Skip to main content

கள்ளமது விற்பனை செய்த நபரால் கொலை செய்யப்பட்ட இளைஞர்! 

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Young man passed away police arrested one

 

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர், வாலிபர் ஒருவரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம், கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்தவர் ஜீவா (25).  தனது நண்பர்களான மணி, விக்னேஷ், பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை பஜனைமட தெருவில் இயங்கிவரும் அரசு மதுபானகடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். கடை மூடியிருந்ததால் அந்த கடையில் உரிமையாளர் உதவியோடு  அவையாம்பாள்புரம்  பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி என்பவர் மதுபான கடைக்கு அருகாமையிலேயே சட்டவிரோதமாக ‌மது விற்பனை செய்து கொண்டிருந்தார். 


அங்கு வந்த ஜீவாவும் அவரது நண்பர்களும் தமிழ்மணியிடம் மது கேட்டபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ஜீவாவை வயிற்றில் குத்தியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஜீவாவின் நண்பர்கள் படுகாயமடைந்த ஜீவாவை  மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜீவா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்மணி என்பவரை பிடித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இறந்த ஜீவாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த நபரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்