Skip to main content

“பிரதமர் எந்த அடிப்படையில் அப்படிச் சொன்னார் என்று புரியவில்லை” - கார்கே

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Kharge said I don't understand on what basis the Prime Minister said that

மக்களவைத் தேர்தல் ஒவ்வொரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டங்களாக 430 தொகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (25-05-24) ஆறாம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கடைசி கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (24-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்த மக்களவைத் தேர்தல் மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையிலான தேர்தல். ஏனென்றால், விலைவாசி உயர்வு, அதிக வேலையின்மை காரணமாக மக்கள் இன்று விரக்தியில் இருக்கிறார்கள். மேலும், ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடக்கிறது. 

பா.ஜ.க தன்னாட்சி அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி நிர்வாகத்தை நடத்துகிறது. இதன் காரணமாக, மக்கள் அவர்கள் மீது கோபமடைந்து இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர். அதனால் கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா கூட்டணி, பெரும்பான்மையைப் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. பா.ஜ.கவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் திறன் இந்தியா கூட்டணிக்கு உள்ளது. அனைத்து தொகுதிகளிலும், தோற்கும் பா.ஜ.க, 400 இடங்களுக்கு மேல் பெறுவது பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்படி தெரியும்? உதாரணமாக, கடந்த 2019 தேர்தலில், கர்நாடகாவில் எங்களுக்கு ஒரு இடம் கிடைத்தது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் நான்கு இடங்களில் வெற்றி பெறும் என்று பிரகலாத் ஜோஷி கூறினார். இது அதிகமா? அல்லது குறைவா?

சமீபத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த தெலுங்கானாவில், 2019இல் இரண்டு இடங்கள் கிடைத்தன. அங்கு காங்கிரஸின் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்கும். எங்கள் கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கேரளாவில் அதிக இடங்களைப் பெறுவோம். மகாராஷ்டிராவில் எங்கள் ‘அகாதி’ கூட்டணி 50 சதவீதத்துக்கு மேல் வெற்றிப்பெறும். எல்லா இடங்களிலும் பாஜகவின் இடங்கள் குறைந்து வரும்போது அவர்கள் எப்படி அதிகமாகப் பெறுவார்கள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ராஜஸ்தானில் நாங்கள் பூஜ்ஜியமாக இருந்தோம். இந்த முறை ஏழு முதல் எட்டு இடங்களைப் பெறப் போகிறோம். பாராளுமன்றத்தில் நாங்கள் இரண்டு இடங்களை வெற்றி பெற்றுள்ளோம். அங்கேயும் நம் எண்ணிக்கை கூடும். சத்தீஸ்கரில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் 100 சதவீதம் இருந்த இடங்களிலெல்லாம் அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அவர்கள் எந்த அடிப்படையில் 400 இடங்கள் சொல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியா கூட்டணி, அதிக இடங்களைப் பெறுவதற்கான போதுமான அறிகுறிகள் உள்ளன” எனக் கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“கமல்ஹாசன் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களைக் குறை கூறுகிறார்” - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
JP Nadda alleges Kamal Haasan for kallakurichi issue

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மெளனம் காத்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ‘கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் 56 பேர் உயிரிழந்து, 159 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளின் கொடூரமான காட்சிகள் ஒட்டுமொத்த தேசத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.  மல்லிகார்ஜுன கார்கே, கருணாபுரத்தில் பட்டியலின சாதியினர் அதிகம் வசிக்கின்றனர் என்று  உங்களுக்குத் தெரியும்.  அவர்கள் தமிழ்நாட்டில் வறுமை மற்றும் பாகுபாடு காரணமாக பல சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வளவு பெரிய பேரழிவு வெளிச்சத்திற்கு வந்தபோதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ், இது குறித்து மௌனம் காத்து வருவதைக் கண்டு, ​​​​நான் அதிர்ச்சியடைந்தேன். சிபிஐ விசாரணைக்குச் செல்லவும்,  அமைச்சர் எஸ். முத்துசாமியை அவரது பதவியிலிருந்து உடனடியாக நீக்கம் செய்வதையும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க-இந்தியா கூட்டணி அரசுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.    

இன்று நீங்கள் நியாயமாக நடக்க வேண்டிய நேரம் இது. இன்று தமிழக மக்களும், ஒட்டுமொத்த பட்டியலின சமூகமும் சாட்சியாக உள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்களின் இரட்டை பேச்சு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மக்கள் நீது மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி குறை கூறுகிறார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்திக்கச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் இந்தப் பிரச்சினையில் குரல் எழுப்புவதற்கு தைரியத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.