Skip to main content

‘தமிழர்கள் முட்டாள்கள் அல்ல!’ - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த ஜோதிமணி!  

Published on 15/02/2021 | Edited on 16/02/2021

 

dddd

 

நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை (2021 - 2022) மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, ஐந்து நிமிடம் பேச அனுமதி கேட்டார். அப்போது அவையை நடத்திய பாஜகவின் மீனாட்சி லேகி, எல்லோருக்கும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உங்களுக்கு வேண்டுமானால் மூன்று நிமிடங்கள் தருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து தனது நான்கு நிமிட உரையால் அவையைத் தெறிக்கவிட்டார் ஜோதிமணி.

 

“ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்துக்கொண்டிருக்கும் மோடி அரசாங்கம், தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது தன் கடைக்கண் பார்வையைத் தமிழகத்தின் பக்கம் திருப்பும் என நினைத்தோம். ஆனால் தமிழகத்திற்குக் கிடைத்ததெல்லாம் ஒரே ஒரு திருக்குறள் மட்டும்தான். ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலை வசதி செய்வதாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால் மதுரையில் ஒரே ஒரு செங்கல்லை நட்டுவிட்டு, அதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கு இதுவரை கதை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதுபோல்தான் இதுவும். இதையெல்லாம் நம்புவதற்குத் தமிழர்கள் முட்டாள்கள் அல்ல. இதுவரை சொன்ன எதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள், உங்களை நாங்கள் நம்புவதற்கு.

 

ஒரு வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவோம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்று சொன்னீர்கள். செய்தீர்களா? பெண்களை அதிகாரப்படுத்துவோம், பாதுகாப்போம் என்று முழங்கினீர்கள். செய்தீர்களா? அதற்குப் பதிலாக என்ன செய்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். 45 ஆண்டு காலம் இல்லாத வேலைவாய்ப்பின்மையை உருவாக்கியிருக்கிறீர்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் இளம்பெண்களும், இளைஞர்களும் படித்துவிட்டு இருண்டு கிடக்கும் எதிர்காலத்தைப் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் என்ன கொடுத்திருக்கிறீர்கள். 

 

விவசாயிகள், இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்காக உழைத்து, கடன்பட்டு, கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களது விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய உங்களுக்கு மனம் இல்லை. அதற்குப் பதிலாக கருப்புச் சட்டங்களை அவர்கள் மீது திணிக்கிறீர்கள். அவர்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கத் துடிக்கிறீர்கள். ஆனால் உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி வகையறாக்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியை வரிச்சலுகையாகக் கொட்டிக்கொடுக்கிறீர்கள்.

 

ஒரு பெண், அதுவும் தமிழர், நிதியமைச்சராக இருக்கிறார் என்று தமிழச்சியாக நான் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களை அதிகாரப்படுத்தவோ, பாதுகாக்கவோ என்ன செய்திருக்கிறீர்கள்? பெண்களுக்கும், வேலைவாய்ப்பிற்கும் ஏதேனும் சிறப்பு திட்டங்களை அறிவித்திருக்கிறீர்களா? நொடிக்கு நொடி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க, நீதி வழங்க, விரைவு நீதிமன்றங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறீர்களா? பெண் தொழில்முனைவோருக்கு கடன் வழங்க பெண்களாலேயே நடத்தப்படும் வங்கி என்று காங்கிரஸ் அரசு உருவாக்கியது. அந்த வங்கியைக் கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லை. எந்த வங்கியைத்தான் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி, கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு சாதனையை மோடி அரசு நடத்திக் காட்டியிருக்கிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை விரைவில் 1000 ரூபாயைத் தொட்டுவிடும். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கும்போது, விலையைக் குறைக்காமல் வரி என்ற பெயரில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வயிற்றில் ஏன் அடிக்கிறீர்கள்? பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மட்டும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியிருக்கிறீர்கள். எங்கே போனது அந்தப் பணம்? 

