 

ஆனால் சென்னையின் கரோனா மரண எண்ணிக்கை குறைவதற்கு முன்பாகவே, இங்குள்ள தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நூறு சதவித தொழிலாளர்களுடன் இயங்கலாம் என்றும் அது பச்சைக்கொடி காட்டியது. பொது போக்குவரத்து இன்னும் தொடங்கப்படாத நிலையில் இப்படி அரசு காட்டிய பச்சைக்கொடியால் சென்னை, அம்பத்தூர், பாடி, கிண்டி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் தொழிற்சாலைகள் அனைத்தும் முழு வேகமெடுத்து இயங்க தொடங்கிவிட்டன. 

 

போக்குவரத்து வசதியில்லாமல் தவித்த தொழிலாளர்களிடம் “வேலைக்கு வந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம்” என்று அந்த நிறுவனங்கள் கறாராய் மிரட்டத்தொடங்கியதால், கிடைத்த வாகனங்களில்  ஒருவருக்கு மேற்பட்டோர் அடித்து பிடித்து பயணித்து வேலைக்கு சென்று வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் சென்னை மாநகர சாலைகள் முழுக்க நெரிசலில் திணற தொடங்கிவிட்டது. 

 

தொழில் நிறுவனங்களின் நிர்பந்தத்தால் வேலைக்கு சென்றுவரும் தொழிலாளர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கும் தொற்று பரவும் ஆபத்து மிகுந்திருக்கிறது. இப்போது யார் மூலம் யாருக்கெல்லாம் கரோனா தொற்று பரவுமோ என்ற திகிலோடு தொழிலாளர்கள் வேலைக்கு போய்வருகிறார்கள். 

 

ddd

 

தொழிற்சாலைகள் இயங்கினால் கரோனா பரவுமா? என்று கேட்கலாம். நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது கலெக்டர் இன்னோசென்ட் திவ்யா தலைமையிலான மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில், ஊட்டி அருகே இருக்கும் எல்லநல்லி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில், பணிபுரியும் கோவையை சேர்ந்த பி.ஆர்.ஓ..வுக்கு தொற்று ஏற்பட்டது. அவர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 

ccc

 

அவரால் அவர் வேலை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் ஏறத்தாழ 100 பேருக்கு கரோனா பரவியது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்த தொழிற்சாலை ஊழியர்கள் மூலம் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களால் இந்த தொற்றின் எண்ணிக்கை 155ஐ கடந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை கண்டறிந்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அங்கே திகில் சூழ்ந்திருக்கிறது.

 

admk ministers

 

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடமாடிய தமிழக அமைச்சர்களான கே.பி.அன்பழகனும், தங்கமணியுமே தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கும் நிலையில், எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் இல்லாத  தொழிலாளர்கள், பீதியோடு வேலைக்குப் போய்வருகிறார்கள். அரசின் தளர்வுகளால் தொற்று ஆபத்தை நோக்கித்தான் சென்னை மண்டலம் சென்று கொண்டிருக்கிறது.

 

 

 

 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.