Skip to main content

மணக்கட்டும் தைப்பொங்கல்! - ஆரூர் தமிழ்நாடன் கவிதை

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

 

Poem for Pongal - aarur thamilnadan

 

 

 

மணக்கட்டும் தைப்பொங்கல்!

 

வெடித்துக் கிளம்பட்டும் 
வீறுமிகும் இளைஞர் படை!
அடித்து முழக்கட்டும்
ஆதிநாள் தமிழ்ப் பறையை!

 

துந்துபி முழக்கத்தில்
திசையெட்டும் அதிரட்டும்
வந்தேறிக் கூட்டமெலாம்
வக்கற்றே  ஓடட்டும்!

தமிழ்நாட்டின் வீரம்
தணியாது பொங்கட்டும்!
தமிழர் இனமானம்
தணலாகித் தங்கட்டும்!

 

காளைகளின் திமிரடக்கும் 
காளையரின் விழிமுன்னே
கோழையரின் நிழல்கூட
குலைநடுங்கித் தெறித்தோடும்!

 

தோழமையாய் வருவோர்க்கு 
நம்மிடத்தில் தோளுண்டு!
வீழவைக்க நினைப்பாரை
வீழ்த்துதற்கும் வாளுண்டு!

 

உலகின் கருவறையாய்
உதித்த இனம் நமதென்னும் 
நிலைத்த புகழுக்கு
நிகராக ஏதுமிலை!

 

ஓசை முளைக்கும் முன்னே
உயிர்த்தமொழி தமிழென்று
ஆசையுடன் கொண்டாடி
அன்புணர்வைப் பொங்கவைப்போம்!

 

கொஞ்சுதமிழ் இசைபாடிக் 
குளிர்ந்துவரும்  இளந்தென்றல்
மஞ்சளிஞ்சிக் கரும்போடு
மணக்கட்டும் தைப்பொங்கல்!

 

- ஆரூர் தமிழ்நாடன்

 

 

Next Story

எந்திரன் கதை திருட்டு வழக்கில் டைரக்டர் ஷங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!

Published on 12/10/2020 | Edited on 13/10/2020
SUPREME COURT

 

டைரக்டர் ஷங்கருக்கு எதிரான "எந்திரன்" கதை திருட்டு வழக்கை ரத்து செய்ய முடியாது என்ற சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஷங்கரின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

 

1996 ஆம் ஆண்டு "இனிய உதயம்" தமிழ் பத்திரிகையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய "ஜுகிபா" கதை வெளியானது. அதே கதை மீண்டும்" தித்திக் தீபிகா" என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்பு தான் ஜுகிபா கதை திருடப்பட்டு எந்திரன் திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

ddd


அதைத்தொடர்ந்து எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன் எந்திரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் டைரக்டர் சங்கர் இருவருக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் எந்திரன் திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் மீதும், படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறன் மீது காப்புரிமை சட்டப்படி புகார் அளித்திருந்தார். 

 

1996 இல் தான் எழுதிய கதையை திருடி எந்திரன் எனும் திரைபடத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம். எனவே இந்த வழக்கில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரை நீண்ட விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போலீசார் இறுதியில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை எழும்பூர் 13 வது நீதிமன்றத்தில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனிப்பட்ட முறையில் கிரிமினல் வழக்காக இயக்குனர் ஷங்கர் மீதும், தயாரிப்பாளரான கலாநிதி மாறன் மீதும் தொடுத்திருந்தார்.

 

ram shankar advocate

                                                         வழக்கறிஞர்  ராம் சங்கர் 

 

அந்த வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரும் எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி 2011ல் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை அடுத்து இயக்குனர் ஷங்கரும் கலாநிதிமாறனும் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு சட்டப்படி செல்லாது நாங்கள் கதையை திருடவில்லை. எனவே அந்த வழக்கு செல்லாது என உத்தரவிட வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முறையிட்டனர்.

