Skip to main content

அமெரிக்க வன்முறை... அதிபர் பதவியிலிருந்து ட்ரம்பை நீக்க பயன்படுமா இச்சட்டம்?

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

donald trump

 

அமெரிக்க தலைநகர், வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நுழைந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் வன்முறையின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பலியாகியுள்ளனர். இச்சம்பவத்தால், அதிகாரப்பூர்வமாக பைடனை அடுத்த அமெரிக்காவின் அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி ஆறுமணி நேரம் தடைப்பட்டது. ட்ரம்பின் ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து மீண்டும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.

 

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன், நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் ரிபப்பிளிக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதேபோல் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஆதரவாளர்களுக்கு டொனால்ட் ட்ரம்ப், மைக் பைனஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 

வன்முறை தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த நிலையில் அவரது ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகள் 12 மணி நேரத்துக்கு முடக்கப்பட்ட நிலையில், ட்ரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கு 24 மணி நேரத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் ஆதரவாளர்களின் இந்தச் செயலால், ஜனநாயகம் படிப்படியாக அழிந்துவருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வன்முறைக்கு ஆரம்பப்புள்ளியாக இருப்பவர் ட்ரம்ப். தன்னுடைய ஆதரவாளர்களை நாடாளுமன்றம் இருக்கும் ‘கேபிடல் ஹில்லுக்கு வந்து போராடுங்கள்’ என்று முதலில் கூறியவர் ட்ரம்ப்தான். அதனைத் தொடர்ந்து ட்ரம்பின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகளைப் பதிவிட்டு வந்தனர். அதன்பின்னர்தான் கேபிடள் ஹில்லை முற்றுகையிட்டு, செனேட்டினுள் (நாடாளுமன்றம்) சென்று கலவரத்தைத் தொடங்கினார்கள்.

 

இந்நிலையில், அமெரிக்காவின் சட்ட வல்லுநர்கள் பலர் 25வது அமெண்ட்மண்ட்டை பயன்படுத்தி, ட்ரம்பின் அதிபர் பதவியை நீக்குங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். அதேபோல செனேட்டிலுள்ள மற்ற அமைச்சர்களும் ட்ரம்பை நீக்க ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

 

அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்தில் உள்ள 25வது சட்டத் திருத்தம் என்றால் என்ன?

 

இந்த சட்டமானது 1967ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலையைத் தொடர்ந்து இந்த சட்டத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதிபர் எந்த பணியையும் சிறப்பாக பார்க்கவில்லை, ஆனால் அந்த பதவியில் இருந்து விலக மறுப்பது குறித்து சட்டத் திருத்தத்தின் பகுதி நான்கு தெரிவிக்கிறது. அதிபர் உடல் அல்லது மனநோயால் தகுதியற்றவராக இருக்கும்போது அமைச்சரவை விண்ணப்பிக்க வேண்டும் என்று 25 ஆவது திருத்தத்தின் வரைவுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அதிபர் பணிக்கு மிகவும் ஆபத்தாக இருப்பவர்களின் மீதும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தலாம் என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜோ பைடன் அடுத்த அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு, தற்போதைய அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து விலக இன்னும் பதினான்கு நாட்களே உள்ளன. இருந்தபோதிலும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இன்னும் விரைவாக ட்ரம்ப் அப்பதிவியில் இருந்து நீக்கப்படுவார். 

 

அதிபர் ட்ரம்ப்பால் அவருடைய பணிகளைத் திறம்பட செயல்படுத்த முடியவில்லை என்றும் அதனால் அவரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் ட்ரம்பின் அமைச்சரவை முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் 25வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்த முடியும். இதன் பின்னர் ட்ரம்ப், தன்னால் மீண்டும் அதிபர் பணியைத் தொடங்க முடியும் என்று தீர்மானம் செய்ய முடியும். டிரம்பின் இந்த தீர்மானத்திற்கு பென்ஸ் மற்றும் பெரும்பான்மை அமைச்சரவை போட்டியிடவில்லை என்றால், டிரம்ப் மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுவிடுவார். டிரம்பின் அறிவிப்பை அவர்கள் மறுக்கும்போது, இந்தப் பிரச்சினை காங்கிரஸால் முடிவு செய்யப்படும், ஆனால் பென்ஸ் அதுவரை ஜனாதிபதியாக தொடர்ந்து செயல்படுவார்.

 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.