Skip to main content

பாடகி சுசித்ரா பேசத் தடை - நீதிமன்றம் அதிரடி

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
suchithra karthik kumar issue case

பிரபல வானொலி தொகுப்பாளினியாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் துணை நடிகர் கார்த்திக் குமாரை 2005ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்தார். அதே ஆண்டு இவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கோலிவுட் நடிகர்கள் பார்டி செய்யும் புகைப்படங்கள் வெளியானது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்பு அதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனச் சுசித்ரா தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து அவ்வப்போது நேர்காணலில் பல்வேறு அதிர்ச்சிக்குள்ளான தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஒரினச்சேர்க்கையாளர் எனக் கூறியிருந்தார். இது பரபரப்பை உண்டாக்க, தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் படமாட்டேன் எனக் கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார். 

suchithra karthik kumar issue case

இதையடுத்து கர்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பட்டியலின பெண்கள் குறித்து சர்ச்சையாக அவர் பேசியது போல் இடம் பெற்றிருந்தது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவிக்க அந்த ஆடியோ, தான் பேசியதில்லை எனக் கார்த்திக் தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் மீது அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தேசிய பட்டியலின ஆணை இயக்குநர் ரவிவர்மன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி.க்கு, 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கடிதம் மூலம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் குமார், ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் சுசித்ராவிற்கு தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். 

இதையடுத்து சுசித்ரா அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரியும் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகைக்காக ரசிகரைக் கொன்ற நடிகர்; சினிமாவை மிஞ்சும் ரியல் சம்பவம் - கதிகலங்கும் திரையுலகம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

கடந்த ஜூன் 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையா என்ற பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் சித்துரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி என்றும் அவர் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார் என்று தெரியவந்தது.   

இதனைத் தொடர்ந்து ரேணுகா சாமியிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகாறாறு காரணமாக தாங்கள்தான் கொலை செய்தோம் என்று 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு அவரது தோழியுமான நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.   

நடிகர் தர்ஷனுக்கு ஏற்கெனவே விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி அவரை விட்டுப் பிரிந்துசென்றுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயம் நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஏற்பட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தர்ஷனுக்கும், பவித்ரா கௌடாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசப் படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறாராம். 

Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி வரச் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் அவரது ஆட்கள் தர்ஷனின் நெருங்கிய நண்பரான வினய் குமாரின் வீட்டிற்குக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த தர்ஷனும், பவித்ராவும் தங்களது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடுமையாகத் தக்கியுள்ளனர். அதில் ரேணுகா சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தர்ஷன் - பவித்ரா இருவரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாக போலீஸில் சரண் அடைந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் ரேணுகா சாமி உடல் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வினய் குமாரின் காரில் இருந்து ரேணுகா சாமியின் உடல் வீசப்படுவது பதிவாகியுள்ளது. மேலும் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு தர்ஷனும் பவித்ராவும் காரில் வந்துள்ளதையும், இருவரது செல்போன் சிக்னல் அதே இடத்தில் இருந்ததையும் உறுதி செய்த போலீசார் தர்ஷன், பவித்ரா உட்பட 10 பேரைக் கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மறுபுறம் தர்ஷனின் ரசிகர்கள் போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரேணுகா சாமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், தர்ஷன், பவித்ரா மற்றும் அவரது ஆட்கள் ரேணுகாசாமி மீது மின்சாரத்தை செலுத்தி கொடூரமாகக் கொன்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகை ரம்யா, நடிகர் கிச்சா சுதிப் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரேணுகா சாமிக்கு நீதிவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

Next Story

“எய்ம்ஸ் மருத்துவமனையைக் கேரளாவிற்குக் கொண்டு வருவேன்” - சுரேஷ் கோபி

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
suresh gopi speech after his lok sabha elections victory

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், மதியம் 4.30 மணி நிலவரப்படி பா.ஜ.க கூட்டணி 295 இடங்களிலும், இந்தியா கூட்டணி 237 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இதில் மோலிவுட் நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.க. சார்பில் கேரளா திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரை விட 73 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக நாடாளுமன்ற வேட்பாளரை பா.ஜ.க. வென்றுள்ளது. இது குறித்துப் பேசிய சுரேஷ் கோபி, “நான் முற்றிலும் பரவசமான மனநிலையில் இருக்கிறேன். சாத்தியமில்லாத ஒன்று சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி வெறும் 62 நாள் நடந்த பிரச்சாரம் அல்ல, கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஒரு உணர்ச்சிகரமான பயணம். நரேந்திர மோடி எனது அரசியல் கடவுள். நான் வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் நம்பவில்லை. ஒட்டுமொத்த கேரளாவுக்காகவும் பாடுபடுவேன். முதல் விஷயமாக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கேரளாவிற்குக் கொண்டு வருவேன். 

திருச்சூர் தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத்துளில் எனது கட்சியினர் பணியாற்றினர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தாய்மார்கள், சகோதரிகள் எனக்காக பணிபுரிந்தனர். அவர்களில் பலர் மும்பை, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து வந்தவர்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றது” என்றார். 

சுரேஷ் கோபி, கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்து கடந்த 2019ஆம் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.