![bike mechanic drowned while taking a bath with his friends](http://image.nakkheeran.in/cdn/farfuture/5-nOB8NLJ5Y6YMLbjLDnzxqqiJuVFDrqxNvFs6oK02Q/1715687262/sites/default/files/inline-images/Untitled-11_24.jpg)
கோவை மாவட்டம் அவினாசி, காசி கவுண்டன்புதூர், மகா நகரைச் சேர்ந்தவர் நவீன் (23). டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று நவீன் அவரது நண்பர்கள் கவுசிக், சபரி, அலெக்ஸ், தீபக் ஆகியோருடன் அவிநாசி கோவிலுக்கு சென்று விட்டு ஈரோடு மாவட்டம் கோபி கொடிவேரி அணைக்கட்டு பகுதிக்கு குளிக்க சென்றனர்.
கொடிவேரி அணை பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கொடிவேரி அருகே உள்ள அரசூர் பவானி ஆற்றில் நவீன் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது அவரது நண்பர் தீபக் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் தத்தளித்தார். இதைப் பார்த்து கவுசிக் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீபக் பத்திரமாக மீட்கப்பட்டார். அப்போது பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நவீன் திடீரென மாயமானார். அருகில் இருந்தவர்கள் நவீனைத் தேடி பார்த்தும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவானி ஆற்றில் இறங்கி நவீனை தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் நவீன் உடலை மீட்டனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.