
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள நாவல் மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மலர்(45). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.
மலர், புதுச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு தினசரி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை நாவல் மருதூர் குடியிருப்பு பகுதி அருகே கரும்பு தோட்டத்தில் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடைத்துள்ளார். அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு உடனே கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மலர் கழுத்தில் அணிந்திருந்த தாலி கயிற்றால் அவரது கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தபோது, அது மலரின் உடல் கிடந்த இடத்திலிருந்து நாவல் மருதூர் வரை ஓடி மலரின் வீட்டின் முன்பு நின்றுவிட்டது. இதையடுத்து மலரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மலர் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது கணவர் பாண்டியனிடம் போலீசார் விசாரண நடத்த அவரைத் தேடினர். அப்போதுதான் பாண்டியன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. பாண்டியனை பிடித்தப் பிறகே மலர் கணவரால் கொலை செய்யப்பட்டாரா அல்லது பாண்டியனுக்கு மலர் மரணித்த விஷயமே தெரியாதா? ஒருவேளை பாண்டியன், மலரை கொல்லவில்லை என்றால் மலரை கொன்றது யார் என தெரியவரும்.