Skip to main content

"எப்போதும் இளமையாக இருக்க...” - ப்ரைன் ரிசெர்வ் குறித்து நடிகர் ராஜேஷ் பகிரும் ரகசியங்கள்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

"We can memorize so many books"- Actor Rajesh!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு நடிகர் ராஜேஷ் அவர்கள், ப்ரைன் ரிசெர்வ் (Brain Reserve) குறித்து நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "நமது மூளைக்கு வயது இருக்கிறது. 1,35,000 வருடங்கள் உயிருடன் இருந்தாலும், நமது மூளை செயல்படும். 11 கோடி புத்தங்களை மனப்பாடம் செய்யும் அளவுக்கு நமது மூளையில் அளவு உள்ளது. நம்மால் மனப்பாடம் செய்ய முடியும். கிங் பீக் என்ற நபர் சுமார் 22,000 புத்தகங்களை மனப்பாடம் செய்துள்ளார். மூளையில் இருக்கும் நியூரான் செல்கள் தினமும் இறந்துக்கிட்டே இருக்கும். நமது மூளையில் 63,000 கோடி நியூரான்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

 

சிறுவயதில் இருந்து வளர்ந்து வரும்போது, நாம் எதை எடுத்தாலும் ஆர்வமாகப் பார்ப்போம். அவர்களுக்கு ப்ரைன் ரிசர்வ் அதிகமாக இருக்கும். இதனால் குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆனால், வயதாக வயதாக, பார்த்ததைத் திருப்பிப் பார்க்கக் கூடிய அளவிற்கு, அங்கு என்ன டெவலப்மெண்ட் ஆகியிருக்கிறது என பார்க்கக் கூடிய ஆர்வம் குறைந்து கொண்டே வரும். அவர்களின் செயல்பாடுகள் குறைந்து கொண்டே வரும். மூளையில் செல்கள் இறந்து கொண்டே வரும். 80 வயது முதல் 90 வயது ஆகிவிட்டால், உடனே மறதியெல்லாம் வந்துவிடும். கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு நல்ல நீண்ட ஆயுள் இருக்கும். 

 

சிறிய சிறிய வேலை செய்தவுடன் என்னவாகும் என்றால், சுறுசுறுப்பு நன்றாக வரும். எவ்வளவு வேலை செய்கிறோமோ, அவ்வளவுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. ஒரு ஊரில் துணி துவைப்பவர்கள் இருப்பார்கள். அவர்களை நான் பார்த்துருக்கிறேன். அந்த ஊரில் துணி துவைக்கப்போட்டவர்கள் 60 வயது முதல் 70 வயதில் இறந்துவிடுவார்கள. ஆனால், எனக்கு தெரிந்த துணி துவைக்கும் நபர் 95 வயது வரை இருந்தார். அவருடைய மனைவி 88 வயது வரைக்கும் இருந்து, பின்னர் இறந்தார்.  

 

நான் சிறுவயதில் இருந்தே வயதாகக் கூடாது; நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று என்னுடைய மூளையில் இருக்கும். என்னிடம் கேட்பார்கள், சார் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று. அதற்கு, நான் தரையில் அமர்ந்து சாப்பிடுவேன்; மூன்று வேளை சாப்பிடுவேன். தமிழ் உணவைதான் சாப்பிடுவேன். வாரத்திற்கு ஒருமுறை வாழைத்தண்டு சாப்பிடுவது. வாரத்திற்கு ஒருமுறை வாழைப்பூ சாப்பிடுவது. ஆறு சுவை உணவும் தினமும் சாப்பாட்டில் இருக்க வேண்டும். அளவோடு சாப்பிட்டு, வளமோடு வாழ வேண்டும். அப்படி இருந்தால் வயதாகவே ஆகாது. முகம் சுருக்கம் அடையாது என்றேன். 

 

தமிழகம் முழுவதும் என்னுடன் படித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவர், இருவரைத் தவிர எல்லோரும் வயதாகியிருக்கிறார்கள். என்னுடன் இருந்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நான் எனக்கு கடமைகள் அதிகமாக இருப்பதால், வயதாகி திருமணம் செய்துகொள்ள வேண்டும், அதனால் என்னுடைய உடல்நிலையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என இருந்தேன். உடலை சரியாக வைத்துக் கொள்வது, அதற்கேற்ற உணவுகளைச் சாப்பிடுவது ஆகியவை நமது நாட்டில் இருந்தது. ஆனால், தற்போது அவை கெட்டுவிட்டது. 

 

நாம் பழைய உணவு முறைகளைப் பின்பற்றி சாப்பிட்டு, மிகவும் மகிழ்ச்சியாக இருந்து, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு மனவேறுபாடுகள் இல்லாமல் இருந்தால், நிச்சயமாக வயதாவதைத் தள்ளிப் போடலாம். வயதான பிறகு எதற்கு இது எல்லாம் என்று நமது நாட்டில் ஒரு இது உண்டு. நாம் அதை நினைக்கவே கூடாது. அமெரிக்காவில் 90 வயது முதல் 92 வயது வரை உள்ளவர்கள், வாலிபர்கள் போல் உள்ளனர். நமக்கு ஒரு கெட்ட  பழக்கம் உண்டு. வயதாகிவிட்டால் அதற்குரிய சட்டையைப் போட வேண்டும் என்று. செயல்பாடுகள் வேண்டுமென்றால் குறைவாக இருக்கலாம். யோசிப்பதும், நடத்தையும், படிப்பதும் இவைகளை முறையாகப் பின்பற்றினால் ப்ரைன் ரிசெர்வ் அதிகமாக இருக்கும்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.