Skip to main content

நெல்லை இளைஞர் கொலை; 4 பேர் கைது!

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
tirunelveli deepak raja incident police arrested 4 people

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (வயது 35) மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கடந்த 20 ஆம் தேதி (20.05.2024) மதியம் 02:00 மணியளவில் தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கேடிசி நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அதன் பின்னர் தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் ஒன்று தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல்துறையினர் தீபக் ராஜாவின் உடலைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சி ஒன்றில் ஆறு பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 

tirunelveli deepak raja incident police arrested 4 people

இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும் கொலை வழக்குடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த பிறகே தீபக் ராஜ் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இத்தகைய சூழலில் தான் தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சரண் அடைந்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் போலீஸாரிடம் சரணடைந்த 5 பேரை பாளையங்கோட்டை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த முத்து சரவணன், ஐயப்பன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பன, ஐயப்பன் ஆகிய 4 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். 

tirunelveli deepak raja incident police arrested 4 people

போலீசாரின் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இக்கொலைக்கான காரணம் குறித்துத் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரையும் போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை; பெற்றோர் குற்றச்சாட்டு

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Student incident in private college hostel; Accusation of parents

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தாரணி காய்ச்சல் காரணமாக நேற்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விடுதிக்கு சென்றுள்ளார். மேலும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கல்லூரிக்கு செல்லாமல் விடுதியில் தங்கியுள்ளார். தாரணி காய்ச்சல் குறித்து பேராசிரியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுமுறை எடுக்கக்கூடாது நிர்வாகத்திடம் கேட்டு தான் விடுமுறை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். காய்ச்சல் அதிகமாக இருந்ததால் தாரணி விடுதியிலேயே தங்கி உள்ளார். விடுதியில் தங்கியிருந்த சக மாணவிகள் கல்லூரிக்கு சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது அறை உள்புறம் தாழ்பாள் போடப்பட்டு இருந்ததால் இது குறித்து விடுதி சக மாணவிகள் நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி நிர்வாகத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஜன்னலில் துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்ததாக கூறி அவரை படுக்கையில் வைத்திருந்தனர்.

மேலும் இறந்த தாரணியை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தாரணிக்கு காய்ச்சல் காரணமாக தந்தை பாலாஜியிடம் தொலைபேசியில் மதியம் 12 மணி அளவில்  தொடர்பு கொண்டு காய்ச்சலால் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தாரணி தெரிவித்துள்ளார். இதனால் நேற்று மதியம் 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்த தாரணியின் தந்தை பாலாஜி நெடு நேரமாகி அவரது மகளை பார்க்க விடாமல் காத்திருக்க வைத்துள்ளனர். நெடுநேரத்திற்கு பின் ஆறு மணி அளவில்  தாரணி இறந்துவிட்டார் என விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாஜி உறவினர்களுடன் தனது மகளுக்கு நீதி வேண்டும், தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொலை செய்துள்ளனர். மேலும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ கதிரவனின் கல்லூரி என்பதால் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

இறந்த தாரணி ஜன்னல் கம்பியில் துப்பட்டாவைக் கட்டி ஒரு கையில் துப்பட்டாவை கழுத்தை நெரித்து தற்கொலை செய்ததாக விடுதி நிர்வாகம் தெரிவிக்கின்றனர். ஆனால் தாரணியின் கழுத்தில் பெல்டால் கழுத்தை நெரித்து இறந்தது போன்று உள்ளதால் இதற்கு உரிய விசாரணை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மாணவியின் தாய், 'தனது மகளை கல்லூரி நிர்வாகத்தினர் கொன்று விட்டனர். எனது மகளை பறிகொடுத்து விட்டேனே' எனக் கூறி கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

Next Story

தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சம்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 Farmers are afraid of gangs who keep stealing goats

ஈரோட்டில் தொடர்ந்து ஆடு திருடும் கும்பலால் விவசாயிகள் அச்சமடைந்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள கரியாக்கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 22 ஆம் தேதி மாலையில் பட்டியில் ஆடுகளை அடைத்து  வைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் நேற்று முன்தினம் காலை பட்டியில் வந்து பார்த்தபோது அதிலிருந்த 3 ஆடுகள் மாயமாகி இருந்தன. விசாரணையில் மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

அதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த வடிவில் (66) என்பவரது பட்டியில் இருந்த மூன்று ஆடுகளும் திருட்டுப் போயிருந்தது. அடுத்தடுத்து இரண்டு பட்டியில் ஆடுகள் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி விவசாயிகளுடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருட்டுப் போன ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து கால்நடைகள் திருட்டுப் போய் வந்தது குறிப்பிடத்தக்கது.