 

கல்விக்கோ, மருத்துவத்திற்கோ, விவசாயத்திற்கோ, ராணுவத்திற்கோ நிதிகள் அதிகரிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில்கூட மக்களுக்குக் கொடுக்க உங்களுக்கு மனசு இல்லை. கொரோனா பெருந்தொற்றின்போது மக்கள் வறுமையிலும் பசியிலும் வாடினார்கள்; குழந்தைகள் பட்டினி கிடந்தன; தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள்; ஏழைகளின் வயிற்றிலும் இதயத்திலும் நெருப்பு எரிந்தது. என்ன செய்தீர்கள் நீங்கள்? குடும்பத்திற்கு 500 ரூபாய் கொடுத்ததைப் பிரதமர் பெருமையோடு சுட்டிக்காட்டுகிறார். அதற்காக இந்த அரசு வெட்கப்பட வேண்டும். உங்களுக்கு நாங்கள் 500 ரூபாய் கொடுக்கிறோம். அதை வைத்து நீங்கள் ஆறு மாதம் வாழ்ந்து காட்டுவீர்களா? சொல்லுங்கள். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் எங்கே போனது? உங்கள் ஆருயிர் நண்பர்கள் அதானி, அம்பானி வீடுகளுக்கா? 

 

தமிழக அரசின் கடன் சுமை 4,56,660 கோடியாக உயர்ந்துள்ளது. இது உங்களுக்குக் கைக் கட்டி சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை. இந்தச் சுமையைக் குறைக்க என்ன செய்வீர்கள்? எங்கள் உழைப்பிலும் வியர்வையிலும் உருவான ஜிஎஸ்டி வரியில் கூட தமிழ்நாட்டிற்கு உரிய பங்கான 15,475 கோடி ரூபாயை இன்றுவரை தர மறுக்கிறீர்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உங்களுக்கு அடிபணிந்து கிடக்கிறார். தமிழகத்தை உங்களுக்கு அடிமையாக்கத் துடிக்கிறார். ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டார்கள். உங்களோடு சேர்ந்து அதிமுக அரசும் அரியணையில் இருந்து அகற்றப்படும். அதிமுக அரசு உங்களுக்கு அஞ்சி நடுங்கலாம். தமிழகத்தின் உரிமைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் உரத்தக் குரலில் ஒலிப்போம்.

 

நிதியமைச்சர் ஒரு குறளை மேற்கோள் காட்டினார்கள். அதற்கு முந்தைய குறளை நான் அவர்களுக்கு மேற்கொள் காட்ட விரும்புகிறேன். ‘அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு’ அறம் வழுவாதீர்கள். அண்டை நாட்டைக் கண்டு அச்சப்படாதீர்கள். சீனா என்ற சொல்லை உச்சரிக்கப் பயப்படாதீர்கள்'' என அவையை தெறிக்க விட்டார். ஜோதிமணி பேசும்போது அவையில் இருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவரது பேச்சை உற்று கவனித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது உரையை பாராட்டினர்.

 

 

 

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

தேர்தல் பத்திரம் தொடர்பான பதிவுகள் நீக்கம்; தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின.

நாளை முதல் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது.  இதற்கிடையே, பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் வெளியிட்ட பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது, ‘தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட 2 பதிவுகளையும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் 2 பதிவுகளையும் நீக்க வேண்டும். இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியது . மேலும், சில பதிவுகளையும் குறிப்பிட்டு, அதனை நீக்க வேண்டும் என்றும் எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Congress question to Election Commission for Deletion of Electoral bond related records

இது குறித்து எக்ஸ் நிர்வாகம், இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதிவுகளை தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியி்ல் வெளியிடுவதாகவும் எக்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான சில பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுப்ரியா ஸ்ரீநாத், “சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வது தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கடமையாகும். நடத்தை விதிகளை மீறும் போதும், வெறுப்பூட்டும் பேச்சுகள், மதக் குறிப்புகள் மற்றும் மோசமான மற்றும் மோசமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் உட்பட, அவர்கள் தூக்கி எறியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஆனால், தேர்தல் பத்திரம் தொடர்பான பிரச்சனையை எழுப்பிய ஒரு ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் தேர்வு செய்தது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் என்பது அரசாங்கத்தை மிகவும் சங்கடப்படுத்தும் ஒரு பிரச்சனை. மத்திய அரசுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் விவகாரத்தை, இவ்வாறு ஏன் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.