Skip to main content

கூவத்தூரில் யாராவது முடியாது என்று சொன்னார்களா... -சி.ஆர். சரஸ்வதி

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

 

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.


 

 

CR Saraswathi



இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் வரும் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அமமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, 
 

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். இருவரும் ஒற்றுமையாக செயல்படவில்லை. பாஜகவின் தயவால் செயல்பட்டார்கள். அன்று தர்மயுத்தம் நடத்துவதாக நாடகம் ஆடிய ஓ.பி.எஸ். அதிமுகவை உடைத்தார். இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அப்போது எல்லோரையும் ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக்கினார் சசிகலா. அதன் பிறகு இவர்கள் பாஜக சொல்வதை கேட்க ஆரம்பித்தார்கள். ஓ.பி.எஸ்.ஸை துணை முதல் அமைச்சராக்கினார்கள். அதன் பிறகு அதிமுக பைலாவை மாற்றினார்கள். பொதுச்செயலாளர் என்பதை எடுத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கொண்டு வந்தார்கள். 
 

அப்போது அமைதியாக இருந்த ராஜன் செல்லப்பாவுக்கு திடீரென ஞானோதயம் எங்கிருந்து வந்தது. ராஜன் செல்லப்பா மகன் தேர்தலில் தோல்வி அடைந்தார். இவர்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் தெளிவுப்படுத்திவிட்டார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால்தான் இந்த கட்சி இருக்கிறது. 
 

இவர்களுக்கு கட்சியையோ, ஆட்சியையோ நடத்தக்கூடிய திறமைகள், ஆளுமைகள் இல்லை. ஒற்றைத் தலைமை என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள். இரண்டு வருடமாக அமைச்சர்கள் பேசுகிறார்கள். அவர்களை யாரால் தடுக்க முடிந்தது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசினார்களா? ஆட்சியை தக்க வைக்க இப்போது போராடுகிறார்கள். 


 

 

Rajan Chellappa edappadi palanisamy o panneerselvam


 
கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என்று சசிகலா சொன்னபோது, அனைத்து எம்எல்ஏக்களும் ஏற்றார்கள். எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என்று யாராவது சொன்னார்களா? ஆகையால் அதுதான் தலைமை. அன்று சசிகலாவோ, டிடிவி தினகரனோ இல்லையென்றால் இன்று இந்த ஆட்சியே இல்லை. 
 

கட்சித் தலைமைக்கு எதிராக எப்போது குரல் ஒலிக்க ஆரம்பித்ததோ, அது தொடர்ந்து ஒலிக்கத்தான் செய்யும். நிச்சயமாக இரட்டை தலைமை என்பது அதிமுகவில் முடியாது. தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த கட்சியையோ, ஆட்சியையோ வழிநடத்தக்கூடிய திறமையும், ஆளுமையும் இல்லை என்றார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.