 

எழும்பூர் நீதிமன்ற வழக்கிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த வழக்கு கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் 6.6.2019 அன்று நீதிபதி திரு. புகழேந்தி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 

aarur.tamilnaadan

                                                          எழுத்தளார் ஆரூர் தமிழ்நாடன்  

 

அந்த தீர்ப்பில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும்,  இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது எனக் கூறிய நீதிமன்றம் கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டு காட்டி அதன்மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது. அதனால் எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்த  உத்தரவிட்டுள்ளது.

 

கூடுதல் அம்சமாக இயக்குனர் சங்கர் பிரபலமானவர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அங்கு கூட்டம் கூடுவது மற்றும் அலுவலக இடையூறுகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்திற்கு தேவைப்படும்போது மட்டும் அவர் ஆஜரானால் போதும், எல்லா வாய்தாவிற்கும் அவர் ஆஜராக தேவையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

ddd

                                                                      இயக்குனர் சங்கர்

 

இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்க இருந்த நிலையில், கரோனா பேரிடர் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இயக்குனர் சங்கர் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 

 

ddd

 

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் சார்பாக மூத்த வழக்கறிஞர் திரு.பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் டாக்டர்.ராம் சங்கர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். 

 

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் R.F. நரிமன், நவீன் சின்கா, K.M. ஜோசப் ஆகிய மூன்று பேர் அடங்கிய பெஞ்ச் இயக்குனர் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  

 

இயக்குனர் சங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஒரு முறை கூட ஆஜராகவில்லை, இதே எழுத்தாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்துள்ள சிவில் வழக்கில் உயர்நீதிமன்றம் சாட்சியம் அளிக்குமாறு உத்தரவிட்ட பிறகும் சங்கர் ஆஜராகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் விரைவில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Next Story

சென்னை புத்தகத் திருவிழாவில் மூன்று புதிய நூல்கள்! -நக்கீரன் ஆசிரியர் வெளியிட்டார்!

Published on 10/01/2019 | Edited on 10/01/2019


 

​aarurtamilnaadan

 

சென்னை புத்தககத் திருவிழா நக்கீரன் அரங்கில், நக்கீரன் தலைமைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய காலநதி, காற்றின் புழுக்கம், சூரியனைப் பாடுகிறேன் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சி 09.01.2019 புதன்கிழமை மாலை இனிதாய் அரங்கேறியது.

 

aarurtamilnaadan



கவிஞர் ஜலாலுதின் வரவேற்க, கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமையில் முனைவர் நா.நளினிதேவி முன்னிலையில் இதழியல் போராளி நக்கீரன் கோபால் நூல்களை வெளியிட்டார். அதை இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், கவிஞர் அமுதபாரதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

aarurtamilnaadan


 
இந்த நிகழ்வில் இயக்குநர் பிருந்தாரதி, இயக்குநர் ராசி.அழகப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், நடிகர் கணேஷ் பிரபு, தமிழ்த் திரைபடப் பாடலாசிரியர் சங்கத் தலைவர் தமிழமுதன்,  பாடலாசிரியர்கள் அருண்பாரதி, வேல்முருகன்,. பேராசிரியர் ஆதிரா முல்லை, பேராசிரியர் நித்யா, எழுத்தாளர் லதா, ’புதிய தலைமுறை’ சுந்தரபுத்தன் ஆடிட்டர் சந்திரசேகரன் பக்கிரிசாமி, இந்திரஜித், கவிஞர் வீரசோழன் க.சோ.திருமாவளவன்,  கவிஞர் பச்சமுத்து, .கவிஞர் நம்ம ஊர் கோபிநாத், கவிஞர் ராஜ்குமார் கென்னடி, கவிஞர் தயாநிதி உட்பட பலரும் கலந்துகொண்டனர். நக்கீரன் குழுமம் சார்பில் சாருமதி, ராம், பிரசாத் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இலக்கியன் நன்றி நவின்றார்.