Skip to main content

பாலியல் சர்ச்சையில் இருந்து மீண்டு அதிமுக மா.செ. ஆனது எப்படி? 

Published on 28/07/2020 | Edited on 29/07/2020
paranjothi

கடந்த எம்.பி. தேர்தலுக்கு முன்பு திருச்சி மாவட்ட அதிமுகவில் உள்ள அனைத்து முத்திரையர் பிரமுகர்களும் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஒருங்கிணைந்து முத்திரையர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் முக்கிய பொறுப்பு வேண்டும் என முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தனர்.

 

ஆனால் முதல்வர் எடப்பாடியோ உங்களில் ஒருவரை நீங்களே தேர்ந்தெடுங்கள் என்று சொல்ல, அந்த ஒருவர் யார் என்பதை தற்போது வரை யாரை சொல்வது என்கிற குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது.

 

காரணம் இந்த சமூகத்தில் இருக்கும் அதிமுக முக்கிய பிரபலங்கள் கு.ப.கிருஷ்ணன், பரஞ்சோதி, கே.கே.பாலசுப்ரமணியன், எஸ்.எம்.பாலன், வளர்மதி, அண்ணாவி,  சிவபதி, பிரின்ஸ் தங்கவேல், செல்வராஜ்,  பரமேஸ்வரி என பெரிய பட்டியலே உள்ளது. 

 

அதிமுகவை பொறுத்தவரையில் இவர்கள் அனைவருக்குமே ஜெ. பல முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தங்களுடைய பதவியை இழந்திக்கிறார்கள்.

 

இந்த போட்டியில் ஜெ.வினால் நேரடியாக ஒரங்கட்டப்பட்ட என்.ஆர்.சிவபதி, சில காலம் அமைதியாக இருந்துவிட்டு எடப்பாடி வந்தவுடன் அவரும் நானும் மாமா, மாப்பிள்ளை என பேசிக்கொள்ளும் பழக்கம் என பெருமையாக பேசிக்கொண்டு, கரோனோ காலத்திலும்  வீட்டை விட்டு வெளியே வராமல் அடுத்த மா.செ. நான்தான் என புறநகர் அதிமுக அரசியலை அவ்வப்போது குழப்பிக்கொண்டே இருந்தார். 

 

ஆனால் முதல்வர் எடப்பாடி தரப்பில், சிவபதிக்கு மா.செ. வாய்ப்பு எல்லாம் கிடையாது, சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் அதுவரை கட்சியை வளர்க்கின்ற வேலைய பாருங்கள் என்று அறிவுரை கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மா.செ. போட்டியில் பரஞ்சோதி – கே.கே.பாலசுப்ரமணியன், பிரின்ஸ்தங்கவேல் ஆகியோர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். இதில் பரஞ்சோதி ஓ.பி.எஸ். தனி அணி அமைத்தபோது அவருடன் சென்று தீவிர ஆதரவாளர் என்கிற அங்கீகாரம் கிடைத்தது.

 

அதுவும் இல்லாமல் பரஞ்சோதியின் முக்கிய சர்ச்சையாக இருந்த, திருச்சி குமரன்நகரை சேர்ந்த டாக்டர் ராணி, ''அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தன்னை 2வது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனது பணம்  மற்றும் நகையை வாங்கி வைத்துக்கொண்டு திரும்ப தராமல் மோசடி செய்து  விட்டதாகவும்'' புத்தூர் அரசு மருத்துவமனை போலீசில் செய்திருந்தார்.

 

கடந்த 2011ம் ஆண்டு அரசு மருத்துவமனை  போலீசார் பரஞ்சோதி, அவரது உதவியாளர்கள் சம்பத்குமார், செல்வகுமார்  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்பந்தமான வழக்கு திருச்சி  ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-4 கோர்ட்டில் நடந்து வந்தது.  பரஞ்சோதி உள்பட 3 பேரும் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி மதுரை  ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்தனர். 

 

கடந்த 29.9.16 அன்று இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம்  முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, பரஞ்சோதி உள்பட 3  பேரும், டாக்டர் ராணியும் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கில் தாங்கள்  சமாதானமாக செல்வதாக கூறி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். மதுரையில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்துக்கு ரூ.75,000 நன்கொடை செலுத்தும்படி ஐகோர்ட் உத்தரவிட்டது. நன்கொடை செலுத்தப்பட்டதை தொடர்ந்து  பரஞ்சோதி, சம்பத்குமார், செல்வகுமார் ஆகிய 3 பேர் மீதும் திருச்சி  கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்திலே வாபஸ் பெறப்பட்டதால், பாலியல் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு, பரஞ்சோதிக்கு மா.செ. வாய்ப்பு கிடைத்துள்ளது. 

 

கடந்த முறை 2012 ஆண்டு நடைபெற்ற மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கே.என்.நேருவுக்கு எதிராக நின்று வெற்றிபெற்ற அனுபவம், அவருக்கு கூடுதல் அங்கீகாரத்தை கொடுத்ததால் இந்த பதவி கிடைத்துள்ளது. 

 

மண்ணச்சநல்லூர், முசிறி, ஶ்ரீரங்கம் ஆகிய தொகுதிகள் உள்ளடக்கியது. இதில் வளர்மதி ஏற்கனவே ஶ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் மீண்டும் அந்த தொகுதி கேட்க வாய்ப்பு இருக்கிறது. வளர்மதி அரசியலில் பரஞ்சோதிக்கு ஜூனியர் என்பதால் தற்போது ஶ்ரீரங்கம் தொகுதி யாருக்கு என்பதில் பயங்கர போட்டி ஏற்பட்டுள்ளது.

 

அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற்றதால் தற்போதே அதிமுக தேர்தல் களம் சூடுபறக்க ஆரம்பித்துள்ளது. 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.