Skip to main content

பிரசவத்துக்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு விவசாய வயலில் குழந்தை பிறந்தது

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுக்காவுக்கு உட்பட்டது கீழ்மிட்டாளம் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த தொழிலாளி 25 வயதான சிலம்பரன். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சோனியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்பு சோனியா மூன்றாவது முறை கர்பமாகியுள்ளார். நரியம்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் செய்துக்கொண்டு வந்தார். 10வது மாதம் நெருங்கிய நிலையில் பிரசவ வலி ஜனவரி 3ந்தேதி காலை தொடங்கியுள்ளது. உடனடியாக நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்துள்ளனர்.

 

The woman who went to the ambulance for childbirth gave birth to a baby in a farm


அங்குள்ள மருத்தவர்கள் பரிசோதித்துவிட்டு உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லச்சொல்லி கடிதம் தந்துள்ளனர். அதோடு அங்குள்ள 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர்க்கு சோனியாவை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர் உறவினர்கள்.

நரியம்பட்டில் இருந்து செல்லும்போது ரகுநாதபுரம் கிராமத்தை நெருங்கியபோது சோனியா பிரசவவலியின் உச்சத்தால் கதறினார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வண்டியை சாலையின் ஓரம் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்ஸ்சில் உள்ள உதவி செவிலியர் சோனியாவுக்கு உதவி செய்துள்ளார்.

இந்நிலையில் நெல் வயலில் வேலை செய்துக்கொண்டுயிருந்த பெண்கள், ஆம்புலன்ஸில் இருந்து பெண்ணின் அழுகுரல் வருவதை கேட்டு ஓடிவந்தனர். பிரசவ வலி என தெரிந்ததும் உடனடியாக அந்த பெண்ணை வண்டியில் இருந்து கீழே இறக்கி வயல் வெளியில் துணியை விரித்து படுக்க வைத்து சுற்றிலும் புடவைகளை தடுப்பாக பிடிக்க வைத்து பழைய கிராம முறைப்படி பிரசவம் பார்க்க தொடங்கினர் சில பெண்மணிகள். சில நிமிடங்களில் அழகான தேவதை போன்ற பெண் குழந்தை பிறந்தது.

தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து எதுவும் இனியில்லை எனச்சொல்லி அப்பெண்மணிகள் மீண்டும் குழந்தையும், தாயையும் தூக்கிச்சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி மீண்டும் நரியப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே அனுப்பிவைத்தனர்.

கடினமான பிரசவம் உடனடியாக மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து செல்லுங்கள் எனச்சொல்லி அனுப்பப்பட்ட இப்பெண்ணுக்கு வயல்வெளியில் ஏதோச்சையாக பிரசவம் நடந்தது, தாயும் சேயும் நலமாக இருப்பதால் பலரின் பாராட்டுக்களை முகம் தெரியாத அந்த பெண்மணிகள் பெற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்