Skip to main content

''பல மைல்களுக்கு அப்பால் உறவுகளைப் பிரிந்து வாடுகிறேன்'' - ப்ருத்விராஜ் ஏக்கம்!

Published on 15/04/2020 | Edited on 15/04/2020

ப்ளெஸ்ஸி இயக்கத்தில் ப்ருத்விராஜ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் மலையாளத்தில் உருவாகும் படம் 'ஆடுஜீவிதம்'. பெனியமின் என்ற எழுத்தாளரால் உருவான ஆடுஜீவிதம் என்ற பிரபல நாவலை மையமாக வைத்துதான் இப்படம் உருவாகி வருகிறது. கேரளாவைச் சேர்ந்த நஜீப்என்பவர், அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்து அரபு தேசம் செல்கிறார். ஆனால், அங்கு அவர் கொத்தடைமையாக்கப்பட்டு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, அங்கிருந்து எப்படித் தாயகம் திரும்பினார் என்பதுதான் கதை. இதில் நஜீப் கதாபாத்திரத்தில் ப்ருத்வி ராஜ் நடிக்க, சவுண்ட் டிசைனராக ரஸுல் பூக்குட்டி பணியாற்ற, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பல வருடங்கள் கழித்து மலையாள சினிமாத்துறையில் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைகிறார்.

 

bcb


 
இப்படத்தின் ஷூட்டிங் ஜோர்டான் நாட்டிலுள்ள வாடிரம் பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. கரோனா அச்சத்தால் ஜோர்டான் அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இப்படக்குழு இந்தியாவுக்கும் திரும்ப முடியாமல், ஷூட்டிங்கும் எடுக்க முடியாமல் பாலைவன டென்ட்களில் சிக்கித்தவித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் ப்ளெஸ்ஸி, தன்னுடன் இருக்கும் படக்குழுவைச் சேர்ந்த 58 பேரையும் மீட்கக்கோரி கேரள இயக்குனர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் ஒப்படத்துள்ளனர். 

nakkheeran app



இந்நிலையில் தற்போது அம்மா நடிகர்கள் சங்கம் வழியாக நடிகர் மோகன்லால், கேரள முதலமைச்சர் கவனத்திற்குச் எடுத்து சென்றிருப்பதால், அதை மத்திய அரசின் கவனத்துக்கு முதல்வர் எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால், ஜோர்டன் நாட்டு அரசாங்கமோ, இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இப்போதைக்கு விமானம் எதையும் அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளது. இதனால் மலையாளப் புத்தாண்டான நேற்று, படப்பிடிப்பு இன்றி ஹோட்டலில் தவித்து வரும் ப்ருத்விராஜ் தன் குடும்பத்தை குறித்து ஏக்கத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''கடந்த ஆண்டு புத்தாண்டு நாளில் மனைவி மற்றும் உறவுகளுடன் அற்புதமான மதிய விருந்தை ருசித்தேன். ஆனால், இந்த ஆண்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளைப் பிரிந்து வாடுகிறேன். இருப்பினும் உறவுகளுடன் விரைவில் ஒன்றிணையும் காலம் ஒன்று வரும்” என்று பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்